961.
|
இவ்வாறு
நிற்பனவுஞ் சரிப்பனவு மிசைமயமாய்
மெய்வாழும் புலன்கரண மேவியவொன் றாயினவால்
மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையா
ரடித்தொண்டர்
செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல்வா
சனையுருக்க. 36 |
(இ-ள்.)
மொய்வாச..........உருக்க - மொய்த்த வாசனையுடைய
நறிய கொன்றை மலரைச் சூடிய முடிச்சடையுடைய சிவபெருமானது
அடித்தொண்டராகிய ஆனாயர் சிவந்தவாயின் வைத்து வாசித்த
திருக்குழல் வாசனை உட்புகுந்து உருக்குதலினால், இவ்வாறு
அசரங்களும் சரங்களும் இசைமயமேயாகித் தமது மெய்யும் அதில்
வாழும் புலன்களும் கரணங்களும் இசையாகிய ஒரு
தன்மையடைந்தன.
(வி-ரை.)
நிற்பன - சரிப்பன - "சராசரங்களெல்லாம்"
(939) என்றது காண்க. நிற்பனவாகிய உயிர்வகைகள்; தாவரம்
எனப்படுகின்ற மரம் செடிகொடி முதலியன. "மரங்கள் மலர்ச்சினை
சலியா" (960) என முன்னர்க் கூறியது காண்க. சரிப்பன
- இயங்கும்
உயிர்வகை. இவை 955 முதல் 9569வரை கூறப்பட்டன.
மெய்வாழும்..........ஒன்றாயின
- முன்னர் "உ ண ர்
வொன்றாய் நயத்தலினால்" (959) என்றது காண்க. மெய்வாழும்
புலன்கரணம் - மெய்யும், அதில் வாழும் பொறிகளும், அவற்றை
இயக்கும் காரணங்களும் என்க. மெய்யினைப் புலன்கள் இயக்க,
அப்புலன்களை உட்கரணங்கள் இயக்க, அவற்றை உயிர் உணர்வு
இயக்கும் என்பர். முன்னர் வாயிற்காட்சியுணர்வு தோன்றிப், பின்
மானதக்காட்சியுணர்வு தோன்றி, அதன் பின்னர்த்
தன்வேதனையுணர்வு உயிரின்கண் வந்து தோன்றும் எனவும்,
இதுவே பரம்பரையில் உணர்வுதோன்றும் முறையாம் எனவும்,
சிவஞானமாபாடியும், 4. சூத், "மனமாதி" என்ற உதாரணவெண்பாவின்
கீழ் உரைத்தவை பார்க்க.
மேவிய
- ஒன்றாயின - ஒன்று - ஒன்றே. தேற்றமும்
பிரிநிலையும் குறித்த ஏகாரம் தொக்கது. உள்ளே வந்து பொருந்தி
நிறைந்த இசை யுணர்வாகிய ஒன்றேயாயின. இவற்றின் அமைதிபற்றி
251-252 திருப்பாட்டுக்களின் கீழ் உரைத்தவை பார்க்க. ஆல்
-
அசை. ஒன்றாய் மேவினவால் எனக்கூட்டி, இயக்குதல்
இயக்கப்படுதல் என்னும் வேறுபாடின்றி ஒன்றாய் மேவின
என்றலுமாம்.
உருக்க
- ஒன்றாயின - என்று கூட்டுக. உருக்க -
உருக்கியதனால். காரணப்பொருளில் வந்த வினையெச்சம்.
அடித்தொண்டர் - சடையாரின் திருவடியிலே பதிந்த அன்புடன்,
மன முதலாயின மூன்று கரணங்களாலும் "அடியல்லது பேணாதார்"
(934). மொய்வாச....அடித்தொண்டர் -
ஆனாயர்,
செழுங்கொன்றை மருங்கணைந்து (945), சடையார்போல் நின்ற
அந்நறுங்கொன்றையினை நேர் நோக்கி நின்றுருகி (946), அதனை
உடையவராகவே கண்டு, அன்பு மடைதிறந்தாராதலின் அக்குறிப்புத்
தோன்ற இவ்வாறு கொன்றை முடிச்சடையார் எனக்
கூறினார்.
இங்குக் கொன்றை நீழலில் நின்று அன்புமடைதிறந்து
இசைபெருக்கிய ஆனாயர், சடையாரின் றிருவடி நீழலில் தாம்
அமர்ந்திருப்பதாகிய ஒன்றிய சிந்தையினர் என்பார் சடையார்
-
அடித்தொண்டர் என்று கூறினார்.
தொண்டர்
செவ்வாயின் - சுந்தரச்செங்கனிவாயும்
துளைவாயும் தொடக்குண்ண வைத்து ஊதியதனை (952)
மிசைவைத்த என்றார்,
வாசனை
- வாசித்தல். வாசித்து (939), குழல் வாசனை (937,
965). உருக்கியதனால் புலன்கரணம் ஒன்றாயின, ஒன்றாயினதன்
விளைவை மேல் உரைக்கின்றார். 36
|