818.
"பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்த                              தென்னோ?
வாவியி னினிய வெங்க ளத்தனார்க் கடுத்த
                             தென்னோ?
மேவினார் பிரிய மாட்டா விமலனார்க் கடுத்த
                             தென்னோ?
வாவதொன் றறிகி லேன்யா; னென் செய்கே;"
                        னென்று பின்னும்
169

     818. (இ-ள்.) வெளிப்படை. "இப்பரமனார்க்குப் பாவியேன்
நான் கண்டபடி இவ்வாறு அடுத்த தென்னோ?; உயிரினும்
இனியவராகிய எங்கள் அத்தனார்க்கு இது அடுத்ததென்னோ?;
வந்து பொருந்தினவர்கள் விட்டுப் பிரியமாட்டாத விமலனார்க்கு
இங்கு அடுத்ததென்னோ? செய்யலாவதாகிய காரிய மொன்றும் யான்
அறிகிலேன்" என்று கதறி மீளவும் (எண்ணுவாராய்), 169

     818. (வி-ரை.) பாவியேன் கண்டவண்ணம் - நான்
பாவியாதலின் என்கண்கள் இது கண்டன; அவை கண்டவாறு
என்னோ அடுத்தது? என்க. "கொடியேன் கண்கள் கண்டன கோடிக்
குழகீர்" என்ற ஆளுடையநம்பிகளது தேவாரக் கருத்தை இங்கு
வைத்துக் காண்க. "நான்பாவிய னானாலுனை நல்காயெனலாமே"
என்ற திருவாசகமும் காண்க. உலக வழக்கிலும், தம்மால் அன்பு
செய்யப்பட்டார்க்கு ஓர் தீங்குவரக் காணில் அதனைத் தம்மேல்
ஏற்றிப் பாவியேன் - எண்கண் செய்த பாவம் - என்ககை செய்த
பாவம் - என்றிவ்வாறு வைத்து வழங்குவதும் கருதுக. நான்
தீயசகுனங் கண்டவண்ணம் என்றலுமாம்.

     அடுத்தது என்னோ? - வந்து அடுத்தது என்? யாது
காரணம் பற்றியது? ஓகாரம் இரக்கப்பொருளில் வந்தது.

     ஆவியி னினிய எங்கள் அத்தனார் - "என்னிலும்
(எனக்கு) இனியான் ஒருவன் உளன்" என்ற திருக்குறுந்தொகை
காண்க. அத்தனார் - யாவர்க்குந் தந்தையார். இனியராதற்குக்
காரணங் குறித்தபடி. எங்கள் - மேற்பாட்டில் எம்பிரான்
என்றதுபோல வாளா பெயராய் நின்றது. தமது சிறப்புரிமை பற்றியது
என்றலுமாம்.

     மேவினார் பிரியமாட்டா விமலனார் - விமலன் -
மலமற்றவர். பிரியமாட்டாமைக்குக் காரணங் கூறியபடி.
மலமாசில்லாதவராதலின், மேவிக் கண்டார் காதலிக்கவும்
பிரியாதிருக்கவும் உள்ளவர் என்பது. 806 - ம் பாட்டிற் கூறியபடி
தம் அறிவிச்சை செயல்கள் அவனுடையனவேயாகி விளங்கியவர்
திண்ணனாராதலின் அவர் திருவாக்கில் வைத்து இறைவர்
தமதுண்மையை விளக்குகின்றார்.
இயல்பாகவே பாசங்களினின்று
நீங்கியவர் தம்மை மேவினாரது பாசங்களைப் போக்கித் தம்மைப்
பிரியாதிருக்கும் நிலையருள்பவர் என்று பதியிலக்கணங் காட்டிய
குறிப்பும் காணத்தக்கது. மாட்டா என்ற சொற்குறிப்பும் அது.
ஆவியினினியராதலின் மேவினார் பிரியமாட்டாதவர் என்ற
உண்மை, "என்னுயிருக் கின்னமுதா மெழிலாரூர்ப் பெருமானை,
வன்னெஞ்சக் கள்வனேன் மறந்திரேன்" (கழறிற்றறிவார் புராணம்,
160) என்றவிடத்து நம்பிகளது தேவாரத்திலும் காண்க.

     ஆவது - அடாததாய் அடுத்த இத்தீங்குக்கு மாற்றாவது.
தீர்க்கும் உபாயம். ஒன்று - ஒன்றும். முற்றும்மை தொக்கது.
ஒன்று - சிறிது என்னும் பொருளில் வந்தது. "கணபதி
யொன்றறியான்" - நம்பிகள் தேவாரம்.

     என்செய்கேன் - இதனைத் தீர்க்க என்ன செய்குவேன்?
"செய்வதொன்று மறியேனே" என்ற திருவாசகக் கருத்தினை இங்கு
வைத்துக் காண்க. செய்கேன் - செய்யக் கடவேன். க - எதிர்கால
இடைநிலை. என்று - என இவ்வாறு கதறி. பின்னும் - பின்னரும்
வரும்பாட்டிற் கூறியவாறு எண்ணிப்போயினார் என முடித்துக்
கொள்க. 169