553.
|
மாமதின்
மஞ்சு சூழு; மாளிகை நிரைவிண் சூழுந்;
தூமணி வாயில் சூழுஞ்; சோலையில் வாசஞ் சூழுந்;
தேமல ரளகஞ் சூழுஞ் சிலமதி தெருவு சூழுந்;
தாமகிழ்ந் தமரர் சூழுஞ் சதமக னகரந் தாழ. 3 |
(இ-ள்.)
வெளிப்படை. தேவர்கள் தாம் மகிழ்ந்து சூழும்
இந்திர பட்டினமும் தாழும்படியாக, அந்நகரிலே பெரிய மதில்கள்
மேகங்களாற் சூழப்பெற்றிருக்கும்; மாளிகைகள் வரிசைபெற
ஆகாயத்தில் ஓங்கி விளங்கும்; தூய மணிகள் வாயில்களிலே
சூழ்வன; சோலைகளில் மலர்களின் வாசம் மிகுந்திருக்கும்; கூந்தலிற்
றேன்பொருந்திய மலர்களைச் சூழ அணிந்த மதிபோன்ற
முகத்தினையுடைய சில பெண்கள் தெருவிலே சூழ்வர்.
(வி-ரை.)
இப்பாட்டால் நகரச்சிறப் புரைக்கின்றார். மாமதில் -
சோழர்களது தலைநகரங்களில் ஒன்றாதலால் உயர்ந்த மதிலரணை
யுடையது என்பார் மாமதில் என்றார். மதில் மஞ்சு சூழும் என்பது
மேகந் தவழும்படி உயர்ந்த மதில் என்றதாம்.
மாளிகைநிரை
விண்சூழும் - மாளிகைநிரை - வரிசையாக
ஓங்கிய மாளிகைக் கூட்டங்கள். விண் சூழ்தலாவது ஆகாயத்தை
அளாவி நிற்றல். "தவளந்நெடுமாடம், விண்டாங்குவ போலும்மிகு
வேணுபுர மதுவே" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரத்தையும்
அங்கு ஆசிரியர் காட்டிய உட்குறிப்பினையும் இங்கு வைத்துக்
காண்க.
வாயில் தூமணி
சூழும் என மாற்றுக. வாயில்களில் மணிகள்
கட்டியிருக்கும் என்பது. அரசரது தலைநகரமாதலின் வாயிலிலே
ஆராய்ச்சிமணி கட்டுதல் முன்னாள் வழக்கு. திருநகரச் சிறப்புப்
பார்க்க. அநீதி நிகழின் அதனை அறிந்து போக்கி நீதி வழங்கித்
தூய்மை செய்தற் கருவியாதலின் தூமணி என்றார். தூய்மை செய்யும்
மணிகள் இழைத்தவாயில் என்றலுமாம். வாயிலை அழகுபடுத்த
மணிகள் கட்டுதலும் மரபு.
அளகம்
தேமலர் சூழும் சிலமதி என மாற்றிக்கொள்க.
சூழும் - பெயரெச்சம். அமரர் சூழும் நகர் என்றதும் அவ்வாறே
பெயரெச்சம். இப்பாட்டில் சூழும் என்ற ஏனைய எல்லாம்
வினைமுற்றுக்கள். இவ்வாறு ஒரு பாட்டில் சொல்லையே பல
திறப்பட அடுக்கி அமைத்து அணிபெற வழங்குதல் ஆசிரியரது
சிறப்பாகிய அரிய யாப்பியல்புகளில் ஒன்று. 65, 283 முதலிய ஏனை
இடங்களையுங் காண்க.
சிலமதி
- மதிபோன்ற முகமுடைய சில பெண்கள். மதி -
நிறைமதி. ஆகுபெயர்.
தாழ
- கீழ்ப்பட. விரும்ப என்றலுமாம். சூழ்தல் - சுற்றல்;
தங்கல்; ஆராய்தல்;
பரவுதல்; பொருந்தல்; விரும்புதல்.
