908. மின்னு செஞ்சடை வேதியர்க் காமென்று
செந்நெ லின்னமு தோடுசெங் கீரையும்
மன்னு பைந்துணர் மாவடு வுங்கொணர்ந்
தன்ன வென்று மமுதுசெய் விப்பரால்.     
5

     (இ-ள்.) வெளிப்படை. விளங்குகின்ற சிவந்த
சடையினையுடைய வேதியராகிய சிவபெருமானுக்கு ஆகுமென்று
செந்நெலரிசியின் இனிய அமுதுடன், செங்கீரையும், நிலைத்த
பசுங்கொத்தாகிய மாவடுவையும் கொண்டு அவற்றை ஒவ்வொரு
நாளும் நியதியாய் அவரை அமுது செய்விப்பர் (தாயனார்).

     (வி-ரை.) மின்னு செஞ்சடை - "மாலையின் தாங்குருவே
போலும் சடைக்கற்றை" (அற் - திருவந் 65), "மின்வண்ணம்
எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை" (பொன் - அந் - 1) முதலிய
திருவாக்குக்கள் காண்க. சடைசெவ்வான வொளியுடையது என்க.
தாயனார் அமுதுசெய்வித்து வழிபட்ட இறைவர் திருத்தண்டலை
நீணெறியில் எழுந்தருளிய மூர்த்தி என்றறியப்படுகின்றது.
இத்தலத்தேவராத்தில் "சுரும்புந் தும்பியுஞ் சூழ்சடையார்" என்று
ஆளுடைய பிள்ளையார் இவரது சடையினைச் சிறப்பித்தருளியது
சிந்திக்க.

     வேதியர்க்கு ஆகும் - வேதியரது பூசைக்கு உரியன ஆகும்.
வேதியர்கள் செந்நெல் உண்ணும் வழக்கும் குறிப்பதாம்.

     செந்நெல் இன் அமுதோடு - ஞாயிற்றின் ஒளியும்
வெப்பமும் மிகப்பொருந்திய காலத்தின் விளைதலின், செந்நெல்
குணத்தால் மிக்கதும் உணவுக்கு உரியதும் ஆம் என்பர். எனவே
"விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்று" (11 .ம் திருமுறை -
திருவிடை - மும் - கோவை - 30) என்றபடி அன்புடைய மக்கள்
தாம் உயர்வாக உவக்கும் உணவையே இறைவனுக்கு ஊட்டுவர்.
கண்ணப்பநாயனார் வேட்டையாடிச் சேர்த்து இறைவனை ஊட்டிய
பண்பு இங்குச் சிந்திக்கத் தக்கது. இதுபற்றியே தாயனார் செந்நெல்
அமுதினையே நாளும் இறைவனுக்கு அமுது செய்வித்தனர் என்க.
அதுவே இனிய அமுது என்ற காரணத்தால் அதனை ஊட்டினர்
என்பார் இன் அமுது என்றார்.

     கீரையும் மாவடுவும் உணவுக்கு ஒத்த உதவிச்சுவை
தருவனவாதலன்றி அவையே உணவாதவில்லை. நெல்லரிசியமுதே
உணவாம். இச்சிறப்புப்பற்றி அமுதோடு கீரையும் வடுவும் என,
ஓடு
வுருபை அமுதுடன் தந்து பிரித்தோதினார்.

     செங்கீரை - இது செந்நெல் அமுதுடன் ஒத்த சுவையும்
குணநலமும் தருவது பற்றி இதனை ஊட்டினர் என்க.

     மன்னு பைந்துணர் மாவடு - வடுவின் பசுமையும்
இளமையும் மாறாதபடியே பன்னாளும் நிலைக்குமாறு ஊறவைத்துப்
பாதுகாக்கப்பட்ட என்ற குறிப்புப்பெற
மன்னு  என்றார். மாவடு
உணவைச் சீரணிக்க உதவுவது என்ப. துணர் - கொத்து. வடு -
மிக இளைய உவர்ப்பிஞ்சு. "மாவடு வகிரன்ன கண்ணிபங்கா"
என்பது திருவாசகம்.

     அமுது செய்விப்பரால் - ஒவ்வொரு நாளும் நியதியாய்
ஊட்டுவிப்பார். ஆல் - நியதிபிழையாத உறுதிக் குறிப்புத்தரும்
அசை. செய்விப்பர் - பூசைக்குரிய சிவவேதியர்களைக்கொண்டு
அமுதமைப்பித்து ஊட்டுவித்தார் என்ற குறிப்புப்பெறப்
பிறவினையாற் கூறினார். வேதியர்க்கு ஆம் - என்ற முற்குறிப்பும் அது. தாயனார் என்ற எழுவாய் மேற்பாட்டிலிருந்து வருவிக்க. 6