920. |
மாசறு
சிந்தை யன்பர் கழுத்தரி யரிவாட் பற்று
மாசில்வண் கையை மாற்ற வம்பலத் தாடு மையர்
வீசிய செய்ய கையு, மாவடு "விடேல்வி டே"லென்
னோசையுங், கமரி னின்று மொக்கவே யெழுந்த
வன்றே. 18 |
(இ-ள்.)
வெளிப்படை. குற்றமறுக்கும் சிந்தையுடைய அன்பர்
தமது கழுத்தை அரிகின்ற அரிவாளைப் பிடிக்கும், குற்றமில்லாத
வண்மையுடைய கையின் செயலைத் தடுக்க அம்பலத்தாடும் ஐயரது
வீசிய செய்ய இடது திருக்கையும், மாவடுவினது "விடேல் விடேல்"
என்ற ஓசையும் கமரிலிருந்து அப்போதே ஒருசேர எழுந்தன.
(வி-ரை.)
மாசறுசிந்தை - மாசு அறுக்கும் சிந்தை என்க.
மேற்பாட்டிற் "புரைஅற" என்றார். மாசு - முன் குறித்த புரை
-
தீமை - (919) என்ற அவை. தமது தீமையினாலே இறைவர்
செய்திலர் என்றும், இறைவருக் காட்படாது இருக்கும் பிறப்புத்
தள்ளத்தக்கது என்றும் உறுதி பெற்றாராதலின் அதனை அறுக்கச்
சிந்தையுள் எண்ணினார் என்பார் மாசு அறு சிந்தை என்றார்.
அன்பர்
- ஞானி என்ற பொருளில் வந்தது. "இருஞ்சுரபிக்
கெங்கும், உருக்காண ஒண்ணாத பான்முலைப்பால் விம்மி
யொழுகுவது போல் வெளிப்பட்டருளுவன் அன்பர்க்கே" என்ற
(சிவஞானசித்தி - 12, 4) விடத்து "அன்பரென்றது ஈண்டு
ஞானிகண்மேற்று, ‘அன்பரொடு மரீஇ' என்புழிப்போல"
என்றுரைத்ததும், சிவஞானபோதம்12-ம் சூத்திரம், அன்பரொடு,
என்றதற்கு "அங்ஙனம் அயரா அன்பு செய்யும் மெய்ஞ்ஞானி
களோடு" என்றுரைத்ததும் காண்க.
அன்பர்
கழுத்து அரி அரிவாள் - கழுத்தரியும் வன்செயல்
அன்பினால் ஆகியது என "அன்பு காட்டிய நெறி" என்று
மேற்பாட்டிற் கூறியதனை அனுவதித்து இங்கு அன்பர் என்றார்.
ஆசில்
வன்கையை - ஆசு - குற்றம். கையினுக்குக்
குற்றமாவது கைகளாற் செய்யத்தக்கவற்றைச் செய்யாமையும்,
செயத்தகாதவற்றைச் செய்தலுமாம். செய்த்தக்கவை "கைகாள் கூப்பித்
தொழீர் கடி மாமலர் தூவிநின்று" (அப்பர் சுவாமிகள் -
திருவங்கமாலை) என்ற தமிழ்மறையால் விதிக்கப்பட்டன. அவை
இறைவனது வழிபாடும், அதற்காவன செய்யும் சரியை கிரியை
என்றவற்றிற்பட்டனவுமாம். தாயனாரது கைகள் தமக்குணவில்லாத
போதும் கூலிசெய்தும் திருப்பணி முட்டாது செய்தும் வந்தன
வாதலின் இவ்வாறு கூறினார். இங்குக் கழுத்தரிதலாகிய வலிந்த
செயல் செய்யினும் அக்கையினுக்குக் குற்றம் சாராதென
வற்புறுத்துவார் ஆசில் என்றார். குற்றமாகாமை
மேலுரைக்கப்
பட்டது. வண்மை - திருப்பணி முட்டுப்படக் காணும் காலத்து
உயிரையும் ஈடாகத் தரும் வள்ளன்மை. கையை -
கைசெய்யும்
செயல் முயற்சியினை. கை - என்பது அது செய்யும் செயல்
முயற்சிக்காகி வந்தது ஆகுபெயர்.
மாற்ற
- இங்குத் தடுக்க என்ற பொருளில் வந்தது.
அம்பலத்து
ஆடும் ஐயர் - அருட் கூத்தர். வீசிய செய்ய
கை - இடது கை. வீசுகரம் என்ப. "சிக்கன வா வீசுகரம்",
"பொருந்தி லிமைப்பிலி யவ்வென்ற பொற்கை" முதலிய
திருவாக்குக்கள் காண்க. ஐயரது இடதுபாகம் அருளாகிய
அம்மையாருடையதாதலின், அத்திருக்கை அருளுடையதென்பார்
வீசிய செய்ய கை என்றார். கந்தைபுடைத்
திடவெற்றுங்
கற்பாறையில் திருக்குறிப்புத் தொண்டர் தமது தலையை மோதப்
புக்கபோது, அங்கு "வந்தெழுந்து பிடித்ததணி வளைத்தழும்பர்
மலர்ச்செங்கை" (திருக்குறி - புரா - 125) என்ற வரலாறு இங்குச்
சிந்திக்கத்தக்கது.
கமரினின்றும்
கையும் ஓசையும் ஒக்கவே எழுந்த என்க.
