829.




பேறினி யிதன்மே லுண்டோ? பிரான்றிருக் கண்ணில்
                                     வந்த
ஊறுகண்ட டஞ்சித் தங்க ணிடந்தப்ப வுதவுங்
                                  கையை
யேறுயர்த் தவர்தங் கையாற் பிடித்துக்கொண்
                             "டென்வ லத்தின்
மாறிலாய்! நிற்க" வென்று மன்னுபே ரருள்பு
                                ரிந்தார்.
180

     (இ-ள்.) பிரான்......அஞ்சி - தமது பெருமானது
திருக்கண்ணினுக்கு வந்த ஊற்றினைக் கண்டுபயந்து;
தங்கண்.......கையை - தமது இடக்கண்ணைத் தோண்டி அப்புதற்கு
உதவநின்ற கண்ணப்பரதுகையை; ஏறுயர்த்தவர்....பிடித்துக் கொண்டு
- இடபக்கொடியை உயர்த்தியவராகிய காளத்தியப்பர் தமது
கையினாற் பிடித்துக்கொண்டு; மாறிலாய்! - ஒப்புயர்வற்றவனே!;
என்வலத்தில் - எனது வலது பக்கத்தில்; நிற்க..புரிந்தார்
- நிற்பாயாக என்று நிலைபெற்ற பெரிய திருவருளினைச் செய்தனர்.
பேறு...உண்டோ? (ஆதலால்) இனி யிதன்மேற் பெறத்தக்க பயன்
வேறுமுண்டோ? இல்லை.

     (வி-ரை) பேரருள் புரிந்தார்.....பேறு இனி இதன்மேல்
உண்டோ?
- இங்கு வலப்பக்கத்தில் நிற்க என்றருளப் பெற்ற
கண்ணப்ப நாயனாரும் அவ்வாறருளி அவரது இடப்பக்கத்தில் தாம்
அமைந்து நின்ற காளத்திநாயனாரும் பூட்டிய வில்லின் இருதலை
போலப் பிரித்துணராத நிலையிற் பிணைந்தனர் என்பது குறிக்க
இவ்வாறு பூட்டுவிற் பொருள்கோள் பெற வைத்தது குறிக்க.

     இனி இதன்மேல் பேறு உண்டோ என்க. பேறு - இங்கு
இதன்மேல் உண்டோ என்றதனால் சிவசாயுச்சியமாகிய முடிந்த பதம்
குறித்தது. அருள்ஞானக் குறியினின்று அருள் நோக்கத்தால்
மலமூன்று மற்றாராய், அவனேதானே ஆகிய அந்நெறியில் ஏகனாகி
இறைபணி செய்தனராதலின் இவர் பெற்றது பரமுத்தியேயாம்
என்றும், வேறு சிலர் கூறுவதுபோலச் சிவபூசையாகிய கிரியைக்குரிய
சாமீபமாகிய பதம் மட்டுமன்று என்றும் விசேட உரை காண்பர்
ஆலாலசுந்தரம் பிள்ளை.

     உண்டோ? - ஆன்மாக்கள் அடையத்தகும் பேறு இதற்கு
மேல் வேறொன்று மி்ல்லை என்று வினா எதிர்மறை குறித்தது.
"கற்றதனா லாய பயனென் கொல்" என்புழிப்போல வேறு இல்லை
என்னாது உண்டோ என வினாச்சொல்லாற் கூறியது உறுதிப்
பொருள் தருதற்பொருட்டு. "கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பரா"
தலின் கற்றதனாலாய் முடிந்த பயனைப் பெற்றனர் என்ற
இத்திருக்குறட் பொருட்குறிப்பும் காண்க கண்ணப்பர் தாம்
யாவரினும் மிக்க பேறுபெற்றனர் என்பது கருத்து. இதுபற்றியே
திருவாதவூரடிகள் முதலிய பரமாசாரிய மூர்த்தி மற்றும் எல்லாப்
பெரியோர்களாலும் துதிக்கப்பெற்றனர் என்க.

     திருக்கண் - பிரானது ஞானத் திருமேனியில்
எவ்விதவூனமும் இல்லாத கண். வந்த - தோற்றப்பட்ட. ஊறு -
உறுவது. ஆகுபெயராய்ப் புண்ணையும் அதிற் பெருகிய
உதிரத்தையும் குறித்தது. ஊறு - பேறு தொழிலாகு பெயர்கள்.

     அஞ்சி - அவர்க்குத்தீங்கு - ஊறு - நேர்ந்ததற்கு
அஞ்சினாரேயன்றித் தம்கண்ணைத் தோண்டுதற்கு அஞ்சினாரல்லர்
என்பதுதோன்றத் தங்கண் இடந்து அப்ப என்றார்.

