934.



ஆயர் குலத்தை விளக்கிட வந்துத யஞ்செய்தார்;
தூய சுடர்த்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்;
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின்
                           வினைப்பாலிற்
பேயுட னாடு பிரானடி யல்லது பேணாதார்.
  9

     (இ-ள்.) வெளிப்படை. (அவர்) ஆயர்குலத்தை விளக்கம்
செய்திட இவ்வுலகில் வந்து அவதரித்தவர்; தூயஒளி வீசுகின்ற
திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டில் நின்றவர்; வாக்கினாலும்,
உண்மைபெற வழுத்தும் மனத்தினாலும் செயல் வகையினாலும்
பேயோடாடுகின்ற சிவபெருமான் றிருவடிகளை யல்லது
வேறொன்றினையும் பேணாதவர்.

     (வி-ரை.) குலத்தை விளக்கிட - குலத்தை விளக்குதலாவது
சிவ வழிப்பாட்டில் நிறுத்தி வழிகாட்டுதல். இவர் அவதரித்த குலம்
என்று இவரால் குலம் உலகில் விளங்கப் பெறுதல் என்றலுமாம்.
872ல் உரைத்தவை பார்க்க. திருத்தொண்டத் தொகையினுள்
திருமூலரும் இந்நாயனாரும் ஆகிய இவரே ஆயர் குலத்தவராவர்,
அவருள் சிவ யோகியாரான திருமூலர், இறந்துபோய்க்கிடந்த மூலன்
என்ற இடையனது உடலினுட் புகுந்து மூலராய் விளங்கியவர்.
எனவே, இந்நாயனார் ஒருவரே ஆயர் குலத்திற்றோன்றியபடி
சிவனடியாராய் விளங்கி அந்நிலையே சிவலோகத்திலும் வாழ்பவர்.
ஆதலின் இவ்வாறு சிறப்பித்தார்.

     உதயம் செய்தார் - விளக்குதல் ஞாயிறு - மதி முதலிய
பேரொளிப் பொருள்களின் செயல். விளக்கிட என்றதற்கேற்ப
உதயம் செய்தார்
என்றார்.

     தூய சுடர்த் திருநீறு - ஏனைய ஒளிப்பொருள்களிற்
காணப்படாத தூய்மையுடன் விளங்கும் சுடர். இச்சுடர்
தூய்மைசெய்வது என்பதுமாம். "சுத்தமதாவது நீறு", "புண்ணிய
மாவது நீறு" என்ற தேவாரத் திருவாக்குக்களும், "வெண்ணீற்றொளி
போற்றி நின்று" (திருஞான - புரா - 216) என்ற மாபுராணமும்
காண்க.

     திருநீறு விரும்பு தொழும்பு - திருநீறு வீடு தரும் சாதனம்
என்று கொண்டு அதற்குத் தொண்டு புரிதல். "நீற்றினை நிறையப் பூ
"சுதலும், நீறு பூசினாரைக் காணில் காதல் கொள்ளுதல் - உள்ள
முருகுதல் - போற்றுதல் - அவர் வேண்டுவன செய்தல்
முதலியவையும் திருநீற்றுத்தொண்டு எனப்படும். சிவபெருமான்
றிருத்தொண்டாவன திருநீற்றுத் தொண்டேயாம் என்றலும்
பொருந்தும்.

     வாயினின்.......வினைப்பாலின் - வாக்கு, மனம், காயம்
என்ற மூன்றாலும் - இன்னுருபுகள் மூன்றும் கருவிப் பொருளில்
வரும் ஆன் என்ற மூன்றனுருபாய்ப் பொருள் தந்து நின்றன.

     வினைப்பால் - உடலாற் செயல் செய்தல்.

     மெய்யின் வழுத்தும் மனத்தின் - மெய் - உண்மை.
உண்மை கூர்தரச் சிந்திக்கும் மனத்தினால். உண்மை கூர
நினைப்பவர் மனத்தினுள் இறைவர் வெளிப்பட நின்றருளுவர்.
"நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே, புக்குநிற்கும்
பொன்னார்சடைப் புண்ணியன்", "கரவாடும் வன்னெஞ்சர்க்
கரியானைக் கரவார்பால், விரவாடும் பெருமானை", "வஞ்சனையா
லஞ்செழுத்தும் வழுத்து வார்க்குச் சேயானை" , "மெய்மையன் பருள்
மெய்மை மேவினார்" முதலிய திருவாக்குக்கள் காண்க.

     வினைப்பால் - என்பதற்குச் செயலின் பொதுமை என்றும்,
மெய் - உடம்பு - காயம் - என்றும் கொண்டு, வாய், மெய், மனம்
என்ற மூன்றின் செயலால் எனத் தனித்தனி கூட்டி உரைத்தலுமாம்.
"மானிடப் பிறவி தானும் வகுத்தது மனவாக்காயத், தானிடத் தைந்து
மாடு மரன்பணிக் காக வன்றோ" (சித்தியார் - 2 - 92) பார்க்க.

     பேயுடன் ஆடும் பிரான் சிவபெருமான். பேய் - சிவ
கணமாகிய சுத்த தத்துவ உடம்புடைய நற்கணம். சிவபூதங்கள்.
பௌதிகமாகிய வாயு சரீரமுடைய பைசாசங்களல்ல "பேயாய
நற்கணத்தி லொன்றாய நாம்" (அற்புத - அந் - 86) என்ற
அம்மையார் திருப்பாட்டும் "பாரிடம் பாணி செய்யப் பறை கட்சிறு
பல் கணப் பேய், சீரொடும் பாட லாட லிலயஞ்சிதை யாத
கொள்கை" (பஞ்சமம் - திருவொற்றியூர் 2) என்ற ஆளுடைய
பிள்ளையார் தேவாரம் முதலியவை பார்க்க. பேயோடாடி என்பது
நிகண்டில் சிவபெருமானது பெயர்களிலொன்றாக ஓதப்படுதலும்
காண்க. பேயோடாடுதல் அவரது நித்தியத்துவம் பரத்துவம் முதலிய
தன்மைகள் குறிக்கும்.

     அடி அல்லது பேணாதார் - எதிர்மறையாற் கூறினார்
நியதி பிழையாமையும் உறுதிப்பாடும் குறித்தற்கு. 875ல் உரைத்தவை
பார்க்க.

     இப்பாட்டால் ஆனாயரது உயிரின் நிலையாகிய
அகவாழ்வாகிய சிவச்சார்பு கூறப்பட்டது. வரும்பாட்டில் உடல்
பற்றிய புறவாழ்வாகிய உலகநிலை கூறுவார். உயிர்பற்றிய
அகவாழ்க்கையின் சிறப்பு நோக்கி அதனை முன்வைத்தோதினார். 9