937.




ஆவி னிரைக்குல மப்படி பல்க வளித்தென்றுங்
கோவல ரேவல் புரிந்திட வாயர் குலம்பேணுங்
காவலர் தம்பெரு மானடி யன்புறு கானத்தின்
மேவு துளைக்கரு விக்குழல் வாசனை
                         மேற்கொண்டார்.
12

     (இ-ள்.) வெளிப்படை. ஆனிரையின் தொகுதிகள் அவ்வாறு
பெருகும்படி காப்பாற்றிக், கோபாலர்களாகிய இடையர்கள் என்றும்
தமது சொல்வழியே ஒழுகித் தமது ஏவல்களைச் செய்து நிற்க,
ஆயர்குலத்தைக் காப்பாற்றும் பெரியாராகிய ஆனாயர்,
சிவபெருமானது திருவடிகளில் அன்பு பொருந்திய இசையுடனே
துளைக்கருவிக் குழல் வாசித்தலை மேற்கொண்டார்.

     (வி-ரை.) அப்படி அளித்தலாவது மேலிரண்டு
பாட்டுக்களினும் சொல்லியபடி பாதுகாத்தல். பல்குதல் - பெருகுதல்.
என்றும் என்றதனை அளித்து என்றதனோடும், புரிந்திட
என்றதனோடும் தனித்தனி கூட்டிப் பொருள் கொள்ளுமாறு
இடையில் வைத்த அமைதி காண்க.

     கோவலர் - கோபாலர் - இடையர். "இடைமகன்" (சண்டீசர்
புரா - 24). ஏவல் புரிந்திட - ஏனையிடையர் தமது ஏவல் கேட்டு
ஆனிரைக் குலங்களைக் காத்து வந்தார்களாக, இவர், அவர்களைத்
தம் ஏவல்வழி நிறுத்தித் தலைவராய் விளங்கினார் என்க. இதனை
943 - 945ல் விரித்திருத்தலும் காண்க.

     அடி அன்புறு........வாசனை - கானம் திருவடி யன்புடன்
கூடாத போது பெறும் புலனின்பமா யொழியும். ஆதலின்
அடியன்புறு கானத்தின் மேவும்
என்று விசேடித்தார். இந்தக்
கானமே இறைவன்றன் றிருச்செவியி னருகணையப் பெருகும்
தன்மையுடையதென்பது 962ல் அறியப்படும். அது குறிக்க இங்கு
இவ்வாறு தொடங்கிக்கொண்டார். கானம் - இசைக்கலை.
துளைக்கருவி
- துளைகளின் வழியே இசை ஓசையினை
வெளிப்படுக்கும் ஊது கருவி.

     துளைக்கருவிக் குழல் - துளைக் கருவியாகிய குழல்.
துளைகளின் எண் - வரிசை - தொழில் செய்யும்முறை
முதலியவற்றை 938, 948, 949, 951, 954 என்ற திருப்பாட்டுக்களில்
விரிக்கப்பட்டமை காண்க. இசையினையுடைய துளைமேவிய
கருவிக்குழல் என்றலுமாம்.

     குழல் வாசனை - குழல் வாசித்தலினை. மேற்கொள்ளுதல்
- மேற்கொண்டு பல நாளும் பயிலுதல். வாசனை - வாசித்தல்
என்ற பொருளில் வழங்கும் இசைக்கலை மரபு வழக்கு. 961, 965
பார்க்க. குழல் - குழல் வாசித்தலை, வாசனை -
பூர்வவாசனையினால் என்றுரைத்தலுமாம். 12