916. முன்புபோன் முதல்வனாரை யமுதுசெய் விக்க மூளும்
அன்புபோற் றூய செந்நெ லரிசிமா வடுமென் கீரை
துன்புபோ மனத்துத் தொண்டர் கூடையிற் சுமந்து
                                    போதப்
பின்புபோ மனைவியாரான் பெற்றவஞ் சேந்திச்
                                 சென்றார்.
 14

     (இ-ள்.) வெளிப்படை. முன்போல முதல்வரை அமுது
செய்விப்பதற்காக, மூண்டுமேன் மேல் எழும் அரவது
அன்புபோலவே தூயதாகிய செந்நெல்லரிசியினையும்,
மாவடுவினையும், மெல்லிய செங்கீரையினையும் துன்பநீங்கிய
மனத்தையுடைய தொண்டராகிய தாயனார் கூடையில் வைத்துச்
சுமந்து செல்ல, அவர் பின்பு செல்லும் திருமனைவியார் ஆனைந்து
என்னும் பஞ்சகவ்வியத்தை மட்கலத்திற் கொண்டு கையில் ஏந்திச்
சென்றார்.

     (வி-ரை.) முன்புபோல் - முன்னை நாட்களிற்போல -
வழக்கம்போல.

      முதல்வனாரை - சிவபெருமானே தலைவர்; உயிர்கள்
யாவும் அவர்க்கு அடிமைகள் என்ற உண்மை யறிந்து அதனால்
அவரை ஊட்டும் நியதி பூண்டொழுகியவர் தாயனாராதலின் இங்கு
முதல்வனார்
என்றார்.

     மூளும் அன்புபோல் தூய - தாயனார் இறைவரை
அன்பினால் ஊட்டும் அரிசி முதலாயினவற்றுக்கு உவமிக்கப்படும்
பொருள் உலகத்தில் வேறில்லையாதலின் இவரது மூளும்
அன்பினையே உவமித்தார். நல்குரவினாலும் பசியாலும்
துன்பத்தாலும் குறைவுபடாது நாணாளும் வளர்வதாம் என்பது
குறிக்க மூளும் என்று முக்காலத்துக்கும் பொதுவாகிய நிகழ்காலப்
பெயரெச்சத்தினாற் கூறினார்.

     செந்நெல் அரிசி - மாவடு - மென்கீரை - இவற்றின்
தன்மைகள் 908ல் விவரிக்கப்பட்டன. இவற்றைத் திருக்கோயிலுக்குக்
கொண்டு சென்று அங்குச் சமைப்பித்து அமுது செய்வித்தனர் என்று
குறிக்க அரிசி முதலாகக் கூறினார். இறைவர்க்காகும் திருவமுது
திருக்கோயிலுக்குள் திருமடைப்பள்ளியிற் செய்யத் தக்கது என்பதும்
வெளியிற் சமைத்துக் கொணர்வது தகாதென்பதும் ஆகமங்களில்
விதிக்கப்பட்டன.

     துன்புபோம் மனம் - துன்பம் என்பதன் சுவடு தானும்
காணமுடியாமல் மறைந்து போகும் மனம்.

     பின்பு.......சென்றார் - இதனால் தாயனாரும் மனைவியாரும்
அன்பு ஒருமித்துச் செய்த திருத்தொண்டுவிளக்கப்பட்டது. தாயனார்
முன்னர்ச்செல்ல அவரைப்பின் பற்றி மனைவியார் பின் சென்றனர்;
அரிசி முதலியவை பெரும்பாரமாயுள்ளனவாதலின் தாயனார்
அவற்றைக் கூடையிற் சுமந்து செல்ல மனைவியார்
ஆனைந்தினையும் மட்கலத்தில் ஏந்திச் சென்றனர். கூடையில்
என்றதனால் திருவமுதுக்காகும் பொருள்களின் அளவும் கருதி
யுணரத்தக்கது. மட்கலம் மேற்பாட்டினாற் காண்க. இறைவர்
பூசையைக் கணவனாரும் மனைவியாரும் ஒருமித்துச் செய்தல்
வேண்டுமென்றதனைத் திருநீலநக்க நாயனார் புராணத் (8, 9
பாட்டுக்கள்) தாலும் அறிக. இவ்வியல்பு விலங்கினங்களினும்
நல்லறிவுடைய சில பிராணிகள் மேற்கொண்டொழுகின என்பது,
"பிடியெலாம் பின்செலப் பெருங்கைம்மா மலர் தழீஇ, விடியலே
தடமூழ்கி விதியினால் வழிபடும்" (1), "மானமா மடப்பிடி வன்கையா
லலகிடக், கானமார் கடகரி வழிபடும்" (7) (பண் - கொல்லி -
கானப்பேர்) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவார முதலியவற்றா
னறியப்படும். திருக்கழுக்குன்றில் இனமாய் இந்நாளும் வந்து
வழிபடும் இரண்டைக் கழுகுகளின் வழக்கும் காண்க.

     ஆன்பெற்ற அஞ்சு - "ஆனுற்ற வைந்து மமர்ந்தாய்
போற்றி" (ஐயாறு - திருத்தாண்டகம்) முதலிய தமிழ் மறைகள்
காண்க. பங்சகவ்வியம் என்பது வடமொழி. இவை பசுவினது பால் -
தயிர் - நெய் - மூத்திரம் - சாணம் என்பன. இவற்றின் அளவும்
சேர்க்கும் முறையும், உரிய பாவனை - மந்திரம் - செய்கை
முதலியனவும் சிவாகமங்களுட் கண்டு கொள்க.1 14


     1சில நவீன ஆராய்ச்சியாளர் இவற்றில் பசு மூத்திரம்,
பசுச்சாணம் என்ற இரண்டினையும் நீக்கி, மோரும் வெண்ணெயும்
சேர்த்து ஐந்தாகக் கணக்கிடவும் தொடங்கியுள்ளார். இது மிகத்
திரிபுள்ளதோ ராராய்ச்சியாம். சிவாகமங்களின் பிராமணத்தை
உடன்படாதார்க்கு ஆனைந்தின் விசாரம் வேண்டுவதில்லை.
இன்னாருடன் சிவாகம சித்தாந்தசைவர்க்கு விவகரிக்கும் ஆகம
அளவையின் றொடர்புமில்லையாகும்.

     ஆகமப்படிக்குள்ள ஆட்சி காண விரும்புவோர் தொன்று
தொட்டுவரும் வழக்கும் காணலாம். இதுவேயுமன்றி, இதுபற்றி,

     "இவனே திருவண்ணாமலை உடையார்க்குப்
பஞ்சகவ்யமாடியருள நித்தமும் சிறுகாலை சந்தியில்
திருவண்ணாமலை என்னும் நாழியால் கோமூத்திரம் உழக்கும்,
கோமயம் ஆழாக்கும், பால் நாழி உழக்கும், தயிர் நாழி உரியும்,
நெய் நாழியும் ஆக இப்படி நித்தமும் : என்ற திருவண்ணாமலைக்
கல்வெட்டுக் குறிப்பும் காண்க. (S. I. I. Vol. 8. 1937)