594.
வாங்கிய தொண்டர் முன்பு மன்னனார் தொழுது
                                நின்றே
"யீங்கெனை வாளி னாற்கொன் றென்பிழை
                           தீர்க்கவேண்டி
யோங்கிய வுதவி செய்யப் பெற்றன னிவர்பா"
                                லென்றே
யாங்கவ ருவப்பக் கண்ட வெறிபத்த ரதனுக்
                                கஞ்சி,
   44

     594. (இ-ள்.) வெளிப்படை. வாங்கிய தொண்டரின் முன்னர்த்
தொழுது நின்று, "இங்கு வாளினாலே கொன்று என் பிழையைத்
தீர்க்கும் வண்ணம் பெரிய வுதவி செய்யும் பேற்றினை இவரிடம்
நான் பெற்றென்" என்று அரசர் மகிழவே, அதனைக் கண்ட
எறிபத்தர் அதனுக்கஞ்சி, 44

     594. (வி-ரை.) உவப்ப - மகிழ. மகிழ்ச்சியாகிய உள்ள
நிகழ்ச்சி அவரது சொற்களால் அறியக் கிடந்தது. ஆதலின்
அச்சொற்களை முன்னர்க் கூறினார். இவை "ஈங்கெனை.....இவர்பால்"
என்பன. இவை எறிபத்தரை நோக்கிச் சொல்லப்பட்டனவல்ல.
மகிழ்ச்சி மீக்கூர்தலாலே தமக்குத் தாமே வாய்விட்டுச் சொல்லியவை.

     மன்னனார் - முன்னர் மன்னன் - (583. 587 - 591) என்று
ஒருமையிற் சுட்டிய ஆசிரியர் இங்கு மன்னனார் - என்றார்
இவ்வாறு தீர்வு பெற்றுய்வதில் அவர் கொண்ட பெருமகிழ்ச்சியின்
சிறந்த பெற்றி நோக்கி. இச்சொற்களே பின் சரித விளைவுக்குக்
காரணமாயின என்பதும் காண்க.

     ஓங்கிய உதவி - மிகப் பெரிய பேருதவி. ஆங்கு - அந்த
நிலையில் - அவ்வகையில்,

     அதனுக்கு - அந்த எண்ணத்தை அவர் முடிபாகக்
கொள்ளுமாறு . தமது செயல் (வாள் வாங்கிய செயல்) விளைவித்த
அதற்கு. அடியார் உள்ளத்துத் தவறாகிய எண்ணம் விளைவிக்கும்
செயல் செய்தல் சிவாபராதமாம் என்று அதற்கு அஞ்சினார் என்க.

     ஈங்கெனை........இவர்பால் - இச்சொற்கள்
சிவாபராதத்தினின்றும் தாம் கழுவாய் பெற்று மய்யும் நெறி பெற்ற
நிலையினை எதிர்பர்த்த அளவில் அரசர்க்குள்ள ஆர்வத்தைக்
காட்டுவனவாம். தமக்குக் குற்றத் தீர்வு புரிந்து தம்மைப் புனிதராகச்
செய்வதனைப் பேருதவி என்றதும் காண்க. தாம் தாம்
செய்த குற்றத் தீர்வுக் குபகரிக்கும் அரசாங்க நீதியதிபர்களை
எத்தனை பேர் வெறுத்து வைதெழுகின்றார்கள்! அவ்வாறன்றித் தம்
குற்றத்தைப் போக்குபவரைப் போற்றிப் பாராட்டல் பெரியோர்
செயல்.

     உதவி செய்யப் பெற்றனன் - விரைவும் உறுதியும் பற்றி
எதிர்காலச் செயலை இறந்த காலத்தாற் கூறினார்.

     உரைப்பக் கண்ட - என்பதும் பாடம். 44