645.
|
கண்டபொழு
தே"கெட்டேன்! முன்பிவர்மேற் காணாத
வெண்டிருநீற் றின்பொலிவு மேற்கண்டேன்;
வேறினியென்?
அண்டர்பிரான் சீரடியா ராயினா" ரென்றுமனங்
கொண்"டிவர்தங் கொள்கைக் குறிவழிநிற்பே"
னென்று, 38 |
645. (இ-ள்.)
வெளிப்படை. கண்டபொழுதே "ஆ!
கெட்டேன்! முன்பு எந்நாளும் இவர் மேற் காணப்படாத வெள்ளிய
திருநீற்றின் பொலிவினை மேலே கண்டேன்; வேறு இனி என்ன
நினைக்க உள்ளது? தேவதேவனாகிய சிவபெருமானது சீரடியாராக
இவர் ஆயினர்" என்று எண்ணியவராகி, "இவருடைய மனங்கொண்ட
கொள்கையின் குறிவழியே அமைந்து நிற்பேன்" என்று நிச்சயித்து,
38
645.
(வி-ரை.) கண்டபொழுதே
- "திருநீறுஞ் சாதனமுங்
கண்டால்" என்ற திருத்தாண்டகம் காண்க.
கெட்டேன்!
"உறவாவா ருருத்திரபல் கணத்தினோர்கள்"
என்றபடி வெண்ணீறிட்ட ஒரு அடியவரை உற்றார் என்றெண்ணாது
பகைவர் என்று எண்ணி, அவரை அடர்த்துக் கொல்லும்
இடைதெரிந்து தாள் பெயர்த்துத் தாயமுழுமையும் கொள்ள
அமைந்துநின்றேனே என்று வருந்தியிரங்கும் இரக்கச் சொல்,
593-596- உரை பார்க்க.
முன்பு
இவர்மேல் காணாத - இவர்மேல் முன் எந்நாளும்
பார்த்தறியாத - காணப்படாத. இதற்குமுன் எந்நாளும் இவர்
நீறிட்டதை நான் கண்டதில்லை என்றபடி. "பண்டு திருநீறு பாங்கிற்
பயிலாதான்" (641) என்றது காண்க. இவர் - இவனை. முன்னர்
உனக்கு (621), உரவோன்
(639) என ஒருமையிற் சுட்டிய நாயனார்,
இங்கு இவன் நெற்றிநீறு கண்டவுடன் தமது
முன்கருத்துக்களையெல்லாம் அக்கணமே அறவே மாற்றி, இவர்மேல்
- அடியார் ஆயினார் - இவர் தம்கொள்கைக்குறி - கொன்றார்
எனும் - இவர்க்கு என இவ்வாறு பன்மையாற்சுட்டி இங்குக் கூறியது
திருநீற்றின் வழிபாட்டிலே இவரது ஒழுக்கத்தின் உறைப்புக்காட்டியது.
இவ்வாறு நாயனாரது மனநிலையை ஆசிரியர் நாடகச் சுவைபெற
நமக்கு அறிவித்தது காவிய நயமாம். எனினும் ஆசிரியர் தமது
நிலையில் நமக்கு அறிவிக்கும் வகையில் முன்னின்ற பாதகனும்
என முடித்துக் காட்டுதலும் குறிக் கொள்ளத்தக்கது.
வெண்
திருநீற்றின் பொலிவு மேல் கண்டேன் சீரடியார்
ஆயினார் - திருநீற்றின் பொலிவு காண்டலின் அடியார் ஆயினார்
என்பது துணிந்தேன். இவர் அடியாராயினார் - நீறிட்டுள்ளாராதலின்
- மற்றை யடியார் போல - என்பது தருக்கமுறையிற் றுணிந்த
அனுமானம் என்னும் கருதலளவையாற் பெறப்பட்டது. காணப்படாத
அடியராந் தன்மையினைக், கண்ட திருநீற்றினான் அறிந்தனர் என்க.
புகழ்ச்சோழர் தம்யானை பிழைத்ததுண்டு (587) என்று கண்ட
உண்மைபோலக் காண்க. நீறிட்டார் அடியாராவார் என்பது திருவேட
வழிபாட்டின் உள்ளுறையாகத் துணிந்த பொருள். "நீறிடுந்
தொண்டர்" (158), நீறிடுவாரடியார் நிகழ்தேவர்கள்" (ஏழாந் தந்திரம்
- 159) முதலிய திருமூலர் திருமந்திரங்களும் பிறவும் காண்க.
மேற்
கண்டேன் - முன்னரும் புறம் பூசி (642)
என்றது
காண்க. மேல் - மேலாக. உயர்வாக என்றலுமாம்.
இதுமேலாகவே,
ஏனைய காட்சிகள் யாவும் கீழாயின என்பதும் குறிப்பாம்.
திருநீற்றின்
பொலிவு - அதனில் அன்புவைத்து
வழிபடுவோர்க்கே நீறு பொலிவுள்ள சாதனமாய் விளங்கும்.