     அப்ப உதவும் கை - உதவும் - வலது கண்ணைத்
தோண்ட உதவின என இறந்த காலப் பெயரெச்சமாகவும், இடது
கண்ணைத் தோண்ட உதவி நிற்கும் என காலப் பெயரெச்சமாகவும்,
இடது கண்ணைத் தோண்ட உதவி நிற்கும் என எதிர்காலப்
பெயரெச்சமாகவும் இவ்வரிய செயல்களிரண்டினையும் உதவும்
என்ற ஒரு சொல்லாலே குறிக்க உதவும் சொல் அருமை காண்க.

     உதவும் கை - உயிரின் இச்சையறிந்து உதவுவது கையின்
பண்பு என்பது குறிப்பு; "உடுக்கை யிழந்தவன் கை போல" என்ற
திருக்குறளானறிக என்பார் சுப்பராய செட்டியார்.

     ஏறு உயர்த்தவர் - காளத்தி நாதர். தருமசொருபமாகிய
விடையினை ஊர்ந்து அருள்வது போலஅதனையே கொடியாக
உயர்த்தியும் கையாற்பிடித்தவாறு அவ்வறத்தின் வழியே அன்பு
செய்த இவரையும் கையாற் பிடித்துத் தமது சாயுச்சியத்திற்கு
உயர்த்தினர் என்றது குறிப்பு. விடையின் பாகர் (827) என்றதில்
உரைத்தவை பார்க்க.

     தம்கையால் - சிவலிங்கத்திருமேனியினின்றும் தோன்றிய
கையினாலே, உதவும் கைக்குப் பிரதி உபகாரம் தமது கையாற்
பிடித்தலாம் என்பது போலக் கையாற் பிடித்தனர் என்றதும் குறிப்பு.
இது பெண்ணொரு பாகனது வளையலணிந்த இடக்கை என்று
காளத்தியில் உள்ள வடமொழிக் கல் வெட்டுக் கூறுகிறது.

     என்வலத்தில் - வலத்தில் - வலப்பக்கத்தில்,
இடப்பக்கத்தில் உமையம்மையாரும் திருமாலும் உள்ளார்கள் என்ற
குறிப்பினால் வலத்தில் என்றார். இடம் அம்மையாரது பாகமாக,
வலம் தமது பாகமாதலின் அதனில் நிறுத்தினார் என்பதுமாம்.
அம்மையாருக்கு இடமே இடமாகக் கொடுத்தவர் இவர்க்கும் வலமே
இடமாகக் கொடுத்தார் என்ற நயமும், சக்கரம் வேண்டித் தமது ஒரு
கண்ணைத் தோண்டி அருச்சித்த திருமாலுக்கு எளிய இடப்பாகமும்,
தனக்கென ஒன்றும் வேண்டாது இறைவன் திருக்கண்ணில் வந்த
ஊறுகண்டு அஞ்சி அதன்பொருட்டே தமது ஒருகண்ணை அப்பி
மற்றொது கண்ணையும் உதவ நின்றும் பணி செய்த இவர்க்கு
வலப்பாகமும் கொடுத்தனர் என்ற நயமும்காண்க. வலம் - மேம்பாடு
- வெற்றி - எனக்கொண்டு அன்பே சிவமாவது சிவத்தின்
வலமாதலால் அதனில் நீ நிற்பாய் என்றார் என்ற குறிப்புமாம்.

     மாறு இலாய் வலத்தின் நிற்க என்க - ஒப்பும்
உயர்வுமில்லாதவனே நீ வலத்தில் நிற்பாயாக. வலத்தின் நிற்க -
எனப் பிரித்து, வலம் - வல்லமை, இன் - உவமவுருபு
எனக்கொண்டு, அருள் வடிவாகிய சத்தி "நீரின் தன்மை அனல்
வெம்மையென" அகலாது சமவாயமாக நீக்கமின்றி நிற்றல்போல,
அன்பு வடிவமாகிய நீ் பிறிவறியாது அத்துவிதமாக நிற்க என்பதும்
குறிப்பு. "ஒளியென்ன நில்லென்றான்" என்பது பஞ்சாக்கரப்
பஃறொடை. நிற்க - நிலைபேறு பெற்று நிற்க என்றலுமாம்.

     மன்னு பேரருள் - நிலைபெறும் பெரியதிருவருள். அன்பிற்
பெரியவருக்கு அருளாற்பெரியது செய்தனர் என்க.

     ஏறுகைத்தவர் - என்பதும் பாடம். 180