554.
கடகரி துறையி லாடுங்; களிமயில் புறவி லாடு;
மடர்மணி யரங்கி லாடு மரிவையர் குழல்வண் டாடும்;
படரொளி மறுகி லாடும் பயில்கொடி கதிர்மீ தாடுந்
தடநெடும் புவிகொண் டாடுந் தனிநகர் வளமை
                                  யீதால்.
  4

     (இ-ள்.) கடகரி துறையில் ஆடும் - மத யானைகள்
நீர்த்துறைகளிலே விளையாடுவன; களிமயில் புறவில் ஆடும் -
களிப்புடைய மயில்கள் (நகரை யடுத்த) புறவங்களிலே ஆடுவன;
அடர்மணி...வண்டு ஆடும் - அடர் மணிகளையுடைய
ஆடரங்குகளிலே ஆடற்பெண்களின் கூந்தல்களின் மேல்
வண்டுகள் ஆடுவன; படர்...மீது ஆடும் - படரும் ஒளியுடைய
வீதிகளில் ஆடுகின்ற மிகுந்த கொடிகள் கதிர்களின்மீது ஆடுவன;
தடநெடும்...ஈதால் - விசாலமான நெடிய உலகம் கொண்டாடுகின்ற
ஒப்பற்ற நகரமாகிய இதன் வளமை இதுவாம்.

     (வி-ரை.) கடகரி துறையில் ஆடும் - கடம் - மதம்;
மதமிக்க யானைகள் நீர் விளையாட்டு விருப்பம் மிகவே நீர்த்
துறைகளில் ஆடும் என ஆடுதற்குக் காரணங்கூறியவாறு.
மதமிக்கதனாலன்றி யியல்பினாலேயும் யானைகள் - நீராடலில்
விருப்பமுடையன. இவ்விரண்டுடன் பின்னர் இச்சரிதத்தில் வரும்
பட்டவர்த்தன யானையின் செயலாகிய நிகழ்ச்சியையும் குறிப்பா
லுணர்த்தியவாறாம். துறை - இங்கு ஆம்பிராவதி நதித்துறை.
வருநதித் துறை - எனப் பின்னர்க் கூறுவது (562) காண்க. யானை
குறிஞ்சிக்குரிய கருப்பொருளாயினும் இந்நகர் அரசரது
தலைநகராதலின் யானைப்படைக் காவலுடனிருக்கும் பண்புபற்றிக்
கடகரி என்று நகரொடு சேர்த்துக் கூறினார்.

     களிமயில் புறவில் ஆடும் - களித்தபோதே ஆடுதலால்
களிமயில் என்றார். புறவு - நகர்ப்புறத்தும் ஆற்றின்
கரையோரமுள்ள சோலைகள். இவைகளின் செழிப்பினாலே அங்கு
மயில்கள் வாழும். "அருகுவளர் புறவிற் பூத்த மலர்கள்" என்ற
சண்டீச நாயனார் (33) புராணமுங் காண்க. புறவு - முல்லை நிலம்
என்பாருமுண்டு. எங்ஙனமாயினும் நகர்ப்புறச் சோலைகள் முல்லைப்
பகுதியைச் சார்ந்தனவும், மயில்கள் முல்லைக்குரிய
கருப்பொருளாதலும் பொருந்தும். சோலைகளின் செழுமையால்
மேகங்கள் தவழும்; மேகங் காண மயிலாடும் என்ற வியல்பும்
குறிக்க.

     அடர்மணி - அடர்ந்து இழைத்த மணி. அடர் - கெடுக்கும்
எனக்கொண்டு இருளை ஓட்டும் ஒளியுடைய மணிகள் என்றலுமாம்.

     அரங்கு - ஆடுமிடம், ஆடரங்கு என்பது வழக்கு. ஆடும்
அரிவையர் எனக்கூட்டுக. அரங்கில் ஆடுதல் அவர்களது குழலில்
வண்டு ஆடுதற்கு ஓர் காரணமுமாம். அவர்கள் குழலிற் சூடிய
புதுமலர்களில் மொய்த்த வண்டுகள் தம்மியல்பானன்றி அவர்கள்
ஆடுந்தோறும் எழுந்தாடுவன எனுமியல்பும் காட்டியவாறு. மேல்
யானைகளி னாடுதற்குப் போல வண்டுகளின் ஆடுதற்கும்
இருகாரணங்கூறினார். அரிவையர் அரங்குகளில் ஆடுதல் அந்நகர
மாந்தரின் பசியும் பிணியுமில்லா மகிழ்வாகிய வாழ்வு குறிப்பது.
குழல் - குழலிற் சூடிய மாலை குறித்தது. யானையாற் குறிஞ்சியும்,
மயிலான் முல்லையும், அரிவையர் குழல்வண்டினான் மருதமுங்
குறித்து, இம்மகிழ்வு அந்நாட்டு நானிலமும் பரவின எனக்
குறித்ததுமாம். யானை ஆடுதற்கு இரு காரணம்; 554 - வது
பாடலின்கீழ் உரைத்தவை காண்க.

     அரிவையர் - இங்குப் பெண்ணின் பொதுமை யுணர்த்திற்று.
பத்தொன்பது முதல் இருபத்தைந்து வயதளவில் உள்ள அரிவை
என்ற பெண் பருவங் குறித்த தென்பாருமுளர்.

     ஆடும் பயில் கொடி - அரங்கில் ஆடுபவரும் கொடி
போன்றார்; மறுகிலும் கொடிகள் ஆடுவன என்பதும் குறிப்பாம்.
"மாடந்தோறுங், கோதைசூ ழளகபாரக் குழைக்கொடி யாட மீது,
சோதிவெண் கொடிக ளாடுஞ் சுடர்நெடு மறுகு" (474) என்று
மெய்ப்பொருணாயனார் புராணத்துக் கூறியதும் காண்க. பயில்
கொடி
- கூட்டமாய்ப் பயின்ற கொடிகள்.

     கொடி கதிர் மீது ஆடுதலாவது ஆகாயத்தில் கொடிகள்
அசையுமாறு உயர்த்திக் கட்டுதல். கொடிமீது கதிர் ஆடும் என
மாற்றியுரைத்தலுமாம். கதிர் - சூரிய சந்திரர்களது கதிர்களும்
அத்தெருவுகளிற் பெரு விளக்குகளினின்று படர் ஒளியுமாம்.

     புவி கொண்டாடுதல் - உலகம் இதனைத் தலைநகராகக்
கொண்டு இதன் காவலுள் அமைந்து மகிழ்தல். தனி நகர் -
பெருமையாற் றனித்த நகர். இது போன்ற பெருமை யுடையது
பிறிதொன்றில்லையாய்த் தானே தனக்கு ஒப்பாயினமையின்
தனியென்றார். மேற்பாட்டிற் கூறியபடி சதமகனகரமே யன்றி நெடும்
புவியுங் கொண்டாடும் என்பது குறிப்பு.

     துறையிற் படிந்தாடும் யானைகளை மேகமென்று எண்ணி
மயில்கள் ஆடின. இந்த மயில்கள் ஆடல் எமது தலைவியர் ஆடற்
சாயலுக்கு இணையாகா எனக் குழல்வண்டு ஆடின. அவ்வெற்றிக்
கறிகுறியாய், விண்ணிற் கறிவுறுத்த அவர்கள் போன்ற கொடிகளும்
ஆடின. இது கண்டு உலகம் கொண்டாடி மகிழ்ந்தது - ஒரு
தொடர்பாய் உரைக்க நின்ற குறிப்பும் கண்டு களிக்க.

     துறைகளாடும் - என்பதும் பாடம். 4