641.
தீங்கு குறித்தழைத்த தீயோன் றிருநீறு
தாங்கிய நெற்றியினார் தங்களையே யெவ்விடத்து
மாங்கவருந் தீங்கிழையா ரென்ப தறிந்தானாய்ப்
பாங்கிற் றிருநீறு பண்டு பயிலாதான்
        34

     641. (இ-ள்.) வெளிப்படை. வஞ்சனையினால் தீங்கு இயற்ற
உட்குறி வைத்துப் போருக்கு அழைத்த கொடியோன் திருநீற்றினைப்
பூசிய நெற்றியினை யுடையார்க்கு எவ்விடத்தும் எஞ்ஞான்றும்
அந்நாயனார் தீங்கு செய்யமாட்டார் என்பதறிந்தவனாதலின்
உண்மைப் பாங்கிலே முன்னம் திருநீற்றினை அணிந்து
பயிலாதவனாகியும், 34

     641. (வி-ரை.) தீங்கு - பலவகையாலும் பெரிதும் வஞ்சித்து
வெல்வது. குறித்து - எண்ணி - கருதி. அழைத்த தீயோன் -
முன்னரும் அழைத்தான் என்றார். 616 - 617 - 618 காண்க. ஆயின்
அங்கு நேர்முகமாய்ப் போருக்கு அறைகூவி அழைத்தது போலன்றி
இங்கு மறைமுகமாய்ப் போர் செய்யாமலே வெற்றி பெறவேண்டித்
தீமை கருதி யழைத்தான் என்பார் அழைத்த தீயோன் என்றார்.
முன் தீயோன் (638) என்று கூறியபடியே இங்கும் குறித்ததை
உன்னுக.

     திருநீறு.....தீங்கிழையார்- இஃது ஏனாதிநாதர்
கொண்டொழுகிய ஒழுக்கம். "தொன்மைத் திருநீற்றுத் தொண்டின்
வழிபாட்டின், நன்மைக்க ணின்ற நலமென்றுங் குன்றாதார்" (610)
எனத் தொடங்கித் "தம் பெருமான் சாத்துந் திருநீற்றுச் சார்புடைய,
வெம்பெருமா னேனாதி நாதர்" (649) என ஆசிரியர் முடித்துக்
காட்டிய ஒழுக்கம் இங்கு மாற்றானுங் கண்டுணர்ந்த வகையினால்
விரிந்து புலப்படுதல் காண்க. நாயனாரது தூய வாழ்க்கை
யொழுக்கத்தின் உள்ளுறையும் குறிக்கோளும் இதுவே. இதனை
அவர்தம் உயிரினுஞ் சிறந்ததாகக் கொண்டது இச்சரிதப்
பின்விளைவாலன்றி முன்னரே உலகமறிந்த ஒழுக்கமாயிற்று என்க.
"நள்ளார்களும் போற்று நன்மைத்துறை" (612) என்றது காண்க.

     திருநீறு தாங்கிய நெற்றியினார் தங்களையே - வேடம்
பூண்டார் யாவரேயாயினும் திருவேடமே கருதி வழிபட்டார் என்பது
குறிப்பார் தாங்கினார் என்னாது தாங்கிய நெற்றியினார் என்றார்.
திருநீற்றினால் விளங்கும் அடிமைத் திறம் உள்ளத்தினுட் புகாது
திருநீறு நெற்றியளவில் நாடக வேடம்போல வேடமாத் திரையாய்
நின்றதாயினும் என்க. இதுபற்றியே மாற்றானாய்ப் பண்டுநீறு பயிலாத
அவனும் புறம் பூசி வஞ்சிக்கத் துணிவு கொண்டான். ஏகாரம்
தேற்றம். தாங்கிய - உண்மையானன்றிப் பொய்வகையானும் பூசிய.
எவ்விடத்தும் - அதற்கீடாகத் தம் உயிர் போவதாய் முடியும்
நிலையினும்.

     ஆங்கவரும் - ஆங்கு - அவர் - என்ற சுட்டின்மேற்
சுட்டுத்தேற்றம் - பற்றியது. உம்மை - உயர்வு சிறப்பு. தீங்கு
இழையார்
- எவ்வகையானும் தீமை செய்யார்.

     அறிந்தானாய் - ஆய் - காரணப் பொருளில் வந்தது
அறிந்ததனாலே.

     தீயோன் - பயிலாதானாயினும் - அறிந்தானாய் - பூசி -
உடன் கொண்டு - கைக்கொண்டு புகுந்தான் - என இவ்விரண்டு
பாட்டுக்களையும் தொடர்ந்து முடிக்க.

     பண்டு திருநீறு பாங்கில் புயிலாதான் - என மாற்றுக.
பண்டு - முன் ஒரு நாளும். பாங்கில் - வழிபாட்டு நெறியில்
நின்று. நீறு பூசியிடவே நெற்றி படைக் கப்பட்டமையால்
அப்பாங்கில் நின்று ஏன்றலுமாம். "நீறில்லா நெற்றிபாழ்"
"திருவெண்ணீறணியாத திருவிலூரும் ... அவையெல்லா மூரல்ல
அடவிகாடே" "வெண்ணீ றணிகிலா தவரைக் கண்டா லம்மநா
மஞ்சு மாறே" என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. "நீறில்லா
நெற்றியைச் சுடு" என்பது வேதம். பயிலுதல். பல நாளும்
உள்ளுருகப் பூசி வழிபட்டு ஒழுகுதல். பயிலாதான் -
பயிலாதானாயினும் "பள்ளியின்முக் கூடலானைப் பயிலாதே
பாழேநா னுழன்ற வாறே" என்ற திருத்தாண்டக ஆட்சி காண்க.
பாங்கிற் றிருநீறு என்றபடியே கூட்டிப் பாங்கினைச் செய்யும்
திருநீறு என்றலுமாம்.1

     திருநீறுபற்றி 141லும் பிறாண்டும் வருபவை யாவும்
நினைவுகூர்க. 34


     1 இங்கு நாயனாரது மரபில் வந்தோனும் அவருடன்
தொழிலுரிமைத்தாயத்தின் உள்ளோனும் ஆன அதிசூரன் முன் ஒரு
நாளும் திருநீறு பூசியறியான் என்றமையால் "அவன் சைவ மரபிற்
பிறந்தவனாயிருந்தும் பிறமதத்திற் பிரவேசித்தவனாகத்
தோன்றுகின்றது" என ஊகிக்கின்றார் மழவை மகாலிங்கையர். பல
பிறவிகளிற் செய்த நல்லூழின் பயனாகச் சைவநன்மரபிற் றோன்றப்
பேறுபெற்ற எத்தனையோ காளையர்களின் நெற்றிகள் திருநீற்றை
அறியாமலே கழிந்தொழிந்து போகின்றவதனை நாம் இந்நாளிற்
காண்கின்றோம்! அந்தோ! நல்லோரினஞ் சார்ந்த இவர்கள்
நல்லோரைக் கண்டேனும் திருந்தியுய்யுமாறு இறைவன் நல்லருள்
புரிவாராக.