962.



மெய்யன்பர் மனத்தன்பின் விளைந்தவிசைக்
                                 குழலோசை
வையந்தன் னையுநிறைத்து வானுந்தன் வயமாக்கிப்
பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம்புரியும்
ஐயன்றன் றிருச்செவியி னருகணையப்
                            பெருகியதால்.
  37

     (இ-ள்.) வெளிப்படை. மெய்யன்பரது அன்பினால் விளைந்த
குழலினது இசையோசையானது இந்த உலகத்தையும் நிறைவித்து
வானுலகத்தினையும் தன் வசமேயாகச் செய்து, பொய்யன்பினுக்கு
எட்டாதவரும், பொன்னம்பலத்தினில் திருக்கூத்து இயற்றுகின்றவரும்
ஆகிய ஐயரது திருச்செவியின் பக்கத்தில் அணையும்படி பெருகிற்று.

     (வி-ரை.) மெய்யன்ப ராதலின் அவரது மனத்து அன்பின்
விளைந்த குழலோசை ஐயர் செவியினருகணையப் பெருகியது
என்பது குறிப்பு. இதனையே வலியுறுத்துவார் பொய்யன்புக்
கெட்டாத
என்று எதிர்மறை முகத்தானுங்கூறினார்.

     குழல் இசை ஓசை - என்க. இசை ஓசை - நிறைத்து -
வயமாக்கி - அணையப் பெருகியது என்க.

     வையத்தை நிறைத்தல் - 955, 956, 959, 960
பாட்டுக்களினும், வானத்தை வயமாக்குதல் 957, 958
பாட்டுக்களினும் கூறினார். திருச்செவியினருகணையப்
பெருகியதன்
விளைவு மேல்வரும் மூன்று பாட்டுக்களானுங்
கூறுவார்.

     நிறைத்து - வயமாக்கி - பெருகுதல் - என்ற
தொழிற்பாடுகளின் உள்ளுறை குறிக்கத்தக்கது. தூல சூக்கும
காரணநிலைகளுக்கேற்றவாறு கூறியது கண்டு கொள்க.
புடைபெயர்ந்து ஒன்றை யொன்று பரம்பரையிற் றொடர்ந்து
சென்று மறைவது ஒலியலைகளின் இயல்பு. நீரினுட் போகட்டதொரு
கல்லினால் முதலில் அதனைச்சுற்றி மூண்ட அலைகள் உளவாம்.
பின் அவற்றைத் தொடர்ந்து தளர்ந்த அலைகள் உளவாம். பின்னர்
அவ்வாறு மெலிந்து கொண்டே சென்று இறுதியில் ஒன்று
மசையாமைபோல அவை மிக மெலிந்து காணப்படும். அது
போலவே ஒலியலைகளும் உண்டாகும் இடத்தினின்றும்
மேன்மேற் கிளம்பிச் சென்று சென்று இறுதியில் அதி சூக்குமமாகிய
காரணத்தில் ஒடுங்கும். இங்கு ஆனாயர் குழலிசை ஓசை முதலிற்
றூலமாகிய ஒலியலைகளாக எம்மருங்கும் பரவி வையத்தை
நிறைத்து, அதன்பின் சூக்கும ஒலியலைகளாகமேற்பரவி வானத்தைத்
தன் வயமாக்கி, அதன்மேல் அதிசூக்குமமாகிய காரண ஒலியுருவில்
ஐயர் திருச்செவியின் அருகு அணையும்படி பெருகியது. அலைகள்
முதலில் நாற்புறமும் சுருங்கக் கிளம்பிப் பின்னர் மேன் மேல்
விரிவாகப் பெருகுமியல்பு பற்றிப் பெருகியதால் என்ற குறிப்பும்
காண்க. முன்னர் "எம்மருங்கும் பரப்பினார்" (963) என்றதும்
நினைவு கூர்க.

     இஃது எல்லாக் குழலோசைகட்கும் எல்லா ஓசை ஒலிகட்கும்
இயல்பாமே? எனின், அற்றன்று; பூதசம்பந்தமாய் வையந்தன்னை
நிறைத்த மட்டில் நின்று ஒழியும் ஏனைத் தொனியான்மக ஓசைகள்
போலல்லாமல் இஃது அஞ்செழுத்தை உள்ளுறையாகக்
கொண்டொழுகிய வர்ணான்மக ஓசையானதால் ஐயன் றிருச் செவியி
னருகணையப் பெருகியதென்க.

     ஆனாயரது குழலிசை இம்மை, மறுமை, வீடு என்னு
மூன்றினையும் தரவல்லதாயிறறென்பதாம். வைய நிறைத்ததனால்
இம்மையும், வானம் தன்வயமாக்கியமையால் மறுமையும், ஐயன்றிருச்
செவியினருகணைதலால் வீடும் அளிக்கவல்லதாயினமை
கூறப்பட்டது. இறைவனைப் பாடுதல் இம்மூன்று பயன்களையும்
அளிக்கவல்லதென்பது "எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்,
இம்மையேதருஞ் சோறுங் கூறையும்; ஏத்த லாமிடர் கெடலுமாம்,
அம்மை யேசிவ லோக மாள்வதற் கியாதுமையுற வில்லையே"
(பண் - கொல்லி - திருப்புகலூர் 1) என்ற ஆளுடைய நம்பிகள்
திருவாக்கா னறிக.

