675. (வி-ரை.)
பறழ் - குட்டி - குருனை - சாபம் -
என்பன மிருகச்சாதி யிளமைக்குரிய மரபுப் பெயர்கள். வெவ்வேறு
சாதி குறிக்க வெவ்வேறு பெயராற் கூறினார். 653 - ம் பிறவும்
பார்க்க. தொல்காப்பியம் மரபியலுட் கூறியனவும் காண்க.
கடுமுயல்
- வேகத்தாற் கடிய முயல். இது மனிதராற்
பின்றொடர்ந்தோடிப் பற்ற முடியாத வேகமுடையது. பின்னர்க்
கூறும் மூவகைப் பிராணிகளின் வேறாகிய இனமாதலின் இதனை
ஓடு உருவு தந்து பிரித்தோதினார்.
கானஏனம்
- காட்டுப்பன்றி. மிக்க மூர்க்கத் தன்மை
யுள்ளது. யானைக்கிருத்தல் போல் முன்னால் வளைந்து நீண்ட
இரண்டு பற்களுடையது. இவ்வினத்தில் ஒருபெரும் பன்றி பதினான்கு
ஆள் சுமக்கும் பாரமுள்ளது என்றும், அதனை உண்போர்
பெருவிலை தந்தும் பெறுவர் என்றும் கூறுப.
காட்டுப்பன்றிக்
குட்டிகளை இளமையில் முடுகியவிசையிற்
சென்று பற்றிய பயிற்சியே பின்னர் நாயனார், மொய்வலைகளை
யறுத்துக் கடுவிசையில் முடுகி நெடிதோடிய (736) ஏனத்தைக்
காதங்கள் பலவும் (741) அதன் முடுகிய விசையுடன்
தொடர்ந்தோடிச் சுரிகையாற் குத்தி வீழ்த்திய திறமாக விளைந்தது
என்று பிற் சரிதக் குறிப்பும் காண்க.
கொடுவரி
- புலி. வளைந்த வரிகளையுடையது என்பது
பொருள். "கொடுவரியியங்கும் கோடுயர் நெடுவரை" - புறம் - 135.
இது வீரம் மிகுந்த சாதி. செந்தாய் ஒருவகைக்
கானவிலங்கு. மிகக்
கொடுமை யுடையது. இதுமுதலில் ஒன்றிரண்டாய் வந்தபின்
பெருந்திரளாகக் கூடி மக்களையும் வேற்று விலங்குகளையும்
கொடுமையாய்க் கடித்தும் அடர்த்தும் கொல்லுந் தன்மையுடையது.
கொடுஞ்
செவிச் செந்நாய்ச் சாபம் - சாபம் குட்டி.
வளைந்த காதுகளையுடைய செந்நாயின் குட்டி என்க. இச்சாதியின்
குட்டிகள் நாய்க்குட்டிகள் போல வளைந்து தொங்கிய காதுடையன
என்பர். கொடுஞ்செவிஞமலி (652) என்றது காண்க.
இங்கு, சரபமான
எனப் பாடங்கொண்டு கொடிய
காதுகளையுடைய சரபம் (பறவை) போல வேகத்திற் சென்று
என்பாருமுண்டு. இவர்கள் ஆன - உவம உருபென்பர். சாபம் -
எனவே கொண்டு - வில் என்று பொருள்கூறி, இருபுறமும் வளைந்த
காதுகளையுடைய வில்லிற் கோத்த அம்பின் விசையில் எனப்
பொருள் கூறுவாரும், வில்லின் ஆனவிசை - பாணவேகம்
என்பாருமுண்டு. இவற்றின் பொருத்தங்கள் ஆராயத் தக்கன.