896. |
வாங்குவார்
போனின்ற மறைப்பொருளா
மவர்மறைந்து
பாங்கின்மலை வல்லியுடன் பழையமழ விடையேறி
யோங்கியவிண் மிசைவந்தா; ரொளிவிசும்பு
நிலநெருங்கத்
தூங்கியபொன் மலர்மாரி; தொழும்பர்தொழு
தெதிர்விழுந்தார். 31 |
|
896.
(இ-ள்.) வெளிப்படை. அதனை வாங்குவார்போல
நின்ற மறைப் பொருளாகிய அவர் மறைந்து, பக்கத்தில்
பார்வதியம்மையாரோடு, தமது பழைய இளைய இடப
வேற்றினையேறி, மேலோங்கிய ஆகாயத்தின் மேல் வெளிப்பட்டு
வந்தருளினர். ஒளி பொருந்திய ஆகாயமும் நிலமும் நிறைய
அழகிய கற்பகப் பூமாரி பெய்தது. அன்பராகிய மானக்கஞ்சாறனார்
தொழுது எதிரே நிலமுற வீழ்ந்தனர். 31
896. (வி-ரை.)
நின்ற - மேலே எதிர்நின்ற (895)
என்றார்.
திருவுருத்திரம், நின்ற திருத்தாண்டகம் முதலிய
திருமறைகளாலறியப்படுமாறு, எல்லாமாய் நிற்பவராதலின் மாவிரத
முனிவராய் வந்து நின்றார் - எதிர் நின்றார் - இங்குவாங்கு
வார்போல் - நின்றார். இனி அவரே மறைந்து நிற்பார் - விடைமே
னிற்பார் என்க. இதுபற்றியே இங்கு மறைப்பொருளாமவர் என்றும்,
மறைந்து என்றும் கூறியதாம். மறைப்பொருளாம் அவர்
என்றது
தம் உண்மைக்கோல மறைந்துவரும் பொருள் என்று குறிப்பதும்
காண்க.
மலைவல்லி
- மலையரசன்
மகளாய்வந்த கொடிபோல்
வாராகிய உமையம்மை.
பாங்கின்
- ஒரு கூற்றிலே. பாங்கின் வந்தார் என்று
கூட்டி, அருளும் பாங்கிலே இவ்வாறு அருட்கூறுடன் வெளிப்பட
எழுந்தருளினர் என்றலுமாம்.
பழைய
மழவிடை - பழைய - எஞ்ஞான்றும் தமக்குரிய
என்ற பொருளில் வந்தது. மழ என்றது எண்ணிலாக்காலத்தாற்
பழமைபெரினும், மாறாத இளமையுடையதெனக் குறித்தது.
ஓங்கிய
விண் - எல்லாவற்றினும் உயர்ந்து நிறைந்த
ஞானாகாயம். முன்னர்க் கீழே இருநிலத்தின் மிசைத் திருவடிதோய
வந்தவர் (889), இங்கு மேல் ஓங்கிய விண்மிசை வந்தார் என்க.
பொன்மலர்
மாரி தூங்கிய - பொன்மலர் - பொன்
அழகு குறித்தது. பொன்னிறமுடைய கற்பகமலர் என்பாருமுண்டு.
தூங்கியது என்பது துவ்வீறுகுறைந்து நின்றது.
தூங்கிய
பொன்மலர் மாரி - மிக்க கற்பகப் பூமழை நெருங்க என்றலுமாம்.
தூங்கிருள் என்றதற்குச் செறிந்த இருள் என்று நச்சினார்க்கினியர்
உரை கொள்வது காண்க.
விசும்பு
நிலம் - விசும்பும் நிலமும். எண்ணும்மைகள்
தொக்கன. விசும்பின் நிலம் நெருங்க என்பது
பாடமாயின்
ஆகாயத்தின் வெளி முழுதும் என்க. விசும்பினின்றும் நிலத்தின்
மேல் நெருங்க என்றலுமாம்.
தொழுது
எதிர் விழுந்தார் - தொழுதுகொண்டே கீழ்
வீழ்ந்தனர். "தொழு தெழுவான்" என்ற குறளிற்போலக் கொள்க.
வந்தனைக்கண்டவுடன் தொழுதலும் வீழ்தலும் ஒருங்கே
நிகழ்ந்தனவாயினும் அவ்விரண்டனுள் முன்னைப் பழக்கத்தாற்
கைகள் தாமாக முன்னர்ச் சிரமேற் குவிந்தன என்பார் தொழுது
எனமுன் வைத்தனர். இதுபற்றியே இங்குத் தொழும்பர்
என்ற
சொல்லாற்கூறினார். "தொண்டர்க்கே யேவல்செயும் தொழில்
பூண்டார்" (873) எனத் தொடக்கத்திற் கூறியதனை நினைக்க. 31
|