898. |
மருங்குபெருங்
கணநாதர் போற்றிசைப்ப
வானவர்கள்
நெருங்கவிடை மேற்கொண்டு நின்றவர்முன்
னின்றவர்தாம்
ஒருங்கியநெஞ் சொடுகரங்க ளுச்சியின்மேற்
குவித்தையார்
பெருங்கருணைத் திறம்போற்றும் பெரும்பேறு
நேர்பெற்றார். 33 |
(இ-ள்.)
வெளிப்படை. பக்கத்திற் பெரிய கணநாதர்கள்
துதிக்கவும், தேவர்கள் நெருங்கி வரவும், இடபவாகனத்தினை ஏறி
வந்துநின்ற பெருமாள் முன் நின்றவராகிய மானக்கஞ்சாறனார்,
ஒன்றுபட்ட மனத்துடனே, கைகளை உச்சிமேற் கூப்பிக்கொண்டு.
சிவபெருமானது பெரிய கருணைத் திறத்தை எந்நாளும் துதிக்கும்
பெரும்பேற்றினை நேரே பெற்றனர்.
(வி-ரை.)
பெருங்கணநாதர் - பெரிய சிவகணத்
தலைவர்கள்.
நின்றவர்முன்
நின்றவர் - சொற்பொருட்பின் வருநிலை.
(விடைமிசை) நின்றவர் என்றதற்கு வந்துநின்ற
இறைவர் எனவும்,
(முன்) நின்றவர் என்றதற்கு எழுந்து நின்றவர் எனவும் கொள்க
ஒருங்கிய
நெஞ்சு - "ஒன்றியிருந்து நினைமின்கள்" (கோயில்
திருவிருத்தம்), "ஒருங்கிய மனத்தோடு" (திருவெழுகூற்றிருக்கை),
"ஒருவனையு மல்லா துணரா துள்ளம்" (திருத்தாண்டகம்) என்றபடி
பிறிதொன்றிலும் செல்லாது. சிவபெருமானிடத்தில் முழுமையும்
நிலைத்த மனம்.
கரங்கள்
உச்சியின்மேற் குவித்து - "தொழுது விழுந்தார்"
(896) என்றது போல இச்செயல் பயிற்சி வசத்தால் தானாகவே
நிகழ்வது.
ஐயர்
- பெருமையையுடையவர்
- சிவபெருமான்.
பெருங்கருணைத்திறம்
- தம்மையும் ஒரு பொருட்படுத்தி
இறைவர் தாமே மாவிரதியாராக வந்தும், மயிரினைக்கேட்டும்,
மறைந்தும், விடைமேல் வெளிப்படவந்தும், பரிவு புவனங்களில் ஏறச்
செய்தோம் என்றும் செய்த அருட்டிறங்களையே பேரருள் என்று
எண்ணியெண்ணிச் சிந்தைநைந்து போற்றினாராதலின் திறம்
போற்றும் என்றார்.
நெஞ்சு
- கரம் - போற்றும் - என்றவற்றால் முறையே
மனம் - மெய் - மொழி என்ற முக்கரணங்களின் செயலும்
கூறினார்.
ஒருங்கிய
நெஞ்சொடு - முக்கரணங்களும் இறைவர்
பாலனவாக ஒருவழிப்பட்டுச் சென்றன என்பார் ஒருங்கிய
என்றார்.
ஏனை, மெய்ம்மொழிகளின் தொழில்களுக்கும் மன இயக்கமே
காரணமாதற் சிறப்புடைமை பற்றி ஒருங்கிய நெஞ்சொடு என்று
அவற்றை மனத்தொடு புணர்த்தியோதினார். பெரும்பேறு -
பெறுதற் கரிய பெரிய பேறு. இங்கு இறைவர்பாற் கூடுதலாகிய
முத்திப்பேறு குறித்தது. திருவடிமறவாது போற்றி யிருத்தல் முத்தி
யிலக்கணமென்பர். "ஏகமாய் நின்றே" என்னும் சிவஞானபோதம்
நோக்குக.
நேர்பெற்றார்
- நேரே பெற்றனர் என்க. உடனே பெற்றார்
என்றலுமாம். நேராகப் பெற்றார் - அடையப்பெற்றார் என்பாரு
முண்டு. 33
|