915. மனைமருங் கடகு மாள வடநெடு வான மீனே
யனையவர் தண்ணீர் வார்க்க வமுதுசெய்
                              தன்ப னாரும்
வினைசெயன் முடித்துச் செல்ல மேவுநா ளொருநாண்
                                   மிக்க
முனைவனார் தொண்டர்க் கங்கு நிகழ்ந்தது
                       மொழியப்பெற்றேன்.
 13

     915. (இ-ள்.) வெளிப்படை. வீட்டின் பக்கத்தில் இருந்த
இலைக்கறிகள் அற்றுப்போகவும், அருந்ததியே போன்ற
கற்பினையுடைய மனைவியார், தண்ணீரை வார்க்க அதனையே
அமுதுசெய்து, அன்பனாரும், தமது திருத்தொழிலையும்
அருஞ்செயலையும் முடித்துச் செல்வாராக, இவ்வாறு பொருந்துகின்ற
நாட்களிலே ஒருநாள், முதல்வனாரது பெருந்தொண்டருக்கு
அங்கு நிகழ்ந்ததனை, இனி எடுத்துச்சொல்லும் பேறு பெற்றேன். 13

     915. (வி-ரை.) நெடு வட வான மீன் என்க. வடமீன் -
அருந்ததி. நெடுமை. நீண்ட புகழுடைய கற்புக்குறித்தது. வடக்கில்
நீண்ட தூரத்தில் தோற்றப்படும் என்றலுமாம். மீனே - ஏகாரம்
தேற்றம். மீனே அனையவர் - கற்பினால் அருந்ததியே போல்வார்.
கற்பினுக்கு எடுத்துக்காட்டாக அருந்ததி மீன் உருவுடன்
விளங்குதலால் கல்யாணங்களில் அருந்ததி பார்த்தல் ஒரு சடங்காக
வழங்குகின்றது. "சாலினி மங்கலை தன்னொடு கண்டான்" (தெய்வ -
அம்மை - திருமண - 253) என்ற கந்தபுராணமும் காண்க. (சாலினி
- அருந்ததி).

     தண்ணீர் வார்க்க அமுது செய்து - தண்ணீரைத் தாகந்
தீர்ப்பதற்குரியதாகக் கொண்டதன்றிப் பசிதீர்க்கும் உணவுப்
பண்டமாகவும் கொண்டார் என்று குறிப்பார் பருகி என்னாது
அமுதுசெய்து என்றார். "துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை" என்ற
திருக்குறளும் காண்க.

     வினைசெயல் - வினை - செந்நெல் - செங்கீரை - மாவடு
- ஆன் ஐந்து தேடுதலும், நெல்லுக்காகக் கூலி வேலை செய்தலும்
முதலிய தொழில். செயல் - வினையாற் பெற்றவற்றை இறைவனுக்குத்
திருவமுதாக்கி ஊட்டுதல்.

     செல்ல மேவுநாள் - செல்லும்படி - ஒழுகும்படி -
பொருந்தும் நாட்களிலே.

     முனைவனாரது மிக்க தொண்டர் என்க. மிக்க -
அன்பினால் மிக்க. பெருமை மிக்க. முனைவர் - முன்னவர் -
தலைவர் - சிவபெருமான்.

     மொழியப் பெற்றேன் - சொல்லும் பேறு எனக்குக்
கிடைத்தது. இப்பெரியவரது புண்ணிய சரிதத்தை, அதிலும், அதனுட்
சிவனருள் வளைவு தேற்றமாகும் இப்பகுதியைச் சொல்வது
பெரும்பேறு என்பது. பெரியோர்களது சிவசரிதங்களை நினைப்பதும்,
சொல்லுதலும், கேட்டலும் சிவபுண்ணியங்களாம். "தணப்பி லெம்புகழ்
சாற்றல்" (திருவாதவூர் - புரா - திருப்பெரு - சரு - 69),
முதலியவை காண்க. திருவருள் விளக்கமாகும் இடங்களை இவ்வாறு
விதந்து கூறிக் கேட்போரை எச்சரித்து வழிப்படுத்துதல் ஆசிரியரது
மரபு. 790-ல் உரைத்தவை பார்க்க.

     தொண்டனார் - மேல் இப்பாட்டில் வினை செயல்களை
அன்பு ஊக்கியிடச் செய்தல் குறிக்க அன்பனார் என்ற ஆசிரியர்,
இனிவரும் நிகழ்ச்சி, தொண்டுசெய்கின்ற விடத்து நிகழ்வதாகலின்
தொண்டர்க்கு அங்கு நிகழ்ந்தது என்று குறித்தார். 13