892. நற்றவராம் பெருமானார் நலமிகுமன் பரைநோக்கி
"யுற்றசெயன் மங்கலமிங் கொழுகுவதென்" னென,
                                "வடியேன்
பெற்றதொரு பெண்கொடிதன் வதுவை"யெனப்,
                               பெருந்தவரும்
"மற்றுமக்குச் சோபனமா குவ"தென்று
                          வாய்மொழிந்தார்.
 27

     (இ-ள்.) வெளிப்படை. நல்ல தவராக வந்த இறைவனார்,
நன்மை மிகும்அன்பராகிய மானக்கஞ்சாறரைப் பார்த்து, "இங்கு
மங்கலம் பொருந்த நிகழ்வதாகிய செயல் என்ன?" என்று கேட்க,
அவர் அடியேன் பெற்றதொரு பெண்கொடியின் மணநிகழ்ச்சியிது "
என்று சொல்லப், பெருந்தவர் "உமக்கு மற்று மங்கலம்
உண்டாகக்கடவது" என்று வாய்மொழிந்தார்.

     (வி-ரை.) தவராம் மாவிரத முனிவராம் வேடம்பூண்ட.
நலம் மிகும்
- முன்னரும் நலமுடையார்; இப்போது மேலும் நலம்
மிகப்பெறுகின்றார் - பெறவுள்ளார் என்க. சரித நிகழ்ச்சிக் குறிப்பு.

     இங்கு மங்கலம் உற்ற செயல் ஒழகுவது என்? என
மாற்றுக. அச்செயலாவன சுற்றமெலாங் களி சிறப்ப முளைப்பெய்து,
மூதூர் வதுவை முகங் கோடித்த செயல் முதலியன (884). இவற்றை
"மணவினைக் கமைந்த செய்கை மாதினைப் பயந்தார் செய்ய" (158)
என்றது காண்க. ஆளுடையபிள்ளையார் புராணம் 1172 - 1181
திருப்பாட்டுக்களில் இவை விரித்தோதப்பட்டதும் பார்க்க. நாம்
இங்கு உற்ற செயலாவது மங்கலமாம் என்ற பொருள்பட உரைக்க
நின்றதும் காண்க.

     பெற்றது ஒரு பெண் கொடி - பெற்றது - பிழைக்கு நெறி
தமக்கு உதவப்பெற்றது என்ற குறிப்புப் பெறக் கூறினார். கொடி
என்றதற் கேற்பப் பெற்றது என அஃறிணையிற் கூறினார். ஒரு -
ஒப்பற்ற என்றதும் குறிப்பு. பெண்கொடி - (876) பார்க்க.
பொற்கொடி (877), மடக்கொடி (894) என்பவை காண்க.

     பெருந்தவர் - மாவிரத முனிவர் என மேற்பாட்டிலும்,
நற்றவர் என இப்பாட்டிலும், ஞானச் செய்தவர் என வரும்
பாட்டிலும் கூறியது காண்க. பெருந்தவர் என்றது சுட்டுப்பெயராய்
நின்றது.

     மற்று - மற்றும் - வேறு என்பது வெளிப்பொருள். நீர்
எண்ணிய வதுவையாகிய மங்கலம் நீர் காணப்பெறீர்; மற்று அதனின்
நல்ல சோபனமாகிய "ஐயர் பெருங்கருணைத் திறம்போற்றும்
பெரும்பேறு" (898) என்ற முத்திப் பேறு உமக்கு ஆகுக என்ற
குறிப்பினாற் பெறும் உள்ளுறைப் பொருளும் காண்க.

     சோபனம் - மங்கலம் - நன்மை. சுபம் என்ற சொல்லடியாற்
பிறந்த பெயர். சுபத்தால் விளையும் பயன். வாய் மொழிதல் -
ஆசிகூறுதல். 27