747.
உரைசெய்து விரைந்து செல்ல வவர்களு முடனே
                                   போந்து
கரைவளர் கழையின் முத்துங் காரகிற் குறடுஞ்
                                   சந்தும்
வரைதரு மணியும் பொன்னும் வயிரமும் புளினந்
                                     தோறுந்
திரைகண்முன் றிரட்டி வைத்த திருமுக லியினைச்
                                 சார்ந்தார். 98

     (இ-ள்.) வெளிப்படை. (திண்ணனார் மேற்கண்டவாறு)
சொல்லி விரைந்து செல்ல அவ்விருவரும்கூடவே சென்று, கரையில்
இருமருங்கும் ஓங்கிவளரும் மூங்கிலின் முத்துக்களையும், காரகிற்
கட்டைகளையும், சந்தனமரங்களையும், மலையில் விளையும் ஏனை
மணிகளையும், பொன்னையும், வயிரத்தையும்
மணற்குவியல்களிலெங்கும் அலைகளால் முன்திரட்டிச் சேர்த்து
வைத்த திருமுகலியாற்றினை அணைந்தார்கள்.

     (வி-ரை.) விரைந்து செல்ல - விரைவு முன் ஆசையும்
விருப்பும் என்று சொன்னவற்றாலுளதாகிய ஆவல் மிகுதிகுறித்தது.
திண்ணனார் - செல்ல என்க.

     செல்ல - போந்து - (மூவரும்) - திருமுகலியினைச் சார்ந்தார்
எனக் கூட்டுக.

     கரைவளர் கழையின் முத்தும் - முகலியின் இருகரையிலும்
மூங்கில்கள் உயர வளர்ந்திருக்கின்றன. அவற்றின் முதிர்ந்தவற்றில்
விளைந்து உதிர்ந்த முத்துக்களை ஆறு அடித்து வந்தது
என்றதாம். " அலைகொள்புன லருவிபல சுனைகள் வழி யிழியவய
னிலவு முதுவேய், கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா
ளத்திமலையே" (5) என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரங் காண்க.

     கார் அகில் குறடு சந்து - "சந்தமார் அகிலொடு....
உந்துமாமுகலியின் கரையினில்" என்ற ஆளுடையபிள்ளையாரது
திருக்காளத்தித் தேவராங்காண்க. குறடு - கட்டைகள். அகிற்
குறடும் சந்தும் முறிந்து வீழ்ந்தனவும் உலர்ந்தனவும் வெள்ளத்திற்
பறிக்கப்பட்டனவும் ஆம்.

     வரைதருமணி - முத்தும் பவளமும் வயிரமும் ஒழிந்த
ஏனையமணிகள். முத்து முன்னர்க் கூறினார். பவளம்
கடல்படுபொருளாம்.

     வயிரம் - விலையில் மிகுதியும், குணத்திற்
குறைவுமுடைத்தாதலால் வேறு பிரித்துக் கடையிற் கூறினார்.

     புளினம் - அருவியின் நீரோட்டத்தாற் குவிக்கப்படும்
சிறுமணற் குவியல்கள்.

     திரைகள்முன் திரட்டிவைத்த - சலசலவென்று அலைந்து
ஓடும் அருவிநீரால் மணற் குவியல்களும் அவற்றின் ஓரத்தில்
அவ்வவற்றின் மென்மை வன்மைக்கேற்றபடி மணி பொன்
முதலியனவும் வரிசைபெறச் சேர்த்துவைத்த. முன் - முன்னால்
காணத்தக்கதாக. கரையில் ஓரத்தில். "முத்துமாமணிகளும் ....எத்து
மாமுகலியின் கரையினில்" என்ற ஆளுடைய பிள்ளையார்
தேவாரமுங் காண்க.

     திரட்டிவைத்த திருமுகலி - "அறியாம லேனு மறிந்தேனுஞ்
செய்து, செறிகின்ற தீவினைக ளெல்லாம் - நெறிநின்று,
நன்முகில்சேர் காளத்தி நாத னடி பணிந்து, பொன்முகலி யாடுதலும்
போம்" (74) என்று கயிலைபாதி காளத்தி பாதி யந்தாதியிற்
கூறியபடி, தன்னையணைந்து தன்னுட்படிந்தோர் சிவபூசை செய்து
முத்திபெற்று உய்யும்பொருட்டுப் பூசைக்குரிய பொருள்களாய் நறும்
புகையூட்ட அகிலும், அரைத்து மெய்ப்பூச்சிட்டுச் சாத்தச் சந்தனமும்,
மஞ்சனப் புனலினும் அர்க்கியநீரிலும் இட மணிகளும் பொன்னுமாக
வெளிப்பட, முகலியாறு, திரட்டிக் காட்டிவைத்தது என்றதொரு
தற்குறிப்பேற்றக் குறிப்பும் காண்க. 235 பார்க்க.
முகலியினுட்படிந்தோர் முத்திபெறுவர் என "உலகிலெங்கணு
மில்லதோ ரதிசய மொன்றித், தலைமை கொண்டபொன்
முகலியுட்டாழ்ந்தவர் யாருந், தொலைவி றுன்பங்கள் பலதருஞ்
சூழ்வினைப் பிறப்பா; மலை நெடுங்கடற் கரைமிசை யேறுவ ரன்றே"
(பொன்முகலிச்சருக்கம் - 91) என்று அதிசயச்சுவை பெறச்
சீகாளத்திப் புராணம் கூறும். "இம்மை யேதருஞ் சோறுங் கூறையும்"
என்றபடி. தன்னை அணைந்தார்க்கு அந்த முத்தியேயன்றி இம்மை
நலங்களையும் தருதற்பொருட்டு இந்நதி முன் மணியும்பொன்னும்
முதலியவற்றைத் திரட்டிவைத்திருக்கும் என்றதொரு குறிப்புப்
பொருளும் காண்க. 98