871. மனைசாலு நிலையறத்தின் வழிவந்த வளம்பெருகும்
வினைசாலு முழவுதொழில் மிக்கபெருங் குடிதுவன்றிப்
புனைசாயன் மயிலனையார் நடம்புரியப் புகன்முழவங்
கனைசாறு மிடைவீதிக் கஞ்சாறு விளங்கியதால்.
  6

     (இ-ள்.) புனைசாயல்.....கஞ்சாறு - அணிபுனைந்த சாயலின்
மயில்போன்ற பெண்கள் நடமாட அதற்கிசைய ஒலிக்கும் முழவுகள்
முழங்குகின்ற விழாச்சிறப்புக்கள் மிக்க வீதிகளையுடைய
கஞ்சாறூர்;
மனைசாலும்......துவன்றி - சால்பு பொருந்திய நிலைத்த
இல்லறத்தின் வழியிலே வந்த வளங்கள் பெருக உடையனவும்
உழவு தொழிலாகிய நல்வினை பூண்ட பெருமை மிக்கனவும் ஆகிய
குடிகள் நிறைந்து; விளங்கியது - விளக்க முற்றதாம். (ஆல் - அசை)

     (வி-ரை.) சாலும் மனையறம் - நிலைமனையறம் என்று
தனித்தனி கூட்டுக - சால்பாவது நன்னெறியிற் போதியதாந் தன்மை.
"சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய வங்கண் மூதூர்" (மூர்த்தி -
புரா - 5) என்றதும் பிறவும் காண்க. மனையறம் - இல்லின்க
ணிருந்து செய்யும் அறம். நிலை - ஆச்சிரமுமாம். சாலுதலாவது
ஏனை மூன்று நினையினர்க்கும் உண்டியும் மருந்தும் உறையுளும்
முதலியன உதவும் நிறைவுடைமை என்பதும் பொருந்தும்.

     சாலும் மனையறத்தின் வழிவந்த வளம்........பெருகும்
குடி
- அறநூல்களுள் விதிக்கப்பட்டவாறே இல்லற நடத்தி அதன்
வழியால் வந்த வளங்கள் பெருகவாழும் குடிகள் என்க.
இல்லறத்தின் சால்புக்குரிய விதிகள் திருக்குறள் முதலிய
அறநூல்களுட் காண்க. இதன் அருமைப்பாட்டைச் சிதம்பர
மும்மணிக்கோவையில் குமரகுருபர சுவாமிகள் தொகுத்தருளியவாற்றாலும், பிறவாற்றாலும் அறிந்துகொள்க. இதன்
அருமையும் பெருமையும் குறித்தே இதனை ஈண்டுக்
குடிச்சிறப்புரைக்கும் பகுதியுள் முதற்கண் வைத்து விதந்து கூறினார்.

     வினைசாலும் உழவுதொழில் - தொழில்களுள் எல்லாம்
சால்பு - நன்மை - மிக்கது. உழவு தொழில் என்பதாம். "சுழன்று
மேர்ப்பின்ன துலகம்" என்றும், "அஃதாற்றா தெழுவாரை யெல்லாம்
பொறுத்"தலினால் "உழுவார் உலகத்தார்க்காணி" என்றும்,
"மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" என்றும் காரணங்
காட்டித் திருவள்ளுவ நாயனார் எல்லாத் தொழிலினும்
"உழவேதலை" யாதலை வற்புறுத்தியுள்ளது காண்க. இக்கருத்துப்
பற்றியே வினைசாலும் என்றும், அதனாலே மிக்க என்றும்,
அதனாலே பெருமை பெற்றதென்பார் பெருங்குடி என்றும்
கூறினார். "மேழிச் செல்வம் கோழை படாது" என்பது நீதி.

     புனை - அணிபுனை என்ற எழுவாய் வருவிக்க. சாயல்
மயில் அனையார்
- சாயல் - சாயலின். உவமைக்குப் பொதுத்
தன்மை கூறியபடி. ஒப்புப் பொருளில் வந்த ஐந்தனுருபு விரிக்க.

     நடம்புரியப் புகல்முழவம் கனை சாறு - சாறு - விழா;
இங்கு மக்கள் பொருட்டாக நிகழும் மண முதலிய சிறப்புக்கள்
குறித்தது. நடம்புரியப் புகல்முழவம் - ஆடற் பெண்கள் நடமாட
அதற்குப் பொருந்த முழக்கப்படும் முழவு. ஆடலும் அதற்கிசைந்த
முழவும் விழாவிற்குரிய அங்கங்களாம். "மடவார்கள் நடமாட
முழவதிர", "தேந்தா மென்றரங்கேறிச் சேயிழையார் நடமாடும்",
"முகில்முழவ மயில்கள்பல நடமாட" எனவரும் ஆளுடைய
பிள்ளையார் தேவார முதலியன காண்க. புகல் - ஆடலுக்கு
இசையச் சத்தித்தல் குறித்தது. ஆடலுக்குப் பொருந்தப் பேசுவது
போலும் என்று உருவக நயம்படவுங் கொள்க. கனை என்ற
குறிப்பும் அது. கனைத்தல் - சத்தித்தல். புகல் எல்லாராலும்
எடுத்துச் சொல்லப்பட்ட என்றுரைப்பாருமுண்டு.

     நடமாடப் புகல் முழவம் - நடமாடும் ஒலியலைகள் தாக்க,
அவ்வதிர்ச்சியினால் தானாகவே சத்திக்கின்ற முழவு என்றலுமாம்.

     மேற்பாட்டிற் கூறிய மாடம், அரங்கு, மறுகு என்ற
மூன்றினும் அம்முறையே தொடர்ந்து, மாடம் - பெருங்குடி-துவன்றி
எனவும், அரங்கம் - மயிலனையார் நடம் புரியப் புகல்முழவம்
எனவும், மறுகு - சாறுமிடை வீதி எனவும் சிறப்புக் கூறியது காண்க.

     இவ்விரண்டு பாட்டினும் கூறிய கொடி, தோரணம், பூரண
கும்பம், நடம்புரியப் புகல் முழவம், சாறு என்பன இச்சரிதத்தினுள்
வரும் மணத்திறத்தின் பெருவிழாச் சிறப்பினையும், மனைசாலும்
நிலையறம் - உழவு தொழில் - பெருங்குடி என்பன நாயனாரையும்,
கலிக்காமனாரையும்; நகிற்கொடி, சாயல் மயிலனையார் நாயனாரின்
மகளாரையும் குறிப்பாலுணர்த்துவதும் காண்க.

     கனைசாறு - கஞ்சாறு - சொல்லணி. 866 பார்க்க.
கஞ்சாறு
- ஊர்ப்பெயர். தேவார ஆட்சி போற்றப்பட்டது.
தலவிசேடம் பார்க்க.

     வழிவந்து - புனைமுழவம் - என்பனவும் பாடங்கள். 6