644.
|
அடல்விடையே
றென்ன வடர்த்தவனைக் கொல்லு
மிடைதெரிந்து தாள்பெயர்க்கு மேனாதி நாதர்
புடைபெயர்ந்த மாற்றான் பலகை புறம்போக்கக்
கடையவன்ற னெற்றியின் வெண்ணீறு தாங்கண்டார். 37 |
(இ-ள்.)
வெளிப்படை. வல்லமை பொருந்திய விடையேறு
போல எதிர்த்து அவனைக் கொல்லத்தக்க சமயத்தைத் தெரிந்து
கால்பெயர்த்துச் செல்கின்ற போது புடை பெயர்ந்த மாற்றலன்
பலகையை விலக்கவே, கடையவனாகிய அவன் நெற்றியின்மேல்
வெண்ணீற்றினைத் தாம் கண்டனர்.
(வி-ரை.)
அடல் விடை ஏறு என்ன அடர்த்து - இடப
ஏறு முட்டிப் பாய்ந்து கொல்வதுபோல எதிர்த்து. பெருமிதமும்
கம்பீரமும் வலிமையும் மிக்கது விடையேறு. முட்டிப் பாய்ந்து
கொல்லுதலிற் சிறந்து விளங்குவது. முன்னர்ப் புலியேறு, வென்றி
மடங்கல் என உவமித்த ஆசிரியர், இங்கு நாயனாரை அடல்விடை
ஏற்றினுக்கு உவமித்தார். விடைஏறு சீறிமுட்டிப் பாய்தலிற் சிறந்தது
போலவே, அவ்வாறு பாயும்போது பழகியோரைக் காணின் முட்டாது
நிற்கவும் வல்லது. இங்குச் சரித நிகழ்ச்சிக்கேற்ப இவ்வாறு கூறினார்.
இந்நெறி புலி, சிங்கங்களிற் காணலரிது. இந்நாளில் சிலர் மிருகக்
காட்சிகளில் (Circus)
புலி, சிங்க முதலியவற்றைப்
பழக்கிக்காட்டினாலும் அவை ஒரு நாட் கேடு விளைப்பனவேயாம்.
மேலும், இங்கு, அடுத்து நாயனார் இறைவன்றிருவடி நீழலிற் பிரியா
நிலைபெற்றுச் செல்கின்றாராதலின் அக்குறிப்புக்கேற்ப வென்றி
அடல் விடைஏறு என்று உவமித்தார் என்றலுமாம். விடைஏறு
அடர்க்குநிலையின் பெருமையினையும், அது இறைவரது ஊர்தியாதற்
சிறப்பினையும் பொருந்த வைத்து ஏறுகோள் கூறி வரைவு கடாதல்
என்ற துறையில் "விடையார் மருப்புத் திருத்திவிட்டார் வியன்
றென்புலியூர், உடையார் கடவி வருவது போலு முருவினதே" (136)
என்று கூறிய திருக்கோவையார்க் கருத்துக்களை இங்கு உன்னுக.
அடர்த்து
- தாக்கி. அவனை - மாற்றானை - அதிசூரனை.
கொல்லும் இடை - இடை - சமயம். ஒரு வீச்சில்
வெட்டி
வீழ்க்கும் சமயம். "இடைதெரிந் தருள வேண்டும்" (475), "கலந்து
பற்றி யடர்க்கும் பொழுது" (636) என்றவை காண்க.
தெரிந்து
தாள்பெயர்க்கும் - அந்தச் சமயம் தேர்ந்து
அதுசெய்தற்குக் கால் பெயர்த்த. வாட்போரில் மாற்றானது வாள்
விலகப் பின்பெயர்ந்தும், அவனைத் தாக்க முன் பெயர்ந்தும்
வருவது மரபு. இதனை வட்டணை என்றும் இடசாரி வலசாரி
என்றும் வழங்குவர். தாள் பெயர்ந்ததாதலின் அதனைத் தொடர்ந்து
கைவாள் பெயரக் கொலை முற்றிவிடும் என்பது. இந்த இடையினைத்
தெரிந்து இவர் தாள் பெயர்த்தார்; அவனும் பலகை புறம்போக்க
என இடைதெரிந்து என்றதனை அங்கும் கூட்டுக. அவ்வொரு
கணமே இரண்டு செயலும் ஒருங்கே நிகழ்ந்தன என்க.
புடைபெயர்ந்த
- வாளால் அடர்த்துக் கொல்லப்படும்
குறியினுக்குத் தப்பி விலகிய. அருகே வந்த என்றுரைப்பாருமுளர்,
அஃதுரையன்மை யுணர்க.
பலகை- தன் நெற்றியை மறைத்திருந்த பலகையை.
புறம்போக்க
- மறைப்பினை நீக்கிப் பலகையை விலக்க.
"அவர்புடை பெயர்ந்த நிலையில் தான் வெட்டுண்பது திண்ணமென்
றறிந்து அந்நிலையினின்றும் புடை பெயர்ந்து அவர் தன்னை
வெல்லக் கொண்ட நிலைபோலத் தான் அவரை வெல்லத்ததக்க
இலக்கு இதுவே என்று குறிவைப்பான்போல" - திரு. க. சதாசிவச்
செட்டியார் உரைக் குறிப்பு.
கடையவன்
- கீழோன் - கீழ்மகன். முன்னர்த் தீயோன்
என்றதற் கேற்ப இவ்வாறு கூறினார். "கடையவனேனைக்
கலந்தாண்டு கொண்ட" - திருவாசகம்.
நீறு
தாம் கண்டார் - என்றதனால் நீற்றினைக்
கண்டாரேயன்றி அதனை அணிந்த நெற்றியுடையோன் கடையவனாந்
தன்மை காணவில்லை என்பது குறிப்பு. தாம் -
தாமே என்றலுமாம்.
37
|