668.
வருமுறைப் பருவந் தோறும் வளமிகு சிறப்பிற்
                                றெய்வப்
பெருமடை கொடுத்துத் தொக்க பெருவிறல் வேடர்க்
                                 கெல்லாந்
திருமலி துழனி பொங்கச் செழுங்களி மகிழ்ச்சி
                                 செய்தே
யருமையிற் புதல்வர்ப் பெற்ற வார்வமுந் தோன்ற
                            வுய்த்தார். 19

     668. (இ-ள்.) வெளிப்படை. அதன்மேல் முறையாக வருகின்ற
பருவங்கள் தோறும் வளமிக்க திருவிழாவுடன் தெய்வங்களுக்குப்
பெருமடைகளைக் கொடுத்து, அவ்வக்காலங்களில்
மங்கலவாத்தியங்கள் மேன்மேல் ஒலிக்க, வந்து கூடிய
வேடர்களுக்கெல்லாம் பெருங் களியாட்டினால் மகிழ்ச்சி விளைத்து,
அருமையாற் புதல்வரைப் பெற்றெடுத்த ஆசையும் வெளிப்படச்
சிறப்பு நடத்தினார்கள். 19

     668. (வி-ரை.) முறைவரும் பருவந் தோறும் - என
மாற்றுக. பருவங்களைப் பற்றி முன்னர் உரைத்தவை காண்க.
தெய்வப் பெருமடை - மடை - வனதெய்வங்களுக்குச் செய்யும்
பெரும்பூசனை. அஃதாவது காய் கிழங்கு மாமிசம் முதலிய பல
பிரப்புக்களைத் தனித்தனி குவித்து நிவேதித்து வழிபடுதல் என்பர்
ஆறு முகத்தம்பிரான் சுவாமிகள். மடை - என்பது பெரும் பொங்கற்
சோறு முதலியநிவேதனங்களைச் சிறு தெய்வங்களுக்கு ஊட்டிப்
பெரும்பூசையிடுதல் என்க. மடு - (உண்) என்ற பகுதி, செயப்படு
பொருளில் வந்த ஐகார விகுதி பெற்று மடை - (உண்ணப்படுவது)
- என்றாயிற்று போலும். இது கிராமிய வழக்குச் சொல். மடை
கொடுத்து
- பலிகள் இட்டு.

     தொக்க பெருவிறல் வேடர் - இம்மகிழ்ச்சி கொண்டாட
வந்து கூடிய வேடர்கள். களி - களியாட்டு - களிமகிழ்ச்சி
ஒருபொருட் பன்மொழித் தொடராய் மிகுதிப் பொருளில்
வந்ததென்பாரு முண்டு. மகிழ்ச்சி செய்வதே - மகிழ்ச்சியை
விளைத்து. திரு மலி துழனி பொங்க - திரு - மங்கலம்; துழனி
- வாத்திய ஓசைகள். பொங்குதல் மிகமுழங்குதல். புதல்வர்
அருமையிற் பெற்ற
என மாற்றுக. அருமை - மிக்க முதுமையிற்
பெற்றதும் - முருகனருளும் - கையிலேந்தற்கருமையும் - பெருமை
காட்டும் பலகுறியும் - முதலிய பல அருமைகளும் குறித்தது.

     புதல்வர்ப்பெற்ற - இரண்டாம் வேற்றுமைத் தொகை.
முன்னரும் (664) புதல்வன் என்ற சொல்லாற் குறித்தது காண்க.

     ஆர்வமுந் தோன்றுதல் - ஆசையும் வெளிப்பட்டு நிற்றல்.
உம்மை இறந்தது தழுவியது. உய்த்தார் - மகப்பேற்றின்
விழாச்சிறப்புக்களை நடைபெறச் செய்தார்.

     கழிமகிழ்ச்சி - என்பதும் பாடம். 19