637.
போன வதிசூரன் போரிலவர்க்கழிந்த
மானமிக மீதூர மண்படுவான் கண்படா
னானசெய லோரிரவுஞ் சிந்தித் தலமருவா
"னீனமிகு வஞ்சனையால் வெல்வ" னென
                    வெண்ணினான்,
  30

     637. (இ-ள்.) வெளிப்படை. (இவ்வாறு உடைந்து புறகிட்டு
ஓடிப்) போயின அதிசூரன் போரிலே அவருக்குத் தோற்றதனாலாகிய
மான மிகமேற் படத் தரையிற் படுத்தவன் தூங்காதவனாகி
இவ்வாறாயின செயலை எண்ணியெண்ணி அந்த ஒரு இரவு முழுதுஞ்
சிந்தித்து மனஞ்சுழன்று "(இப்படி நேர் பொருதலின்றி) ஈனமிகுந்த
வஞ்சனைச் செயலாலே அவரை வெல்வேன்" என்று எண்ணினானாய்,
30
 

     637. (வி-ரை.) போன - புறகிட்டுச் சென்ற. அவன்
ஆயினவனாகாது நன்மைகக்குப் புறம் போயினவனே என்பது
குறிப்பு.

     மிக மீதூர - ஒரு பொருட்பன்மொழி. அடர்ந்த மிகுதி
குறித்தது. மீதூர்தல் அடக்க முடியாதபடி மேற்கிளம்புதல். மான
மிக மீதூர -
மானமுடையார் தந்நிலை யழியார். மானம்பட வரின்
உயிர் வாழார். "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்,
உயிர்நீப்பர் மானம் வரின்." ஆயின் இவன் அவ்வாறு தன்னுயிர்
நீத்து மானங்காத்துக் கொள்ள முற்படாது, வஞ்சனையால் வென்று,
தகாத வழியிலே உயிர் ஓம்பியும் பிறர் பொருள் கவர்ந்தும் வெற்றி
என்ற பேர்பெற்று மானமுங் காத்துக்கொள்ள எண்ணினான். இது
மான மிக மீதூர அதனால் விழுங்கப்பட்டானாதலாலும்,
அழுக்காற்றினால் விழுங்கப்பட்டு ஏலா இகல் புரிந்தானாதலாலும்,
தன்னையே சால மதித்த தீய பெருமிதமுடையனாதலாலும் அறம்
பிறழ்ந்து வஞ்சனை செய்தான் என்பது.

     மண்படுவான் கண்படான் - தரையிற் படுப்பன் -
ஆனால் தூங்க இயலாது எழுவானாகி. பூவார் அமளி முதலிய
படுக்கையின்பம் விரும்பாது தரையிற் படுத்தல் மிக்க
துயரத்தாலாவதாம். நோன்பு - விரதம் - முதலியவற்றிலும்
இவ்வழக்குண்மையும் கருதுக. மிகு துயரம், கவலை
முதலியவுற்றேர் படுப்பினும் உறக்கம் வராது அழுந்தும் இயல்பும்
காண்க.

     மண்படுவான் - மண்விழுவான் - நாசமாவான் - பாவி
என்ற வசைச் சொற்குறிப்பும்பட நிற்பது காண்க. இவனது வஞ்சகக்
கொடுமையைப்பற்றி ஆசிரியர் இவ்வாறு வசைக் குறிப்புப்பெற
இரட்டுற மொழிந்தார் என்க. "கண்ணாவாரேனுமுனைக் கைகுவியா
ராயினந்த, மண்ணாவார் நட்பை மதியேன் பராபரமே" என்ற
தாயுமானார் வாக்குங் காண்க. மானமுடையார் தந்நிலை திரியார்;
ஆனால் இங்கு இவன் வீரன் என்ற நேர்மை திரிந்து வஞ்சனையால்
வெல்ல எண்ணினாதலின் மண்படுவான் என்றதாம். "மண்புகார்
வான்புகுவர்" என்ற தேவார ஆட்சியும் காண்க. மண்படுவான் -
மண்ணில் வீழ்வான் என்று பொருள் கொள்வது சிறப்பின்றாம்.

     ஆன - செயல் - தான் போரில் அழிந்த செயலை. ஓர்
இரவும் - ஒரு இராப்பொழுது முழுமையும், முற்றும்மை. ஓர் -
எண்ணிய வகையில், அந்த இரவு முழுமையும் என்றலுமாம். ஆன
செயலைச் சிந்தித்து என்க. தான் தோற்றுப் புறகிடநேர்ந்த
நிகழ்ச்சியினையே பன்னிப் பன்னி இரவுமுழுதும் எண்ணிமிட்டு
இதனைக் கழிவிரக்கம் என்ப. இவ்வாறு கழிந்த பொருட்கிரங்கி
நிற்றல் துன்பமே விளைக்கும்; ஆதலின் அலமந்து என்றார்.
அலமா - பகுதி. மனஞ் சுழன்று வருந்துதல். அலம் வா- பகுதி
எனக்கொண்டு இச்சொல் அலம் வருதல் எனவும் வழங்கும். இங்கு
அலம்வருவான் என்பதும் பாடம். அலம் - சஞ்சலம் - துன்பம்.

     ஈனமிகு வஞ்சனையால் வெல்வன் - நேரடர்ந்தான்
போரில் உடைந்து புறகிட்டமையால் அவ்வகை வெற்றி பெறுவது
தன்னால் இயலாமை தெளிந்தனன். ஆதலின் வஞ்சித்து வெற்றி
பெறுவதே வழி என்று கருதினன் என்க. இது உலகியலிற்
பெரும்பான்மை மக்களுட் காண்பதோரியல்பு. நேரிய ஒழுக்கங்கைக்
கொண்ட மானமுடையார் இதிற்றுணியார் என்பார் ஈனமிகுவஞ்சனை
என்றார். உலகிற் பெரும்பாலும் மக்களுள் இக்கொள்கை பரவி
நிற்றலின், "வழி எது வேயாயினும் உட்கொண்டது பெறுதல்"
என்பதொரு போலி நியாயமும் நிலவுவதாயிற்று. The end justifies the
means
என்பது முதலாகக் கூறுவது கீழோரது நவீன மரபு. இவ்வாறே
போரிற் "பன்முறை யிழந்து தோற்றுப் பரிபவப்பட்டுப் போன"
முத்தநாதன் மெய்ப்பொருணாயனாரை வஞ்சனையால் வெல்ல
எண்ணிச் செயல்செய்தான் என்பதும் காண்க. 472-ம் பாட்டும்
அச்சரித நிகழ்ச்சியும் காண்க. முத்தநாதன் பன்முறையிழந்து தோற்ற
பின்பே அது துணிந்தானாக, இங்கு அவனிலுங் கடையனாகிய
அதிசூரன் ஒருமுறை புறகிட்டவுடனே வஞ்சனை துணிந்து
செயல்செய்தான். ஆதலின் அக்கீழ்மை நோக்கி இங்கு மண்படுவான்
என்றும், வரும்பாட்டிலும், 641-லும் தீயோன் என்றும், 647-ல்
பாதகன் என்றும் குறித்தார்.

     எண்ணினான் - எண்ணினானாய். எண்ணினானாகி -
செலவிட்டான் என்று முடிக்க.