838.
|
இந்நெறி
யொழுகு நாளி லிலம்பாடு நீடு செல்ல
நன்னில முற்றும் விற்று நாடிய வடிமை விற்றும்
பன்னெடுந் தனங்கண் மாளப் பயின்மனை வாழ்க்கை
தன்னின்
மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள்.
8 |
(இ-ள்.)
வெளிப்படை. இந்நெறியிலே ஒழுகுகின்ற காலத்தில்
வறுமை மிகவும் முடுகியதாதலின், தமது நல்ல நிலங்களையெல்லாம்
விற்றும், நாடியுள்ள அடிமைகளை விற்றும் இவ்வாறு தமது பல
அரிய செல்வங்கள் எல்லாம் தீர்ந்து போயினவாகவே, பயின்ற
இல்வாழ்க்கையிற் பொருந்திய சுற்றத்தார்களுடனே மக்களும்
வருந்தினார்கள்.
(வி-ரை.) இந்நெறி - மேற்பாட்டிற்
கூறியபடி வறுமை
வந்தடைந்த பின்னும் முன் செய்பணியில் தவாமை உய்த்த
ஒழுக்கம்.
இலம்பாடு
- இல்லாமை - வறுமை. நீடு செல்லுதல் -
மிக
முடுகுதல்.
நன்னிலம்
- நன்செய். உணவுக்கு இன்றியமையாத
நெல்லினை நேரே தருதலால் இவற்றை நல் என்ற அடைமொழி
தந்து வழங்குவது மரபு. ஏனைநிலங்கள் தரும் விளைவுகள்
நெல்லைப்போல அத்துணைச் சிறப்பில ஆகலான் அவற்றைப்
புன்செய் என வழங்குவர். நன்னிலம்
- சிறந்த விலையுயர்ந்த
நிலம் என்றலுமாம்.
முற்றும்விற்றும்
- முற்றும் - என்ற முற்றும்மை நல்ல
நிலங்களினும் ஒன்றும் எஞ்சாமை குறித்தது. புன்செய்கள்
இன்றியமையாதனவல்ல ஆதலானும், வருவாய் குறைந்தனவாகலானும்
பல நிலங்களுமுடையவன் விற்கவேண்டிவரின் அவற்றையே முதலில்
விற்பன். அதன் பின்னரே ஏனை நல்லனவற்றில் தனக்கு உணவுக்கு
வேண்டும் அளவுமட்டில் வைத்துக் கொண்டு, ஏனையவற்றை
விற்பன். இங்கு அவ்வாறன்றி நல்ல நில முழுதும் விற்றனர்
என்பதாம்.
நாடிய
அடிமை - தம்மையே ஆதரவாக நாடியுள்ள
எனவும், தாம் நாடிக்கொண்ட எனவும் இருவழியும் கொள்ள
நின்றது. அடிமைகளைக் கொள்ளுதலும் விற்றலும் அக்காலத்து
வழக்கு. அடிமை விற்பனை ஆங்கிலேயராளுகையின் பின்
அரசாங்க நியமமாகிய சட்டங்களால் ஒழிக்கப்பட்டதென்பர். ஆள்
அடமானப் பத்திரங்களும், முன்தொகை பெற்ற கூலி
ஒப்பந்தங்களும் முதலாயின இன்றைக்கும் நடைமுறையில்
உள்ளனவாதலின் அடிமை விற்பனையும் அடிமை ஒற்றியும்
உண்மையில் ஒழிந்தனவாகக் கருத இடமில்லை. முன்னைநாளில்
பிறப்பாலும் இசைவு என்ற ஒப்பந்தத்தாலும் இருவகை அடிமை
வழக்கம் உண்டென்பது தடுத்தாட் கொண்ட புராணத்துட் (183 -
210) காணப்படும். மனைவியையும் விற்கும் வழக்கும் உள்ளதென்பது
கலிநீதி நாயனார் புராணத்தாலும், அரிச்சந்திரன் கதை
முதலியவற்றாலும் அறியப்படும், ‘இருந்தென்னையாண்டுகொள்
விற்றுக்கொள் ஒற்றிவை' (திருவாசகம் - நீத் - விண் - 18),
"தனியேனென்றென்னை, ஊன்றிநின்றாரைவர்க் கொற்றிவைத்தாய்
பின்னையொற்றியெல்லாஞ், சோன்றுகொண்டாய்" (அப்பர்
தேவாரம் - திருவிருத்தம் - திருவேகம்பம் - 9) முதலிய
திருவாக்குக்களால் அடிமைகளை விற்பதேயன்றி ஒற்றிவைக்கும்
வழக்கும் உண்டென் பதறியப்படும். இதுபற்றி இந்நாள் நவீனர்
கூறும் இகழ்ந்துரைகள் பொருளிலவாமென்றொழிக. என்னை?
