618.
"ஆர்கொல் பொர வழைத்தா?" ரென்றரியேற்
                            றிற்கிளர்ந்து
சேர்வுபெறக் கச்சிற் செறிந்தவுடை மேல்வீக்கி
வார்கழலுங் கட்டி வடிவாட் பலகைகொடு
போர்முனையி லேனாதி நாதர் புறப்பட்டார். 11

     618. (இ-ள்.) வெளிப்படை. "யாவர் கொல்! போருக்கு
அறைகூவி யழைத்தவர்? என்று ஆண்சிங்கம் போலக்
கிளர்ச்சியுடன் எழுந்து, கச்சுக்கட்டிய உடையை இடையில் வரிந்து
கட்டி, வீரக்கழலையும்கட்டி, வடித்தவாளினையும் பலகையினையும்
கொண்டு, போருக்குத் துணிந்தவராய்த் தமது திருமனையினின்றும்
ஏனாதிநாதர் புறப்பட்டார். 11

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.

     618. (வி-ரை.) ஆர்கொல் பொர அழைத்தார்? - கொல்
- ஐயச்சொல். இவர் அன்பும் அருளும் உடையராதலின் தமக்குப்
பகைவருண்மையை உணராராகவே, கொல் என்றது ஆச்சரியக்
குறிப்பும்பட நின்றது. "நள்ளார்களும் போற்றும்" என்றது காண்க.
பொர அழைத்தார் - "தாயம் போரில் வலியாரே
கொள்ளற்குரியார்" என்று போருக்கு அறைகூவினர். ஆர்கொல்
என்றதனால் அழைத்தான் யாவன் என்றறியாத நிலையிற்
கிளர்ந்தனர் என்க.

     அரி ஏற்றில் கிளர்ந்து - கிடந்தபோது வெங்கட்புலி
போன்றார் (617). கிளர்ந்தபோது அரியேறு போன்றார். போர்
என்றாற் றோள்பொருத்துக் கிளர்தல் வீரர் இலக்கணம் என்ப.

     சேர்வுபெறக் கச்சிற் செறிந்த உடை மேல்வீக்கி -
செறிவு பெற்ற உடையின் மேலே சேரக் கச்சினை வரிந்து கட்டி.
கச்சு
- இடையில் உடை நெகிழாமல் வரிந்து கட்டும்
உடைக்கோலம். கக்சு இல்லாவிடின் உடை போரினிடை
அவிழநேருமாயின் "உடுக்கை யிழந்தவன் கைபோல" என்றபடி
உடனே கையானது போரினை விட்டு அவிழ்ந்த உடையினைக்
கட்ட முற்படும். படவே, போர் இழக்க நேரிடும். ஆதலின்
கச்சினை வரிந்து போர்வீரர் இடையில் உடையின்மேற் கட்டுதல்
மரபு.

     கழலும் கட்டி - கழல் - வீரக்கழல். காலில் அணிவது.
வாள்
- பலகை இயற்பகை நாயனார் புராணத்துரைத்தவை காண்க.
வாள் பகைவரைத் தாக்கற்கும் (offensive) பலகை தம்மைக்
காத்தற்கும் (Defensive) உதவுவன.

     போர் முனையில் - யுத்த சன்னத்தராகப் போர் செய்ய
முற்பட்டாராக.

     புறப்பட்டார் - திருமனையினின்றும் வெளியே போந்தனர்.
அழைத்தானை இன்னானென்றறியாதேயும் ஒலி கேட்டவுடன் போர்
முகத்துப் புறப்படுதல் வீரர் செயல். இதனைப் படைச்செருக்கு
என்னு மதிகநரத்தில் வைத்துப் பாராட்டினார் திருவள்ளுவதேவர்.

     ஏற்றிற் சினந்து - என்பதும் பாடம். 11