912. சாலி நேடி யறுத்தவை தாம்பெறுங்
கூலி யெல்லாந் திருவமு தாக்கொண்டு
நீல நெல்லரி கூலிகொண் டுண்ணுநாள்
மால யற்கரி யாரது மாற்றுவார்,
       10

     912. (இ-ள்.) வெளிப்படை. செந்நெல் தேடிப்போய்
அறுத்துக் கூலியாகத் தாம் பெறும் செந்நெல்லை எல்லாம்
இறைவனுக்குத் திருவமுதாக அமைத்துக் கொண்டு, கார்நெல்
அரிந்து பெற்ற கூலிக் கார்நெல்லினால் தாம் உணவாக்கிக் கொண்டு
ஒழுகுகின்ற காலத்தில், மாலுக்கும் அயனுக்கும் அரியாராகிய
சிவபெருமான் அதனை மாற்றுவாராகி, 10

     912. (வி-ரை.) சாலி - இங்குச் செஞ்சாலி, செந்நெல்
குறித்தது. நேடுதல் - தேடுதல்.

     அறுத்து அவைதாம் பெறும் கூலி - அறுத்து -
அறுத்ததற்காக. அவை - அவற்றில் - அச்செந்நெல்லில். கூலி -
கூலிநெல்.

     எல்லாம் அமுதாக் கொண்டு - அக்கூலிச் செந்நெல்லில்
ஒரு பகுதியும் தமக்கென்று ஆக்கிக் கொள்ளாமல் முழுமையும்
இறைவரது திருவமுதுக்காகவே அமைத்துக் கொண்டு என்பார்
எல்லாம் என்றார்.

     நீலநெல் - கார்நெல். கூலிகொண்டு கூலியாகக் கிடைத்த
கார் நெல்லினால்.

     உண்ணும் நாள் - தமது உணவு ஆக்கிச் சீவிக்கும் நாளில்.

     மால் அயற்கு அரியார் - சிவபெருமான். அதுமாற்றுவார்
- அது
- அதனையும்; கார்நெற்கூலி கொண்டு உண்ணும்
செயலையும். சிறப்பு உம்மை தொக்கது. முன்னர்ச் செல்வம்
அறியாமை மாற்றி (909) யதனோடு அதனையும் என இறந்தது
தழுவிய எச்ச உம்மை என்று கொள்ளுதலுமாம். மாற்றுவார்
மாற்றுவாராகி. முற்றெச்சம். மாற்றுவார் - ஆக்கிட என வரும்
பாட்டுடன் கூட்டுக. அரியார் - அவர் களதறிவினைத் திரோதான
சத்தியால் மறைத்துத் தாம் வெளிப்படாது நிற்பவர் "மற்றவ ரறியா
மாணிக்க மலையை" என்ற திருவிசைப்பாக் காண்க.

     அரியார் - அதுமாற்றுவார் - அரியார் என்றதனால்
மறைத்தற் றொழிலையும், மாற்றுவார் என்றதனால் முன்னர்
அதனால் ஆன்ம சிற் சத்தியை மறைத்துக் கன்மங்களை
ஊட்டிக்கழிப்பித்துப் பக்குவப்படுத்தி இருவினை ஒப்பும்
மலபரிபாகமும் வரச் செய்து பின்னர் அந்த மறைத்தற் றொழிலை
மாற்றிய அருட்டொழிலையும் குறிப்பாலுணர்த்தினார்.

     இங்குக் கார்நெல்லை மாற்றிச் செந்நெல்லாக்கியதும்
இக்குறிப்புப்பட நிற்பது உன்னுக. கார்நெல் உணவு கொண்டு இருந்த
தாயனார் அவ்வனுபவம் கழிய நின்றது கருமானுபவம் நீங்கி வீடு
பெறும் பக்குவம் பெற்ற நிலையினையும், செந்நெல்லை இறைவர்க்கு
ஊட்டியது, தாமும் செம்மையேயாகிய சிவபதத்தில் (923) என்றும்
வாழும் நிலையும் குறித்தன.

     இறைவர் அது மாற்றுவாராகவே, ஆசிரியரும் இதுவரை
கூறிவந்த யாப்பினைத் தாமும் மாற்றுவாராய், மேல்வரும் சரிதப்
பகுதியை அறுசீர் விருத்தத்தாற் கூறத் தொடங்குதல் காண்க. 10