அதனிலன்பில்லாதார் பலரும் பேணியணியாமை மாத்திரமேயன்றி
இகழ்ந்தும் திரிந்தொழியக் காண்கின்றோமன்றோ! ஆயின்
அன்புடையார்க்கு அது "சேலுங் கயலுந் திளைக்கும் கண்ணா
ரிளங்கொங்கையிற் செங்குங்குமம், போலும் பொடி", என்ற
திருப்பல்லாண்டிற் கூறியபடி இன்பம் தரும். "நீறுகண்டனை யாயினு
நெக்கிலை" என்ற திருவாசகத்தின் கருத்தினையும் உன்னுக.
வேறினி
என் - முன் எந்நாளும் இவர் மேல் நீறு
கண்டேனில்லையாயினும், இவர் என்னைப் பகைத்து என்பால் ஏலா
இகல்பூண்டு வலிந்து எனது தாயங்கொள்ள எண்ணிப்
போருக்கழைத்தவராயினும், இவர் என்னை வஞ்சனையாற்கொல்ல
எண்ணியவராயினும், இவர் என்னை வெல்ல முடியாதவராய் நேற்று எனக்குத் தோற்றுப் புறகிட்டு
ஒடியவரேயாயினும், இவர்மேல் நீறு
கண்டபின், வேறு இவ்வாறெல்லாம் மற்று நினைக்கவேண்டிய
நினைப்புக்கள் யாவுள? ஒன்றுமில்லை. நீறு காணின் அது
திருவேடம். அது பூண்டவர் அடியார் என நினைப்ப
தொன்றேகொள்ள உள்ளது. ஏனையவை எல்லாம் வேறென்
றொதுக்கப்படுவன என்பது முடிந்த கருத்து. ஆதலின் சீரடியார்
ஆயினார் என்று முடித்தார்.
"எவரேனுந்
தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங்
கண்டா லுள்கி, யுவராதே யவரவரைக் கண்டபோது உவந்தடிமைத்
திறநினைந்தங் குவந்து நோக்கி யிவர் தேவ ரவர்தேவ ரென்று
சொல்லி யிரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணிக், கவராதே
தொழுமடியார் நெஞ்சி னுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக்
காணலாமே" என்ற திருத்தாண்டகத்திற் குறித்த ஒழுக்கத்தின்
இலக்கணத்திற்கு நாயனார் முற்றும் நிரம்பிய இலக்கியமாகி நின்ற
நிலைகண்டு உய்வோமாக. உவர்மண் ணூறி மேனி வெளுத்த
வண்ணான் எதிரே வரக்கண்ட கழறிற்றறிவார் நாயனார் அடியார்
வேடமாகக் கண்டு வணங்கினர். அவன் பயந்து "யாரென்
றடியேனைக் கொண்டது? அடியேன் அடிவண்ணான்" என்று கூற,
அவனை வண்ணான் என்றும், தாங் கருதியபடி அவ்வேடம்
திருநீற்றுவேட மன்றென்றும் அறிந்தபின் "அடியேன் அடிச்சேரன்!
திருநீற்று வாரவேட நினைப்பித்தீர்; வருந்தா தேகும்" என்று
மொழிந்து சென்றனர் என்ற சரிதத்தினுட்குறிப்பினையும் அடிமைத்
திறத்தினையும் இங்கு உன்னுக. இதுபற்றியே இங்கு நாயனார்
"வெண்டிரு நீற்றின் பொலிவு - மேற்கண்டேன்"
என்றதும் காண்க.
திரு வேடத்தினியல்பும் அதன் வழிபாட்டின் பயனும் முடிந்த
பொருளாக வைத்து ஞானசாத்திரத்துக் கூறுவதும் இங்குக் கருதுக.
அண்டர்பிரான்
- சிவபெருமான், பெருந்தேவர்க்கெல்லாம்
தெய்வமாவார், சீர் - அடியார்க்கு இயற்கை படைமொழி.
ஆயினார் - முன்னர் அடியராந்தன்மை யில்லாதிருந்தும் திருநீறு
பொலியக்காண்டலின் ஆயினார் ஆதலின் இவர் குறிவழி நிற்பேன்.
மனங்கொண்டு
- மனத்தில் நிச்சயித்து.
கொள்கைக்
குறிவழி - தமது உயிரைக் குறிவைத்து
வஞ்சித்து அதனால் தாயம் பெற எண்ணிய கொள்கை. இது அவன்
கருத்து எனத் தெரிந்தபின் நாயனார் துணிந்த நிலை. இதில் அவர்
நின்ற உறைப்பு வரும்பாட்டில் மேலுஞ் சிறந்து விளங்குதல் காண்க.
தமது உடமை எல்லாம் தொண்டர்க்கு ஆக்குவார் நாயனார் (611).
இங்கு இவரை வென்று தாயம் பெறினும் அது தொண்டர்
உடைமையேயாம்; ஏனை உடைமைபோல் உடலும்உயிரும்
தொண்டர்க்கு ஆகும் இயல்பினவாம் என்பன நாயனாரது
உள்ளக்கிடை. என் உயிர் கொள்வதன் மூலம் தாயத்தை இவர்
பெறவிரும்பினார்; அவ்வாறே இவர்க்கு அதனை ஆக்குவன்
என இது துணிந்தார். 38
|