840.

அப்பொழு ததனைக் கொண்டு நெற்கொள்வா
                           னவரும் போக
வொப்பில்குங் குலியங்கொண்டோர் வணிகனுமெதிர்
                              வந்துற்றான்;
"இப்பொதி யென்கொ?" லென்றார்க் குள்ளவா
                            றியம்பக் கேட்டு
முப்புரி முந்நூன் மார்பர் முகமலர்ந் திதனைச்
                             சொன்னார்.
10

     840. (இ-ள்.) வெளிப்படை. அப்பொழுது அத்தாலியினைக்
கொண்டு நெற்கொள்ளும் பொருட்டு அவரும் போக, ஒப்பற்ற
குங்குலியப் பொதியினைக் கொண்டு ஒரு வணிகன் எதிரே வந்து
சேர்ந்தனன். "இந்தப்பொதிஎன்ன" என்று கேட்டவருக்கு அவன்
உள்ளபடி சொல்ல அதனைக் கேட்டு முப்புரியாகிய மூன்று நூல்
அணிந்த மார்பினையுடைய அவர் முகமலர்ச்சியுடன் பின்வருமாறு
சொல்வாராயினர். 10

     840. (வி-ரை.) அவரும் நெற்கொள்வான் - போக -
என்க. கொள்வான் - கொள்ளும் பொருட்டு. வானீற்று
வினையெச்சம்.

     ஒப்பில் - ஒப்பற்ற தன்மையாவது இன்று அது
கொண்டதனால் விளையும் பயன் குறித்தது.

     ஓர் வணிகன் - குங்குலியமும் ஒப்பற்றது. அதனைக்
கொணர்ந்தவனும் ஒப்பற்றவன் என்பார் ஓர் என்றார். இறைவனே
இவ்வாறு எழுந்தருளினனோ என்பதும் குறிப்பு. "திருத்தொண்டர்
ஒருவர்" என்ற காரைக்காலம்மையார் புராணத்(17)திலும் இக்குறிப்புக்
காண்க.

     என்றார்க்கு - என்று கேட்டாராகிய அவருக்கு. மார்பர் -
கேட்ட அந்த மார்பர் என அகரச்சுட்டு வருவிக்க. முப்புரிமுந்நூல்
- 835 பார்க்க. மக்களும் (838) மைந்தரும் (839) என்றமையால்
மூன்று இழைநூல் மூன்று அணிந்தவர் என்க.

     முகமலர்ந்து - முகமலர்ச்சி அகமலர்ச்சியாலாகிய மெய்ப்பாடு.
அகமகிழ்வின் காரணம் நாயனார் திருவாக்கில் வைத்து ஆசிரியர்
கூறுகின்றார். "அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங், கடுத்தது
நாட்டு முகம்" என்பது குறள். முகமலர்ச்சியாலன்றி அகமலர்ச்சி
காணவொண்ணாதாதலின் முகமலர்ச்சி கூறவே இரண்டும்
பெறப்பட்டது. சிந்தைமகிழ முகமலரும். அதற்கேற்ற மொழி பின்னர்
வரும். அம்முறையில் வைத்து ஓதியதும் காண்க. இதனை -
வரும்பாட்டிற் கூறுகின்றதனை.

     வெண்ணூல்மார்பர் - என்பதும் பாடம்.