596.
புரிந்தவர் கொடுத்த வாளை யன்பர்தங் கழுத்திற்
                                    பூட்டி
யரிந்திட லுற்ற போதி லரசனும் "பெரியோர் செய்கை
யிருந்தவா றிதுவென்? கெட்டே!" னென்றெதிர்
                              கடிதிற்சென்று
பெருந்தடந் தோளாற் கூடிப் பிடித்தனன் வாளுங்
                                 கையும்.
46

     596. (இ-ள்.) வெளிப்படை. நினைந்து அவர் கொடுத்த
வாளை அன்பர்தம் கழுத்திற் பூட்டி அரியத் தொடங்கிய போதிலே,
"பெரியோர் செய்கை யிருந்த படி இது என்ன? ஓ! கெட்டேன்!"
என்று எதிர் விரைந்து போய் மிகப் பெரிய தமது தோள்களாற் கூடி
அரசரும் அந்த வாளினையும் அதைப் பிடித்த அன்பரது
கையினையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டனர்.46

     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     596. (வி-ரை.) புரிந்தவர் கொடுத்த - அவர் புரிந்து
கொடுத்த என மாற்றுக. புரிதல் - தீர எண்ணுதல் - முற்றும்
நினைத்தல் - தம் முன்பு உவகைபுரிந்தும் தொழுதலைப்புரிந்தும் -
கொடுத்த என்றலுமாம். புரிந்து - விரும்பி என்பாருமுண்டு.

     அன்பர் - இங்கு எறிபத்தரைக் குறித்தது. புகழ்ச்சோழரை
இங்கு அரசர் என்று பிரித்துச் சுட்டியது காண்க..

     பெரியோர் - சிவாபராதம் தம்பால் ‘நிகழ்வதனால் தாம்
எரிவாய் நரகத்துக் காளாகாதபடி தடுத்து உதவும் பெற்றியாற்
பெரியோர் என்றார். செய்தற்கரும் செயல் செய்தலாற் பெரியோர்
என்றார் என்றலுமாம்.

     இருந்தவாறு இது என்? கெட்டேன்! நாம் எதிர்பாராத
வண்ணம் இவ்வாறு இருந்தபடி இது என்ன! ஆச்சரியம்! கெட்டேன்!
எதிர்பாராதபடி அதிவிரைவில் தீங்கு நிகழக்கண்டபோது வரும்
அவலச்சொல். 588 - 593 -பார்க்க. இவ்வாறு தமக்கிறுதியைத்
தாமே தேடிக்கொள்ளும் செய்கை ஒரு பெரியார்பால் நிகழ்வது
தம்மாற் கூடிற்றே என்று எண்ணியபோது பேரவலம் மனத்து
நிகழ்ந்ததாக அதனைக் குறிக்கக் கெட்டேன் என்ற அவலச்சொற்
போந்தது.

     பெரும் தடம் தோள் - உருவினாலும் வலிமையாலும்
பெருமை நோக்கி - பெரு - தட - என இரண்டு
அடைமொழிதந்தார். முழையரி - வாளரி - யென்னத்தோன்றி
வலிய மழு வீசி வன்பெருங்களிற்றினையும் எறிந்து வீரஞ்செய்து
வென்ற பெரு வீரர் செயலைவிலக்குதற்குரிய பெருவன்மை நோக்கி
இவ்வாறு சிறப்பித்தார். கூடி - கிட்டி - சேர்ந்து, கழுத்தை
அரியவொட்டாமல் வாளுங் கையும் சேர்த்துப் பிடித்தனர் என்க.
ஊறு செய்யும் கருவி வாளாதலின் முதலில் இவரது கையின்
பிடியினுள்ளே கொண்டு தடுக்கப்பட்டது அது வென்பார் வாளும்
என்று அதனை முன்வைத்துக் கூறினார். தோளால் - கையால்,
பெருந்தோளுடைமை உயர்ந்த உடலிலக்கணமுமாம்.

     மன்னனார் - நின்றே - என்றே - உவப்பக் - கண்ட -
எறிபத்தர் (ஆகிய) - அன்பர் - அஞ்சி, - என்று கொண்டு -
என்றெண்ணி - அரிந்திடலுற்ற போதில் - அரசனும் - என்று -
சென்று - கூடிப் - பிடித்தனன் - என இம்மூன்று பாட்டுக்களையும்
தொடர்ந்து முடித்துக் கொள்க. எறிபத்தர் - (ஆகிய) (594) -
அன்பர் (596) - என்று கூட்டுக. 46