914. வைகலு முணவி லாமை மனைப்படப் பையினிற் புக்கு
நைகர மில்லா வன்பி னங்கைகை யடகு கொய்து
பெய்கலத் தமைத்து வைக்கப் பெருந்தகை யருந்தித்
                                   தங்கள்
செய்கடன் முட்டா வண்ணந் திருப்பணி செய்யு
                                 நானில், 
12

     914. (இ-ள்.) வெளிப்படை. நாள்தோறும்
உணவில்லாமையினால், குறைவுபடாத அன்பினையுடைய
மனைவியார் வீட்டுக் கொல்லையிற்புகுந்து கையினாற் பறிக்கும்
இலைக்கறிகளைப் பறித்துச், சமைத்து, உண்கலத்தில் இட,
அதனையே உண்டு, தாங்கள் நியதியாகச் செய்த திருத்தொண்டின்
கடமை முட்டுப்படாதபடி திருப்பணிவிடை செய்து வருநாளில், 12

     914. (வி-ரை.) வைகலும் உணவு இலாமை - தமது கூலி
முழுவதும் செந்நெல்லேயாக, அதனை முற்றும் இறைவரை அமுது
செய்வித்தாராதலின் தமது உணவுக்கு நெல் இல்லையாகலான் என்க.
இதனால் அவர் இறைவரை ஊட்டிய அமுதத்தினைச்
சிவநின்மாலியம் உட்கொள்ளலாகாது என்ற விதியினால் தாம்
உட்கொள்ளவில்லை என்பதும் போந்ததாம். வைகலும் - உம்மை
இவ்வாறு பல நாட்களும் நிகழ்ந்தமை குறித்தது. உணவு -
நெல்லரிசி யமுதம் குறித்தது. இலாமை - இல்லாமையால்.

     மனைப்படப்பை - வீட்டுக் கொல்லைத் தோட்டம்.

     புக்கு - கொய்து - "தொக்க மாநிதித்தொன்மையில் ஓங்கிய
மிக்க செல்வ"த்திலிருந்தவராதலின் இவ்வம்மையார் தாமே
கொல்லையுட் புகுந்து இலைக்கறிவகை தேடிப் பழகாதவர் என்பது
குறிப்பு. "அல்லல் நல்குர வாயிட" (911) என்றமையால் முன்னே
மிக்க செல்வத்திலிருந்த இவர்க்கு இப்போது இடம் பொருள் ஏவல்
முதலிய ஒன்றும் இல்லையாயின என்பதாயிற்று.

     நைகரம் - குறைவு. நல்குரவு வந்தபோது அன்பு குறைவுபட்
டறுவது உலகியல்பு. அவ்வாறன்றி இவ்வம்மையார் நல்குரவினும்
குறைவுபடாத அன்புடன் விளங்கினர் என்பது. நைகரமில்லா நங்கை
என்று கூட்டி, நைகரம் - வருத்தம் - துன்பம் - என்று கொண்டு
இந்நிலைமை வந்ததனுக்கு அம்மையார் சிறிதும் வருந்தினாரலர்
என்றுரைப்பாருமுண்டு.

     சிவபெருமானது திருத்தொண்டில் இவ்விருவரும் கருத்து
ஒருமித்து ஆதரவு செய்தனர் என்றும், தமக்குவந்த
இந்நிலைமையினாற் சிறிதுங்கவலையின்றித் திருப்பணியில்
ஈடுபட்டனர் என்றும் காட்ட இவ்வாறு விதந்து கூறினார்.
மேற்பாட்டிற் கூறியவாறு, தாயனார் "இஃதடியேன் செய்த
புண்ணியம்" என்று கொண்ட கருத்தினையே அம்மையாரும்
கொண்டிருந்தனர் என்க. இறைவரை ஊட்டிய சிறப்பின்
மகிழ்ந்தாரல்லது இவ்விரு பெருமக்களும் தங்களுக்கு
உணவிலாமையை நினைத்தாரலர் என்பதாம். அன்பு -
சிவன்பாலன்பும் தமது கணவனார்பாலன்பும் குறித்தது.

     கை அடகு - கையினாற் பறிக்கப்படும் கீரை. அடகு -
இலைக்கறி, கீரை வகை. இவை பெரும்பாலும் மனிதராற் பயிர்
செய்யப்படாது தாமாக முளைத்தவை.

     பெய்கலம் - உணவு பெய்யும் பாத்திரம் - உண்கலம்.
இலை - சருகு முதலியன. கொய்து அமைத்துப் பெய்கலத்து வைக்க
எனக் கூட்டுக. அமைத்து - சமைத்து.

     பெருந்தகை - தமது பசித்துன்பத்தை யெண்ணாது அடகும்
நீரும் உண்டு கொண்டு, இறைவருக்கு அமுதூட்டுவதனையே கருதி
மகிழ்ந்த பெருமையின் தகுதி குறித்தது.

     தங்கள் செய்கடன் - இருவரும் சேர்ந்து செய்த என்பது
குறிக்கத் தங்கள் என்றார். இருவரும் கூடிச்செய்த விவரம்
915 - 916 பாட்டுகளிற் காண்க. செய் கடன் - கடமைப்பாடாக
மேற்கொண்டு செய்தது.

     திருப்பணி - அமுதூட்டுதலும், அதற்காவன செய்தலுமாம்.
அவை கூலி வேலை செய்து செந்நெல்லும் - கீரையும் - மாவடுவும்
தேடுதல், ஆன் ஐந்து பெறுதல் முதலியன. முட்டா வண்ணம்
செய்யும் - "செய்பணி தவாமை யுய்த்தார்" (837) என்றது காண்க.

     நைகுறல் - நங்கை மற்றடகு - நங்கையார் -
செலுத்துநாளில்
- என்பனவும் பாடங்கள். 12