உலகமுழுதும் ஒருவனுக்கொருவன் அடிமைப்பட்டே - அடிமை
வேலை செய்தே - உலக வாழ்க்கை நடைபெறுகின்றது. எந்த
உருவத்திலாயினும் அடிமை செய்யாது உலகம் நடைபெறாதென்பது
சிறிது ஆராய்வோருக்கும் பெரிதும் புலனாமென்க. இவ்வாறு பல
வழியாலும் பல உருவத்தாலும் உலகத்துக்கு அடிமையாதலை ஒழித்து
இறைவனுக்கு அடிமைப்பட்டு நிற்போமாயின் எல்லாத் தீங்கையும்
நீங்கி இன்பமடைவோம் என்பது வேதசிவாகமங்களின் துணிபாம்.
இதுவே அநாதியாக அறிஞர்கள் கைக்கொண்டொழுகும்
ஒழுக்கமுமாம். "மீளா அடிமை யுமக்கே யாளாய்ப் பிறரை
வேண்டாதே ... ஆளாயிருக்கும் அடியார்" என்ற நம்பிகள்
திருவாக்கினால் அடிமையிலிருந்து மீட்டுக் கொள்ளுதலும்
உண்டென்பது போதரும். "ஆளெனப் புதிதின்வந் தடைந்தில
மத்தநின், றாளினேவல் தலையி னியற்றி, வழி வழி வந்த மரபினம்"
என்ற கோயினான் மணிமாலை (24)யும், "கொற்றத் திறலெந்தை
தந்தைதன் றந்தையெங் கூட்டமெல்லாந், தெற்றச் சடையாய்
நினதடியேம்" என்ற திருத்தொண்டர் திருவந்தாதி(35)யும், இதனை
எடுத்தாண்டு "எம்பிரானெந்தை தந்தை தந்தையெங் கூட்ட
மெல்லாந், தம்பிரா னீரே யென்று வழிவழிச் சார்ந்து வாழு,
மிம்பரின் மிக்க வாழ்க்கையென்னை" என்ற ஏயர்கோன் புராணம்
(392), "யானு மென்பால் வருமுறை மரபுளோரும் வழித்தொண்டு
செய்தற்கோலை" (205), காண்க. இவற்றால் வழி வழிவரும் அடிமை
வழக்கமும் உண்டென்பதும் பெறப்படும்.
பல்
நெடும் தனங்கள் - பலவகைப்பட்ட பெருத்த
செல்வங்கள். வகையாலும் தொகையாலும் பெருமை குறிக்கப்
பல - நெடு(மை) என்ற இரண் டடைமொழிகள்
புணர்த்தியோதினார். அசையாப் பொருளும் அறிவில்
பொருளுமாகிய உடைமைகளிற் சிறந்தநன்னிலங்களை முதலிற் கூறிக்
கழித்ததுவும், அதன்பின் அசையும் பொருள்களும் அறிவுடைப்
பொருள்களுமாகிய அடிமைகளை கூறிக் கழித்ததுவும் கருத்தக்கது.
எனவே நிலமுதல் அடிமைவரை எல்லாவவகைப்
பெருஞ்செல்வங்களும் விற்கப்பட்டுக் கழிந்தன என்க. அதுபற்றி
மாள என்றதும்காண்க.
சுற்றத்தோடு
மக்களும் - சிறப்புக் காட்டும் ஒடு
உருபைச்
சுற்றத்துடன் சார்த்தியோதியது இல்வாழ்க்கை நிலையில்
சுற்றந்தழுவலின் இன்றியமையாச் சிறப்பையும், காலத்தாற் சுற்றம்வந்த
பின்னரே மக்கள் வரும் முறைமைச் சிறப்பையும் வற்புறுத்துதற்கு.
"பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல், சுற்றத்தார்கண்ணேயுள"
என்ற திருக்குறளும் காண்க. மக்களும் - வருந்தப் பாராத மக்களும்
என உம்மை உயர்ந்த சிறப்பு. மக்கள் வருந்தியது கூறவே தாமும்
மனைவியாரும் முன்னர்
வருந்தியது கூறாமலே பெறப்படுமாதலின்
அதனைக் கூறாது விடுத்தனர். சுற்றத்தாராவார் "அற்ற குளத்தி
லறுநீர்ப் பறவைபோ, லுற்றுழித் தீர்வா ருறவல்ல - ரக்குளத்திற்,
கொட்டியு மாம்பலு நெய்தலும் போலவே, யொட்டியுலர்வா ருறவு"
என்றபடி செல்வத்திற்கூடி வறுமை வந்தகாலத்தில் நீங்கிவிடாது,
தாமும் கூடவே ஒட்டி உலரும் உறவாவார். ஆதலின் இவர்களை
வறுமையிலும் காத்தல் கடனாயிற்று. இதனை "ஒக்கல்" என
ஐம்புலத்தார் கடனுள் ஒன்றாக வைத்தோதியது நீதிநூல். இது
பற்றியே இவர்களையும் மக்களையும் ஒன்றுபோலவே பார்த்து
அம்மையார் தாலி கொடுத்து நெற் கொள்ளச்சொன்னார் என்க. 8
|