விரி

608.
புண்டரிகம் பொன்வரைமே லேற்றிப் புவியளிக்குந்
தண்டரள வெண்கவிகைத் தார்வளவர் சோணாட்டில்
வண்டறைபூஞ் சோலை வயன்மருதத் தண்பணைசூழ்ந்
தெண்டிசையு மேறியசீர் மூதூ ரெயினனூர்.
     1

     608. (இ-ள்.) வெளிப்படை. புலிக்கொடியை இமயமலையின்
மேல் நாட்டி, அவ்வெல்லைவரையினும் பரந்த தமது
நாட்டினைக்காவல் செய்யும், குளிர்ந்த முத்துக்கள் கட்டிய
வெண்கொற்றக்குடையும் வெற்றி மாலையும் உடைய சோழர்களது
வளப்பம் மிக்க சோழநாட்டிலே வண்டுகள் பாடுதற்கிடமாகிய
பூக்கள் மிக்க சோலைகள் சூழ்ந்த வயல்களையுடைய மருதத்தின்
குளிர்ந்த பண்ணைகளாற் சூழப்பட்டதாய், எல்லாத் திக்குக்களிலும்
தனது சிறப்பு ஏறிய பழையவூர் எயினனூராகும்.

     (வி-ரை.) புண்டரிகம் - புலி. வடசொல். பொன்வரை -
இமயம். ஏற்றி - வென்று, அதற்கடையாளமாக ஏற்றி. இவ்வரலாறு
முன் 552 பாட்டின் கீழ் உரைக்கப்பட்டது. 1162ம் பாட்டும் பார்க்க.

     புவியளிக்கும் - இப்புராணம் பாடிய காலத்துச் சோழர்
அரசாட்சி வலிமையொடும் நிலைபெற்று நடந்தமையின் அளிக்கும்
என நிகழ்காலத்தாற் கூறினார். சோழ அரசர் வாள்நீட்டி நின்ற
சார்புபற்றிய சரிதமாதலின் முன்புராணத்தில் (552) இச்செய்தி கூறிய
ஆசிரியர், அரசருக்கு வென்றி வடிவாட்படை பயிற்றும் தன்மைத்
தொழில் விஞ்சையிற் றலைமை பெற்றார் சரிதமாதலின், அரசர்
வெற்றிக்கு இவர் போன்ற படைத்தொழிலாசிரியரே காரணராம்
எனுந் தொடர்பு பற்றி அவ்வெற்றிச் செயலை மீண்டும்
இச்சரிதத்தினும் குறித்தார். இதனானே சரிதத் தொடக்கத்து நாட்டுச்
சிறப்புரைத்தபடியுமாம். என்னை? நல் அரசர் வெற்றியாலே நாடு
பெருமையும் சிறப்பும் பெறும் என்பது. மேற் சரிதத்தில் கருவூர்,
சோழரது தலைநகராதலின் நகரச் சிறப்புப்பற்றி நகரொடு புணர்த்து
இதனை விரித்த ஆசிரியர் இங்கு நாடுபற்றிய பெருமைக் குறிப்பிற்
கூறியதும் உன்னுக. "கொற்றவ னநபா யன்பொற் குடைநிழற்
குளிர்வதென்றால், மற்றதன் பெருமை நம்மால் வரம்புற
விளம்பலாமோ?" (85) என்று நாடு அரசனாற் சிறப்புப் பெறுவதனை
விளக்கியது காண்க.

     தண்தாள வெண் கவிகை - தண்கவிகை - நாடு
அதன்கீழ்க் குளிர்ந்து வாழச் செய்வதால் தண் என்றார். "குடைநிழற்
குளிர்வது" என்றமை காண்க. வெண் - வெண்மை புகழினையும்
தூய்மையினையும் குறிக்கும். அடையாளம். தாளம் - தனது
முன்னைக் கட்டினின்றும் முத்து விடுபடுதல் போலப் பசிப்பிணி
முதலிய கட்டுக்களினின்றும் நாட்டினை விடுவித்து வாழச் செய்தல்
குறிப்பு. முத்துக்களினியல்பு 492 - ன் கீழ் உரைக்கப்பட்டது பார்க்க.
தார்
- வெற்றிக் கறிகுறியாக அணியும் மாலை. சோழர்களுக்குரிய
அடையாள மாலையாகிய ஆத்தி எனினுமாம்.

     சோணாடு - சோழர் நாடு சோணாடு என மருவி நின்றது.
அரசரது காவலால் நாட்டின் சிறப்புக் கூறிய ஆசிரியர் அக்காவலாற்
போந்த விளைவாகிய வளத்தை நகர் வளத்தின் வைத்துக்
கூறுகின்றார்.

     பூஞ்சோலையும் வயலும் பணையும் இம்மைப் பயனோடு இறை
வழிபாட்டுக்குரிய பலனும் தருவன ஆதலின் இங்கு நகரச் சிறப்புக்
கூறியவாற்றால் இம்மை மறுமை வீடு என்னும் மூன்று பயனும்
குறித்தபடி காண்க. அவாய்நிலையால் இவற்றிற் கின்றியமையாத
ஆற்றுவளமுங் குறிக்கப்பட்டது. எனவே நாடு - நகர் - ஆறு -
முதலிய பலவும் இப்பாட்டால் ஒருங்கே கூறிய அழகுகண்டு கொள்க.

     சூழ்ந்து - சூழப்பட்டு.

     எண்திசையும் ஏறிய சீர் - எல்லாத்
திசைகளிலுமுள்ளார்க்கும் இறை திரு நீற்றின் சிறப்பினை
எடுத்துக்காட்டி வழிபடுத்தும் சிறப்பு. ஏறிய - எண்திசையுள்ளாரும்
ஏறுதற்கு - அறிந்து உய்வதற்குக் - காரணமாகிய சிறப்பு
என்றலுமாம்.

     எயின்மூதூர் - என்பதும் பாடம். 1