மகிழ்ந்து தாழ
- என்று கூட்டி உரைப்பதுமொன்று.
இப்பொருட்கு சதமகன் நகரம் மகிழ்ந்து தாழ்வது இக் கருவூரை
ஆண்ட முந்தைச் சோழ அரசராகிய முசுகுந்தச் சக்கரவர்த்தியினாற்
றேவருலகத்தார் பெற்ற உபகாரம்பற்றி எனக் கொள்க.
சதமகன் நகரந்
தாழ - மதில் சூழும்; மாளிகை சூழும்;
வாயில் சூழும்; வாசஞ் சூழும்; மதி சூழும் என முற்கூறிய
ஒவ்வொன்றோடும் கூட்டுக. இக்காரணங்கள் பலவற்றாலும் சதமகன்
நகரம் இதற்குத் தாழ்ந்ததென்பது.
இந்திரன் வேண்டுகோளுக்கிரங்கி
முசுகுந்தர் இந்திரலோகம்
சென்று அவனுக்குப் பகைவனாகிய அசுரனை வென்று அதற்காக
இந்திரனாற் பெற்ற செம்பொற் றியாகேசரைக் கொணர்ந்து
திருவாரூரில் மீளத் தாபித்தார் என்பது புராண சரிதம். இதுபற்றியே
சூரசங்காரத்தின் பின்னர், நன்றி பாராட்டி இந்திரன்
முருகப்பெருமானுக்குத் தன் மகளாராகிய தெய்வயானை
யம்மையாரை மணஞ் செய்வித்தபோது, கருவூரில் அரசாண்ட
முசுகுந்தச் சக்கரவர்த்திக்குத் திருமண அழைப்பு அனுப்பினான்
என்ற சரிதமும் கந்தபுராணத்திற் கேட்கப்படும். இங்குக் றிய
சரிதங்களாலே தேவருலகம் கருவூருக்குக் கீழ்த்தாழ்ந்ததும் அதனை
விரும்பி வாழ்வதுமாம். அன்றியும் இவற்றால் தேவநகரத்தின் மிக்கது
கருவூராம் என நகரச்சிறப்புக் குறித்ததுவுமாம்.
மஞ்சு
சூழும் - தேவருலகத்திலே மஞ்சுகள் இந்திரனது
வாகனமாகிய யன் மட்டும் தந்து சூழ்வன; ஆயின் இங்கு அவை
இந்நகரத்தின் உயர்மதிலின்மேற் சூழ்ந்து தானத்திற்கும், சிறப்புக்கும்,
பூசனைக்கும் உதவின; சோலைவாசம் தேவமலராகிய கற்பகப்
புதுப்பூ மணத்தினை வென்றது; தேவருலகத்தில் தேவரிலொருவனான
சந்திரனொருவனே (வானவீதியில்) விளங்க, இங்குப் பலமதிகள் பல
வீதிகளிலும் விளங்கின எனப் பல வுட் குறிப்புக்களும் காண்க.
சதமகன்
- சதம் - நூறு; மகன் - (மகம் - யாகம்)
யாகங்களைச் செய்தவன். நூறு யாகஞ் செய்த காரணத்தால் இந்திரப்
பட்டம் அடைந்தவன் இந்திரன்; அது அழியக்கூடியது; ஆயின்
இந்நகரத்துள்ளார் அந்த யாகங்களின் மேம்பட்ட
சிவபுண்ணியங்களைச் செய்து அழியாப் புகழ் புண்ணியங்களை
அடைந்தவர்கள் என்பதும் குறிப்பு. இச்சரித நிகழ்ச்சியும், அது
கண்டு வணங்கி "விண்ணோர் பனிமலர் மாரி தூர்த்தார்" என்றதும்
(599) இங்கு வைத்து உன்னுக.
தெருவுஞ்
சூழும் - என்பதும் பாடம். 3
|