955.



ஆனிரைக ளறுகருந்தி யசைவிடா தணைந்தயரப்,
பானுரைவாய்த் தாய்முலையிற் பற்றுமிளங்
                                 கன்றினமுந்
தானுணவு மறந்தொழியத், தடமருப்பின் விடைக்குலமு
மான்முதலாங் கான்விலங்கு மயிர்முகிழ்த்து
                               வந்தணைய,
30

     955. (வி-ரை.) ஆனிரைகள் - கன்றினம் - விடைக்குலம்
இவற்றை இவ்வாறு இனம் பிரித்துப் பாதுகாவல் புரிந்ததுபற்றி 936-ல்
உரைக்கப்பட்டதனை உன்னுக.

     அறுகு - பசுக்களின் உணவில் அறுகு முதன்மை
பெற்றதாதலின் அதனைக் கூறினாரேனும் இனம்பற்றி ஏனையவும்
கொள்ளப்படும்.

     அசைவிடாதணைந்து - உணவு அருந்திய ஆனிரை, பின்
தனியிடத்திருந்து அவ்வுணவை மீளவும் கவளம் கவளமாக
வயிற்றினிடமிருந்து வாய்க்குக் கொண்டுவந்து பலமுறையும் மென்று
விழுங்கும். இவ்வாறு அசைவிடுதல் உணவு சீரணிக்க உதவுவதாம்.
இது கவர்குளம்புடைய தாவரஉணவு உண்ணும் உயிர்களுக்கு
இயல்பாகும். இவை அசையாவிட்டால் நோய்கொள்ளும். தாம்
இயல்பாயும், இன்றியமையாமலும் செய்யவேண்டிய
அசைவிடுதலைத்தானும் செய்யாமல் மறந்து என்க. ஆனிரைகளுக்கு
அசைவிடுதலின் இன்றியமையாமைபற்றிக், கேட்ட பொருளைத்
தனியிடத்திலிருந்து சிந்திக்கவேண்டிய தலைமாணாக்கர்க்கு
அவற்றைப் புலவர் உவமித்துள்ளதும் காண்க. "அன்ன
மாவே.......அன்னர் தலை......மாணாக்கர்" என்பது சூத்திரம்.
அசைவிடாது என்றதற்கு இரை எடாது என்றுரைப்பாருமுண்டு.

     அணைந்து - மேய்விடங்களினின்று குழலூதுமிடத்துக்கு
வந்து. அயர - இசையின் மயங்கித் தம்மை மறக்க. (இசையினை)
விரும்ப என்றலுமாம்.

     பால் நுரைவாய்........கன்றினமும் - தாய்முலைபற்றிப்
பாலுண்டுகொண்டிருத்தலால் வாயில் நுரை பொருந்தும் கன்று.
இயற்கை நவிற்சி அல்லது தன்மையணி.

     உணவுகான் மறந்து ஒழிய என்க. உணவு - உண்ணும்
தொழில். மறந்தொழிய - ஒரு சொன்னீர்மைத்தாய் மறக்க என்ற
பொருளில் வந்தது.

     தடமருப்பின் விடைக்குலம் - விடைக் கூட்டங்களின்
வலிமை குறித்தது. "வென்றி விடைக்குலம்" (936) என்றது காண்க.

     மான் முதலாம் கான் விலங்கு - கான் விலங்குகளில்
மனிதருட் பெண்களுடனும் அன்புடன் பழகி உடன் வளர்வதில்
முதலாக வைத்து எண்ணப்படுவதும், அழகுடையதும் மான்
ஆதலின், மான் முதலாம் என்றார். "அன்புறு காதல்
கூரவணையுமான் பிணைக ளோடு, மின்புற மருவியாடு மெயிற்றியர்
மகளிர்" (653) என்றது காண்க.

     மயிர் முகிழ்த்தல் - இசையின் வசப்பட்டதனாலாகிய
மெய்ப்பாடு. 30