647.
|
அந்நின்ற
தொண்டர் திருவுள்ள மாரறிவார்?
முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்;
இந்நின்ற தன்மை யறிவா ரிவர்க்கருள
மின்னின்ற செஞ்சடையார் தாமே வெளிநின்றார். 40
|
(இ-ள்.)
வெளிப்படை. அவ்வாறு நின்ற திருத்தொண்டரின்
திருவுள்ளக் கிடையினை அறியவல்லார் யாவர்? முன்னே நின்ற
பாதகனாகிய அதிசூரன் தான் கருதிய படியே முடித்தனன்;
இத்தன்மையினை அறிவாராகி இத்திருத்தொண்டர்க்கு அருளும்
பொருட்டு மின்போன்ற செஞ்சடையுடைய சிவபெருமான் தாமே
வெளிப்பட்டுத் தோன்றிநின்றருளினார்.
(வி-ரை.)
அந்நின்ற - மேலே கூறிய கருத்துடன்
நேர்வார்போல் நேர்நின்ற.
திருவுள்ளம்
ஆர் அறிவார் - அவர்தந்
திருவுள்ளக்கிடையை யான் அறிந்த அளவில் மேலே விரித்துக்
கூறினேன்; அன்றி முற்றும் அறிவார் யாவர்? என முடித்துக்
கொள்கின்றனர் ஆசிரியர். 606-ம் பாட்டிற் குறித்த கருத்துக்களை
இங்கு நினைவு கூர்க. நாயனாரோடு உடனிருந்தார்களிற் சுற்றத்தார்
யாரும் அறியா வகை தனியிடஞ் சென்றாராதலின் இந்நிகழ்ச்சியைத்
தானும் உலகர் வேறு எவரும் அறியார். உடனிருந்த பகைவனாகிய
பாதகன் அச்செய்கையைக் கண்டானாயினும் அதனை விளைத்த
அவர்தந் திருவுள்ளக் கிடையை அறியான். இது சீவசாட்சியாக
நிகழாது, சிவசாட்சியாகவே நிகழ்ந்த தொன்றாதலின் அவ்வாறு
சர்வசாட்சியாய் நிற்கும் இறைவனொருவனையன்றி
மற்றெவருமறியமாட்டார் என்பார் ஆரறிவார் என்று
உறுதிப்
பொருள் பயப்ப வினாவினாற் கூறினார். மேலும் இவ்வினாவுக்கு
விடை தாமே கூறுவார் போன்று பின்னர் இந்நின்றதன்மையறிவார்
என்று முடிந்தது முடித்துக் காட்டியதும் காண்க. திருநீற்றின்
அன்புகொண்ட உள்ளத்தின் மேன்மைத் தன்மையை
அவ்வுள்ளத்தில் உயிர்க்குயிராய் நின்ற இறைவனன்றி எவரும்
அறியார் என்பார் யாரறிவார் என்றும்,
அறிந்தார் இறைவராதலின்
அதற்குரிய பயனை யளிப்பாராய்த் தோன்றி நின்றார் என்பார்
அறிவார் - அருள - நின்றார் என்றும் கூறினார்.
தன்
கருத்தே முற்றுவித்தான் - அன்பர்க் கடாதன அடுத்த
பொழுது அவற்றை இவ்வாறு கூறுதல் ஆசிரியர் மரபு. 481 -ம்
திருப்பாட்டும் அங்கு உரைத்தவையும் காண்க.
ஆயின், இங்கு
வெற்றி அவனதன்று; நாயனாரே வென்றனர்
என்பது. என்னை? திருநீற்றுக் கீடாக உடைமை, உடல், உயிர் என்ற
மூன்றையும் ஒருங்கே உவந்து தருவார் நாயனார் என்பதே இச்சரித
நிகழ்ச்சியின் முடிபாம். அன்றிப் போர்வன்மையில் உலகநிலை
வெற்றியும் தோல்வியும் முடிபாவதன்று. அப்போர் வன்மையிலும்
நாயனாரே வெற்றி பெற்றதும் மாற்றலன் உடைந்து புறகிட்டதும்
முன்னர் 636-ல் உரைக்கப்பட்டது. எனவே, உலகநிலை - உயிரின்
நிலை என்ற இரண்டினிலும் வெற்றி நாயனார் பாலதேயாம் என்க.
அன்பே வென்றது. 481-ல் உரைத்தவையுங் காண்க.
இந்நின்ற
தன்மை - இந்நிகழ்ச்சியின் உள்ளுறை. அறிவார்
- "உயிர்க்குயிராய் அங்கங்கும் நின்று" உள்குவாருள்கிற் றெல்லாம்
உடனிருந் தறிபவராதலின், அறிவாராய். முற்றெச்சம்.
வினையாலணையும் பெயராகக் கொண்டு அறிவார் - சடையார் -
வெளி நின்றார் என்று கூட்டியுரைப்பதுமாம்.
மின்
நின்ற செஞ்சடை - ஒளி நிலைத்து விளங்கும் சடை.
"மின்வண்ண மெவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை."
அடைந்தாரைக் காக்கும் விளக்கம் மிக்கது.
தாமே
வெளி நின்றார் - பாசமற்ற நிலையிலே விளங்கும்
இறையருளாகிய சிதாகாய வெளியில் நின்று வெளிப்படக் காட்சி
தந்தருளினார். தொண்டர் திருவுள்ளம் சடையார் தாமே அறிவர் :
(அன்றி மற்று) ஆர் அறிவார்? என்பதாம். "கண்ணப்பர் தாமறிதல்
காளத்தி யாரறித லல்லதுமற், றாரறியு மன்பன்றது" என்றது
ஞானசாத்திரம்.
அறிந்தார்
- என்பதும் பாடம். 40
|