913. நண்ணிய வயல்க ளெல்லாம் நாடொறு முன்னங்
                                   காண
வண்ணவார் கதிர்ச்செஞ் சாலி யாக்கிட, மகிழ்ந்து
                                   சிந்தை
யண்ணலா ரறுத்த கூலி கொண் "டிஃ தடியேன்
                                    செய்த
புண்ணிய" மென்று, போத வமுதுசெய் விப்பா
                                 ரானார். 11

     913. (இ-ள்.) வெளிப்படை. பொருந்திய வயல்களில் எல்லாம்
நாள்தோறும் முன்காணுமாறு அழகிய நீண்ட கதிர்களையுடைய
செந்நெல்லே விளைவதாக ஆக்கியிட, அது கண்டு பெருமையுடைய
தாயனார், "இஃது அடியேன் செய்த புண்ணியமே யாம்" என்று
கொண்டு மனமகிழ்ந்து, அதனை அறுத்த கூலிச் செந்நெல்லினைக்
கொண்டு, இறைவரை நிரம்ப அமுது
செய்விப்பார் ஆயினார். 11

     913. (வி-ரை.) நண்ணிய - (அதுமாற்றுவாராகிய - 912)
இறைவரது திருவுள்ள நண்ணிய. தாயனார் நண்ணிய என்று
உரைப்பினுமமையும். வண்ணவார் கதிர் - வண்ணம் -
நெற்கதிர்களின் திரட்சியும், வார் - அவற்றின் நீளமும் குறித்தன.
கதிர்கள் அதிகம் மணிப்பிடியுள்ளனவாயும் பெரியனவாயும்
வளர்ந்தன.

     சிந்தை - மனத்தின் செய்கையும், என்று - வாக்கின்
செம்மையும், அமுது செய்விப்பார் - மெய்யின் (உடலின்)
செய்கையும் ஆக முக்கரணங்களும் ஒன்றிய திருத்தொண்டு
குறித்தது காண்க.

     சிந்தை மகிழ்ந்து என்க. வினைச்சொல் முன்னர் வந்தது
நிகழ்ச்சியின் தீவிரங் குறித்தது.

     அண்ணலார் - தாயனாரது செயலின் அருமையும்
பெருமையும் விளங்குமிடமாதலின் இங்கு இப்பெயராற் கூறினார்.
"வள்ளலார் இளையான்குடி மாறனார்" (456) என்றதும், இவ்வாறு
கூறும் பிறவும் காண்க.

     இஃது - இவ்வாறு கூலி எல்லாம் செந்நெல்லேயாகப்
பெற்றது.

     அடியேன் செய்த புண்ணியம் - சிவத் தொண்டு செய்ய
வாய்ப்பது முன் செய்த பெரும் புண்ணிய விசேடத்தாலன்றிக்
கிட்டாதென்பது உண்மையாதலின், தம் கூலி முழுவதும் சிவனுக்கே
அமுதாகப் பயன்படும் பேறு முன் செய்த புண்ணியத்தால் கிடைத்த
தென்றார். "என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமேயிருங்கடல்
வையத்து, முன்னை நீபுரி நல்வினைப் பயனிடை" (திருவலஞ்சுழி -
நட்டராகம் - 1) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரக் கருதினை
இங்குச் சித்திக்க.

     போத - நிரம்ப; மிகுதியாக. "பூதிசாதனத்தவர் முன் போற்றப்
போதேன்" (சிறுத் - புரா - 45) என்புழிக்காண்க. போதுதல் -
செல்லுதல் என்று கொண்டு, தமது திருத்தொண்டு முட்டுப்படாது
மேற்செல்ல என்றலுமாம்.

     போத அமுது - போதம் - தற்போதம் - பசுபோதமாகிய
அமுது என்றுரைக்க நின்ற தொனிக்குறிப்பும் காண்க. தாயனார்
தமது உணவுக்கு நெல் இல்லையே என்ற உணர்ச்சி முற்றும்
அற்றவராய் இறைவரது திருவமுதுக்காவதாய் எல்லாம்
செஞ்சாலியேயாக விளைந்ததுபற்றிச் சிந்தைமகிழ்ந்ததுமன்றி, "இஃது
அடியேன்செய்த புண்ணியம் " என்றும் கொண்டாராதலின்
செந்நெல்லை அமுது செய்வித்ததனோடு தற்போதத்தையும்
பலியாக்கினர் எனவும், அதனை அவர் விரும்பியவாறே இறைவர்
மகிழ்ந்து அமுதுசெய்தனர் எனவும் கொள்ளக் கிடப்பதும் கருதத்
தக்கது. ‘தறுகட் பாசக், கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக்
களித்துண்டு' (பாயிரம்) என்ற திருவிளையாடற்புராணம் காண்க.
"அன்பென்னு மமுது" என்பது வாயிலார் புராணம்.

     அமுது செய்விப்பார் ஆனார் - ஊட்டுவிப்பாராயினர்.
ஆனார் என்றது இவ்வாறு பல நாளும் செய்தனர் என்பது குறித்தது.
வைகலும் என வரும்பாட்டிற் கூறியது காண்க.

     ஆனார் - ஆயினர்; ஆக்கம் பெற்றனர்; இவ்வாறல்லாத
பிறர் எல்லாம் ஆனாராகாது போனார்களேயாவர் என்ற குறிப்பும்
காண்க. "போற்றிலார் ... ஆக்கைக்கே இரைதேடி யலமந்து,
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே" என்ற தனித்திருக்குறுந்தொகை
முதலியவற்றின் கருத்துக்களும் காண்க. 11