     பொய்யன்புக் கெட்டாத - ஐயன் - எனக் கூட்டுக.
"பொக்க மிக்கவர் பூவு நீருங் கண்டு, நக்கு நிற்ப னவர்தமை
நாணியே" என்பது தமிழ்மறை. ஐயனது பொற்பொது என்றது
மெய்ஞ்ஞானமேயான அம்பலத்தை. எட்டாத பொற்பொது என்று
கூட்டி உரைத்தலுமாம். பொற்பொது - பொன்னம்பலம்.

     மெய் அன்பு - மன மொழி மெய்என்ற மூன்றானும்
சிவபெருமானையல்லாது வெறொன்றினையும் பற்றாத அன்பு.
அங்ஙன மல்லாது தம்மையும் உலகையுமே பற்றுக்கோடாகக்
கொண்டு செலுத்தும் அன்பு பொய்யன்பாம்.

     ஐயன்றிருச் செவியி னருகணையப் பெருகுதலாவது
கீழுள்ள தத்துவங்களை யெல்லாம் கடந்து சுத்த தத்துவத்தில்
விளங்கும் இறைவனிடமும் செல்லும்படி வியாபித்தல்.

     ஆயின், "சகஸ்ர சீரிஷாத் புருஷ சகஸ்ராட்ச சகஸ்ரபாத்"
எனவும், ஆயிர ஞாயிறு போலு மாயிர நீண்முடி யானும்" (அப்பர்
சுவாமிகள் - காந்தாரம் - திருவாரூர் - 8) எனவும், ஆயிரங் கமல
ஞாயி றாயிரமுக் கண்முக கரசர ணத்தோன்" (திருவிசைப்பா -
சேந்தனார் - வீழி - 8) எனவும், "எங்கும் திருமேனி" (திருமூலர்)
எனவும், "எங்கணும் பணிவதனங்கள்" (கந்தபுரா) எனவும், "எங்குஞ்
செவியுடையாய்" (திருவிளை - புரா -) எனவும் வரும்
திருவாக்குக்களா லறியப் படுகின்றபடி எங்கும் நிறைந்து
எல்லாம்கேட்பது இறைவனது தன்மையாதலின், இங்கு "ஐயன்
றிருச்செவியி னருகணையப் பெருகியது" என்ற தென்னையோ?
எனின், "அவன் மற்றிவ்விடங்களிற் பிரகாசமாய் நின்றே
அல்லாதவிடத்து அப்
பிரகாசமாய் நிற்றலான்" (சிவஞானபோதம் -
12 - சூத். 3 அதி) என்ற ஏதுவை விளக்குவாராகி, "அம்முதல்வன்
யாங்கணும் வியாபகமாய் நிற்பினும் இவ்விரண்டுடிடத்து (பத்தரது
வேடமும் சிவாலயமும்) மாத்திரையே தயிரின்நெய் போல விளங்கி
நிலைபெற்று, அல்லுழியெல்லாம் பாலினெய்போல வெளிப்படாது
நிற்றலான்" என்று எமது மாதவச் சிவஞான சுவாமிகள்
சிற்றுரையினுள் உரைத்தது கொண்டு இஃது அமைவுபடுத்திக்
கொள்ளத்தக்கது.

     அன்பின் விளைந்த இசையாதல் பற்றியே, இறைவரும், இது
கேட்டவுடன் வெளிப்பட்டுவந்தனர் என மேல்வரும் பாட்டிற்
கூறுதலும் கருதுக.

     திருச்செவி - என்பது அரன்றன் கரசரணாதி சாங்கமெல்லாம்
அருளே என்ப; ஆதலின் ‘சிவனடிசென்னி வைப்பாம்' என்பது
போல உபசாரம். இறைவனுக்கு அருளே திருமேனியாம்.
அத்திருமேனியில் கண் செவி முதலாகிய அவயவப் பகுப்பெல்லாம்
அருளே. இக்கருத்துப்பற்றியே "இத்தன்மை நிகழுநாளிவர்
திருத்தொண் டிருங்கையிலை, யத்தர்திரு வடியிணைக்கீழ்ச்
சென்றணைய வவருடைய, மெய்த்தன்மை யன்புநுகர்ந் தருளுதற்கு
விடையவர்தாஞ், சித்தநிகழ் வயிரவராய்த் திருமலைநின்
றணைகின்றார்" (25) என்று சிறுத்தொண்டநாயனார் புராணத்துட்
கூறுதலுங் காண்க. 37