638.
|
சேட்டாருங்
கங்குல் புலர்கலைத் தீயோனு
"நாட்டாரைக் கொல்லாதே நாமிருவேம் வேறிடத்து
வாட்டாயங் கொள்போர் மலைக்க வருக" வெனத்
தோட்டார்பூந் தாரார்க்குச் சொல்லிச் செலவிட்டான். 31
|
638.
(இ-ள்.) வெளிப்படை. அந்நீண்ட இரவு முழுதும்
கழிந்து புலர்காலையில் தீயவனாகிய அவனும் "நமது போரில்
நம்பொருட்டு நாட்டார்களைக்கொல்லாமல் நாமிருவரும்
தனியிடத்தில் வாளின் தாய உரிமை கைக்கொள்வதனை நிச்சயிக்கும்
போரினைச் செய்ய வருக" என்று இதழ்கள் செறிந்த பூமாலையணிந்த
ஏனாதிநாதர்க்குச் சொல்லி வர (ஏவலாளனை) அனுப்பினான். 31
638.
(வி-ரை.) சேட்டாரும் - சேடு ஆரும்.
சேடு -
சேய்மை. சேய்த்தாகிய அளவு கொண்டு நீடித்தல். சேடு கொண்ட
ஒளி (247) (சேய்மையினும் நீண்டு விளங்கும் பேரொளி) என்றது
காண்க. ஆரும் - நிறைந்த. ஆர்தல்
- நிறைதல். கால நீட்டித்துக்
கழிந்த இரவு என்பதாம். துன்பம் - துயரம் - பிரிவு முதலியவற்றாற்
காலம் செல்லாது நீடித்துக் காட்டுதல் இயல்பாம்.
புலர்காலை
- இரவு இருள் கழிந்து போகும் அதிகாலை.
நன்றாய் விடிந்து ஞாயிறு படருமளவும் பொறானாகி என்பது குறிப்பு.
நாட்டாரைக்
கொல்லாதே - பதியோர் கூடிய படையோடு
போர்செய்தலில் அவர் பலரும் மாண்டனர். அவ்வாறு அவர்
மாண்டது நமது தாய உரிமை நிச்சயிக்கச் செய்யும் போரில் நம்மிற்
சாயாதார் தாயம் கொள்ளும் பொருட்டேயாவதன்றி இப்போரில்
அவர்க்காவதோர் காரணமும் பயனும் இல்லை. ஆதலின் நம்
பொருட்டே அவர்களை மாளச் செய்தலால் நாம் அவர்களைக்
கொன்றவராவோம். அது நம்பாற் குற்றமாம் என்றதெல்லாம் கருதிச்
சொல்வான் போல நாட்டாரைக் கொல்லாதே என்றான்.
தனது
தோல்வியை மறைத்து நாட்டார்பாற் கருணையுடைய நேர்மையும்
கொலை முதலிய பாதகத்துக் கச்சமும் கொண்டவன் போலச்
சொல்லிவிட்டது அவனது முதல் வஞ்சனைச் செயலாம்.
நாமிருவேம்
- நாமிருவரும் மட்டும். இது இரண்டாவது
வஞ்சனைச் செயல். வேறிடம் - தனியிடம். இது மூன்றாவது
வஞ்சனைச் செயல் - "நானு நீயும் வேறிடத் திருக்க வேண்டும்"
(479), முதலியவை காண்க.
வாள்
தாயம் கொள் போர் - வாள் பயிற்றும் ஆசிரியத்
தொழிலின் வழிவழி உரிமையினைச் சாயாதார் தம்முடையதாக
ஆக்கிக் கொள்ளுதற்குரிய போர். 620 பார்க்க. மலைக்க - மலைய
என்பது மலைக்க என விகாரமாயிற்று. வஞ்சனையால் விகாரப்பட்டானது வாக்காதலின் சொல்லும்
விகாரப்பட்டது போலும்.
போரில் உம்மை மலைக்க - மலைவுறுவிக்க என்றகுறிப்புமாம்.
மலைவுறுதல் ஒன்றை மற்றொன்றாக அறிதல். ஆயின் இங்கு
மலைவு இவன் மட்டில் நின்றதேயன்றி நரயனார்பாற் சாரவில்லை.
இவனே தன் வஞ்சனையை நீற்றினால் மறைத்துக் காட்டினான்.
அவர் இவன் பகைவனாகிய அதிசூரன் என்று கண்டார்; ஆயினும்
அவன் நெற்றியிலே திருநீற்றினை நீறாகவே கண்டார்; இவன்
தமதுயிர்மேலும் தாய உரிமைமேலும் வைத்த கொள்கைக்
குறியினையும் அவ்வாறே கண்டார்; ஆனால் நீற்றினைக்
கொண்டதனால் அடியாராயினார் என்று கொண்டு அவ்விதிப்படி
ஒழுகினார், இவன் அவரை மலைக்க எண்ணியும்
அவர்
மலையுறுதலிலராயினர் என்க.
தோடு
ஆர் பூ தாரார்க்கு - முன்னாள் வெற்றி பெற்ற
பொற்றடந் தோளில் வாகை சூடியவர் என்பது குறிப்பு. இங்கு
மீண்டும் அடிமைத்திறத்திற்காக உயிர் கொடுத்த அருள் வெற்றி
அவருடையதே என்பதும் குறிப்பு. "தொழுதுவென்றார்" (481) என்றது
காண்க. எதுகை நோக்கித் தோட்டார் என இரட்டித்து வந்தது.
சொல்லிச்
செலவிட்டான் - சொல்லி வர ஒருவனை
விடுத்தான். ஒருவனை என்பது வருவிக்க. மறைவு மொழி சொல்லச்
சென்றானாதலின் அவனை மறைவு படுத்திக் கூறிய மரபு காண்க.
சொல்லி
வரவிட்டான் - என்பதும் பாடம். 31 |