636.
மற்றவர்தஞ் செய்கை வடிவா ளொளிகாணச்
சுற்றிவரும் வட்டணையிற் றோன்றா வகைகலந்து
பற்றியடர்க் கும்பொழுதிற் றானும் படைபிழைத்துப்
பொற்றடாந்தோள் வீரர்க் குடைந்து புறகிட்டான். 29

     (இ-ள்.) வெளிப்படை. அவர் தமதுசெயல் சிறந்த வடிவாளின்
ஒளிமட்டும் காணுமாறும் சாரிகை சுற்றி வருகின்ற வட்டணையிலே
தாம் காணாதவாறும் அப்போரினுட் கலந்து மூண்டு அவ்வதிசூரனை
வீசித் துண்டிக்கும் சமயம் நேர்ந்த போது அவனும் அதினின்றும்
தப்பியவனாய்ப், பொன்னணிந்த பெரிய தோள்களையுடைய
வீரராகிய ஏனாதிநாதருக்குத் தோற்றுப் புறந்தந்து ஓடினான்.

     (வி-ரை.) மற்றவர் - ஏனாதிநாதர். தம் செய்கை
"மின்னொளி வாள்வீசி நேரடர்ந்த" என்று அதிசூரன் செய்கை
மேற்பாட்டிற் கூறினாராதலின், இங்கு இவர் செயலாக மற்று இது
என்று விரிக்கின்றார். மற்று. வினைமாற்றுப் பொருளில் வந்தது.

     வடிவாள்......வட்டணை - வாளினை வீசிச் சாரிகை
சுற்றிவரும் விரைவினாலே வாளின் ஒளிமட்டும் காணப்பட்டதாக
அந்த வட்டணையினுள்ளே.

     தோன்றா வகை - வாளுங்காணாது, அதனை வீசிச் சாரிகை
சுற்றும் தம் திருமேனியுங் காணாது ஒளிவட்டம்" மட்டம் காணுமாறு.
"கைகளின் மெய்களடக்கிய வானொளி வட்டம்" (623) என்ற இடத்து
உரைத்தவை காண்க.

     கலந்து பற்றி - அவன் வாள் வீசியடர்ந்த போரில் தாமும்
கூடி நெருங்கி.

     பற்றி அடர்க்கும் பொழுது - சாரிகை முறைமையிற்
குறிபார்த்து வாள் வீசிக் கொல்லும் சமயம். முன்னர் 627ல்
உரைத்தவை காண்க. இதற்கு இவ்வாறன்றித் தம் செய்கை
தோன்றுவகை
என்று கூட்டி ஏனாதிநாதநாயனார் சத்துருக்களைக்
கொல்லுதற்குச் செய்த தந்திரச்செய்கைகள் அவருடைய வாள்வீச்சின்
பிரகாசத்தினாலும் கேடகத்தினுடைய சுற்றுதலினாலும் கண்ணுக்குப்
புலப்படாமல் இருந்தன என்பர் மகாலிங்கையர். இதன் பொருத்தம்
ஆராயத்தக்கது.

     தானும் படைபிழைத்து - படை - படுதல். தொழிற்பெயர்.
ஜகாரம் தொழிற் பெயர் விகுதி. அவரது வாள் வீசும்
வட்டணையினுள்ளே படுதலினின்றும், பிழைத்து - தப்பி. படை -
வட்டணை வீசிய வாட்படை என்றலுமாம். தானும் - வடிவாட்
படைத்தொழில்கள் கற்றவர்கள் தன்னிற் கடந்துளாரில்லை எனும்
பெருமிதம் வந்து தன்னையே சால மதித்துள்ளானாகிய அவனும்
என உம்மை சிறப்பு.

     இவ்வாறன்றிப் படை பிழைத்து - என்பதற்குப் படையுடன்
தப்பி - தானும் தன்னுடைய சேனையுமாகத் தப்பி - தனது
வாட்படையைக் கொண்டும் கேடகத்தைக் கொண்டும் போர் செய்ய
அறியாமல் - என்று பலவாறு உரைப்பாரு முண்டு.

     பொன்- அழகிய என்றலுமாம். தடந்தோள் - இங்கு
மாற்றவனைப் புறகிடச் செய்து வென்றது வாள்வலி பெற்ற
தோள்வலியே யாதலின் தோளைச் சிறப்பித்தார். தோள்வலி என்ற
இடத்துச் சங்கோத்தர விருத்தியில் எமது மாதவச் சிவஞான
சுவாமிகள் உரைத்தவை காண்க.

     புறகிட்டான் - தோல்வியுற்று அதற்கடையாளமாக முதுகு
காட்டி ஓடினான்.

     புறமிட்டான் - என்பதும் பாடம். 29