கண்ணப்ப நாயனார் இடது கண்ணைத்தோண்ட அம்பு ஊன்றிய
கையினை இறைவரது வளையலணிந்த இடது கை
சிவலிங்கத்திலிருந்து முளைத்துத் தடுத்ததுவும், ‘கண்ணப்ப நிற்க'
என்ற வாக்கும் உடன் எழுந்ததுவும் இங்கு நினைவு கூர்க. 827
பார்க்க.
மாவடு
விடேல் விடேல் என்னோசை - மாவடுவினைக்
கடித்தலால் உளதாகும் விடேல் என்ற ஓசை. மாவடுவின் ஓசை
என்க. செயப்படு பொருட் காரகத்தின் வந்த ஆறனுருபும் பயனும்
உடன் றொக்கு நின்றன. "வடுவின் ஓசை" (924, 925) என்பவற்றை
நோக்குக. 902 பார்க்க. அடுக்கு உறுதியும் மிகுதியும் குறித்தது.
"சிலம்பி னோசைமிகவு மிசைப்பித்தார்" (கழறிற் - புரா - 42) என்ற
வரலாற்றை நினைவு கூர்க.
எழுந்ததன்றே
என்பது பாடமாயின் தனித்தனி கூட்டுக்
கொள்க. அன்றே - அப்போதே.
இவ்விடத்து "ஆண்டவன்
கோயிலில் மட்டும்
வீற்றிருக்கின்றானில்லை என்பதும், அன்பர்கட்கு அவன்
எங்கிருந்தும் அருள்செய்வான் என்பதும், அவன் எங்கும் நீக்கமற
நிறைந்துள்ள ஒருவன் என்பதும் விளங்குவது காண்க" என
விசேடவுரை காண்பாருமுண்டு. இறைவனைத்
திருக்கோயிலுள்ளிருக்கும் திரு மேனியில் வழிபடுவோர் அவர்
திருக்கோயிலினுள் மட்டும் வீற்றிருக்கின்றார் என்றும்
ஏனையிடங்களில் அவனது நிறைவு இல்லை என்றும்
கொள்கின்றார்கள். என்றகுறிப்புடன் இவ்வுரை காணப்படுகின்றது.
திருக்கோயிலினுட் சிவலிங்கத் திருமேனியிலும், அடியார்
திருவேடத்திலும் இறைவன் தயிரின் நெய்போல வெளிப்பட்டும்,
ஏனையிடங்களிற் பாலின் 22நெய்போல மறைந்தும் விளங்குவன்
என்பது உண்மைநூற் றுணிபு.
"கண்டதொரு மந்திரத்தால்"
என்ற சிவஞானபோதம் (2ம் சூத்)
உதாரண வெண்பாவில் "விறகிற் கடைகோலாற்றீ கடைந்துழி
விளங்கும் அல்லுழி விளங்குவதன்றானாற் போல, உயிர்கட்குப்
புத்திமுத்தி யளித்தற் பொருட்டுக் காணப்பட்ட தாவர வடிவின்கட்
கலப்பினால் அதுவே தானாய், அதுவன்றி வேறு பொருளுமாமியல்
புடைய முதல்வன், அதுவே தானாகக் காணாதார்க்குத்
தம்மாலறியப்பட்ட தொரு மந்திர சாந்நித்திய மில் வழி
அவ்வடிவின்கண் விளங்காது நின்று, அஃதுள்வழி விளங்கித்
தோன்றும் பொருளாய், அவ்வாறன்றி அவ்வடிவே அவனாகக்
காணப்பெறும் உண்மைத் தவமுடையார்க்கும் அப்பெற்றியனேயாய்
விளங்கித் தோன்றான் கொல்லோ?" என்று எமது மாதவச் சிவஞான
முனிவர் உரைத்தனவும், இவ்வாறே "திருக்கோயிலுள்ளிருக்குந்
திருமேனி தன்னை" என்ற சிவஞான சித்தியாரின் (12 - 4) கீழ்
உரைத்தனவும் இங்குச் சிந்திக்கத்தக்கன.
விறகிற்றீப்
போலவும், பாலின் நெய்போலவும், மணியிற் கதிர்
போலவும் எங்கும் நிறைந்து மறைந்து நிற்கும் இறைவன்
இம்மூன்றிலும் "முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே"என்றபடி
தீவிரதர முடைய அன்பர்க்கே அவர்களது பக்குவ முதிர்ச்சியால்
அவர் நினைத்தவிடத்தில் வெளிப்படுவன் என்பதும், ஏனையோர்க்கு
அவ்வாறு வெளிப்பட விளங்கான் என்பதும் துணிபு.
திருக்கோயிலினுள் இறைவனது வெளிப்பாடும், ஈண்டுத்
தாயனார்க்குக் கமரே முன்னிலையாக வெளிப்பாடும் அன்பின் தீவிர
பேதம் குறித்தன வாதலின் எல்லார்க்கும் இவ்வாறு கூடாமையின்
இங்கு இவ்விசேடவுரையின் பொருத்தம் ஆராயகத் தக்ககது.
அன்றியும் அற்றை நாளைக்கு முன் வரை தாயனாரும்
திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனியிலே இறைவனை வழிபட்டனர்
என்பதும், அன்றைக்கும் "அங்குப் போவதேன்" என்றதும்
காண்க. 18
|