716.
அப்பெற்றியின் வாழ்த்து மணங்குடை யாட்டி
                               தன்னைச்
செப்பற்கரி தாய சிறப்பெதிர் செய்து போக்கிக்
கைப்பற்றிய திண்சிலைக் கார்மழை மேக மென்ன
மெய்ப்பொற்புடை வேட்டையின் மேற்கொண்
                       டெழுந்து போந்தார்.
67

     (இ-ள்.) வெளிப்படை. அவ்வாறு வாழ்த்துகின்ற
தேவராட்டியைச் சொல்லுதற்கரிய பெருஞ்சிறப்புக்கள் எதிர்செய்து
போக்கி, வலிய சிலையினைக் கையிலேந்திய கார்காலத்து
மழைமேகம்போல, உண்மைப் பொலிவுகொண்ட வேட்டையினை
மேற்கொண்டு எழுந்து (திண்ணனார்) புறப்பட்டனர்.

     (வி-ரை.) சிறப்பு எதிர்செய்தல் - அவள் மகிழும்படி
சிறந்த வரிசைபலவும் தந்து பாராட்டுதல். எதிர்செய்தல் - அவள்
செய்த நன்றிக்குத் தாமதமின்றிக் கைம்மாறு செய்தல். போக்கி -
தனது இருப்பிடத்துக்குப் போகும்படி செய்து.

     திண்சிலை கைப்பற்றிய என மாற்றுக. கார் - கார்காலம்.
மழைமேகம்
- எழுந்து மழைபெய்யச் சூல்நிரம்பிய மேகம்.
மேகமும் இந்திரவில்லாகிய சிலையினை ஏந்திநிற்பதனால், வினையும்
உருவும் பயனும் விரவிவந்த உவமம் முன்னரும் காளமேகம்
என்றார். கார்மழை மேகம் அம்பு (நீர்) மழை பெய்வது போன்று
இவர் தமது வில்லினின்றும் பொழியும் அம்புமழை
அன்புமழையேயாகிப் பொழிந்து உலகுய்யச் செய்தது.

     மெய்ப்பொற்பு - உண்மையின் பொலிவு. இவ்வேட்டைக்கு
உண்மைப் பொலிவாவது தனக்கென ஒரு பயனும் வேண்டாது
வேடர்களாகிய குடிகளைக் காத்துத் தாங்கி நலமே செய்யும் (703 -
704) கருத்தின்வழியே சிந்தித்து எழுந்தது என்பதாம். இனி,
சிறிதுநேரங்கழியவே தன்னைமறந்த உள்ளத்திற் றெளிகின்ற
மெய்ம்மையன்பின் உருவமேயாகி (திருஞான - புரா - 1024)
மெய்ம்மையின் வேறு கொள்ளாச் செவ்விய அன்பு தாங்கி (776)
நிற்பதாகிய நிலையினைத் திண்ணனார்பெறுவர். இரவு கழிவதன்முன்
புலரியி னிருளிடத்துச்சென்று பகலின்ஒளி விரவிக்காட்டுதல்போல
அந்தப் பேரன்புநிலையின் உண்மைப்பொலிவு இருள்போன்ற
கொலைவேட்டை புகும் இப்பொழுதே கலந்து காட்டிற்று என்ற
குறிப்புமாம். மெய் - உடல் எனக்கொண்டு அதற்கேற்ப
உரைப்பாருமுளர்.

     மேற்கொண்டு எழுந்து - அதனில் முயற்சித்துக் கிளம்பி.
போந்தார் - தன் மனையின் வரிவிற்சாலை முன்றிலினின்றும்
புறப்பட்டார். 67