907. தாய னாரெனு நாமந் தரித்துளார்;
சேய காலந் தொடர்ந்துந் தெளிவிலா
மாய னார்மண் கிளைத்தறி யாதவத்
தூய நாண்மலர்ப் பாதந் தொடர்ந்துளார்.
  5

     (இ-ள்.) வெளிப்படை. (அவர்) தாயனார் என்ற பெயரைத்
தாங்கியவர்; நெடுங்காலம் தொடர்ந்திருந்தும் தெளிதலிலாத
திருமாலானவர் மண்ணைத் தோண்டித் தேடியும் அறியாத அந்தத்
தூய புதியமலர் போன்ற பாதங்களைத் தொடர்ந்துள்ளவர்.

     (வி-ரை.) அவர் என எழுவாய் வருவிக்க. அவர் தரித்துளார்.
தொடர்ந்துளார் என்க.

     நாமம் தரித்துளார் - பெயரைத் தாங்கினார் என்றதனால்
பெற்றோராலிடப்பட்ட அப்பெயருக்குத் தக்கபடி ஒழுகி அதனைத்
தாங்கியவர் என்றதாம். தாய் அனார் - எவ்வுயிர்க்கும் தாய்
போன்ற அன்புடைமை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பு.

     சேயகாலம்........மாயனார் - நெடுங்காலம் பிரியாத
தொடர்புடையராய் இருந்தும் "இவன் இறைவன்" என்று தெளிவு
படாத விட்டுணு. இவர் இறைவனுக்குச் சத்தியாகவும் கூறப்படுவர்.
இவ்வாறு நெடுங்காலம் நெருங்கிய தொடர்புடனிருந்தும் மாயையான்
மயங்கித் தெளிவுபடாது "யான் தேடிக் காண்பேன்" என்று
மண்கிளைத்துத்தேடியும் அறியாது நின்றவர் என்க. "தாவியவ
னுடனிருந்தும் காணாத தற்பரன்" (திருஞான - தேவா -
திருக்கோளிலி) என்ற கருத்தும், இலிங்கபுராணத் திருக்
குறுந்தொகைக் கருத்துக்களும் இங்குச் சிந்திக்கத்தக்கன.

     மாயனார் - மாயத்துட்பட்டு மயங்கியவர் என்பது குறிப்பு.
சேய
- நீண்ட.

     தொடர்தல் - இடைவிடாத தொடர்ச்சியுடையராதல்.
தெளிவு
- அவர் இறைவன் என்றும் தாம் அவரால் ஆளாகக்
கொள்ளப்பட்ட அடிமை என்றும், அவர் அறிவித்தாலன்றி
அறியப்படாதவர் என்றும் தெளிவுபட உணர்தல்.

     தெளிவிலா மாயனார் மண் கிளைத்து அறியா -
மாயனார் ஆதலின் தெளிவிலர்; தெளிவிலாராதலின் கிளைத்தனர்;
கிளைத்தனராயினும் அறியார் என்க.

     மண்கிளைத்து - நிலத்தைப் பிளந்து - தோண்டி.
இவ்வாறன்றித் தெளிவிலா மாயனார் மண்கிளைத்துச் சேயகாலம்
தொடர்ந்தும் அறியாத என்று கொண்டு கூட்டி உரைப்பினுமமையும்.

     அத்தூய நாண்மலர்ப் பாதம் - அ - அந்த. பண்டறிசுட்டு.
தூய்மை
- இயல்பாகவே பாசங்களின் நீங்கும் இறைமைத்தன்மை.
நாண்மலர்
- "புதியையா யினியை யாம் பூந்தென்றால்" (திருநா -
தேவா - பழந்தக்க - திருப்பழனம் - 4) என்றபடி பதுமையும்
இனிமையும் குறித்தது. இறைவன் திருவடி "பின்னைப் புதுமைக்கும்
பெற்றிய" தாம் தன்மையது. மலர் - தாமரைப்பூ. அது வெண்மை
நிறம், நறுமணம், இனிய ஊறு, தேனின் சுவை, வண்டின் ஓசை
என்பது முற்றும் இனிமை பயப்பது. "மாசில் வீணை ... இணையடி
நீழலே" என்ற அப்பர் சுவாமிகள் தேவாரக் கருத்தையும்,
"என்னுளும் திகழும் சேவடி" என்ற இத்தலத் தேவாரமும் இங்குச்
சிந்திக்க.

     மாயனார் தொடர்ந்தும் தெளிவிலாப் பாதம் தொடர்ந்து
உளார் - மாயனாரும் தொடர்ந்து
எனச் சிறப்பும்மை பிரித்துக்
கூட்டுக. அவரும் தொடர்ந்து தெளியாது - அறியாது - விட்ட
பாதங்களைத் தாம் தெளிந்தும், அறிந்தும், தொடர்ந்தும் விடாது
பற்றியவர் என இவரது உயர்வு குறித்தது. உளார் - முக்காலத்தும்
அத்தொடர்ச்சியுள் நிறைந்துள்ளவர். தொடர்ந்ததனால் உளராயினர்
என்று காரண காரியப் பொருள்பட உரைத்தலுமாம். "கருவ ருந்தியி
னான்முகன் கண்ணனென், றிருவரும் தெரியா ஒருவன்" (திருஞான -
தேவா - கௌசிகம் - தண்டலை நீணெறி - 9) என்ற கருத்தை
இங்கு வைத்துக் காண்க. 5