969.



சாயுந்தளிர் வல்லி மருங்கு னெடுந்த டங்கண்
வேயும்படு தோளியர் பண்படு மின்சொற் செய்ய
வாயும்படும்; நீள்கரை மண்பொருந் தண்பொ ருந்தம்
பாயுங்கட லும்படும்; நீர்மை பணித்த முத்தம்.    2

     (இ-ள்.) நீர்மை பணித்த முத்தம் - அன்பின்
நீர்மையினாற் கொள்ளப்பட்ட முத்தம்; சாயும்....தோளியர் -
தளிர்களையுடைய சாயும் கொடிபோன்ற இடையினையும்
நீண்டபெரியகண்களையும் உடைய மூங்கில் போன்ற
தோள்களையுடைய பெண்களின்; பண்பாடும்...வாயும்படும் - பண்
உண்டாகின்ற இனிய சொற்கள் பொருந்திய சிவந்த வாயினிடத்தும்
பொருந்துவன; நீர்மை பணித்த முத்தம் - நீரோட்டம் என்னும்
தண்ணிய ஒளிமிகுந்த முத்துக்கள்; நீள்கரை மண் பொரும்தண்
பொருந்தம் பாயும் கடலும்படும் - நீண்டகரையின் மண்ணை
இடித்து ஓடும் குளிர்ச்சியுடைய குளிர்ந்த தாமிரபர்ணியாறு
பாய்கின்ற கடலிலும் உண்டாகின்றன.

     (வி-ரை.) நீர்மை பணித்த முத்தம் என்பதனை
இரட்டுறமொழிந்து கொண்டு முத்தம் வாயும்படும், முத்தம்
கடலும்படும் என்று ஈரிடத்துங் கூட்டி உரைக்க. உம்மைகள்
எண்ணும்மைகள். மேல் வரும் பாட்டிலும், 972-லும் இவ்வாறே
கொள்க.

     வாயும்படும் என்றதனோடு கூட்டும்போது - நீர்மை -
அன்பின் தன்மை; முத்தம் - அன்பு காரணமாக உளதாகும்
உடலின்றொழில் என்க. "தாய் வாய்முத்தங்கொள்ள" (672) என்றது
காண்க. பணித்த - உண்டாகிய - உண்ணின்று தூண்டபபட்ட
என்க. 
படும் - பொருந்தும். இங்கு முத்தம் - முத்துப்போன்ற பல்
என்று உரைகொண்டு அதற்குத் தக உரைப்பாருமுண்டு.

     கடலும்படும் - என்றதனோடு கூட்டும்போதும், நீர்மை -
நீரினுட்பிறக்கும் உயர்ந்த முத்துமணிக்கியல்பாகிய ஒருவகை
ஒளிப்பரப்பு. இதனை நீரோட்டம் என்பது வழக்கு. முத்தம் - முத்து
மணிகள். பணித்த - இங்குப்பொருந்திய என்ற பொருளில் வந்தது.
படும் - உண்டாகும்.

     மருங்குலையும் கண்ணையும் உடைய தோளியர் என்க.
சாயும் மருங்குல் - என்க. தளிர்களின் செறிவும் கனமும் தாங்க
மாட்டாது சாயும் வல்லி என்று காரணங்கூறியபடி.

     வல்லி மருங்குல் - வல்லி - கொடி. மெய்பற்றி வந்த
உவமம்.

     நெடும் தடம் கண் - நீண்டிருத்தலும் அகன்று
விசாலமாயிருத்தலும் கண்ணுக்கு அழகிலக்கண மென்பர்

     வேயும்படு தோளியர் - வேய் - மூங்கில். படுதல் இங்கு
அழகினாற் கீழ்மைப்படுதல் குறித்தது. வேய் - பெண்களின்
தோளுக்கு உவமமாகக் கொள்ளும் பொருள்களுள் ஒன்று.

     பண்படும் இன் சொல் - பண்கள் இயல்பான் அமைந்து
விரவுகின்ற இனிய சொல். "பண்ணமரு மென்மொழியார்" (மேகராக
- திருமிழலை - 10), "பண்ணினேர் மொழியாள்" (குறுந் -
மறைக்காடு - 1) முதலிய திருவாக்குக்கள் காண்க.

     செய்ய வாய் - செம்மை - உதடுகளின் இயல்பாகிய பவளம்
போன்ற நிறம் தாம்பூலத்தினிறமுமாம்.

     நீள்கரை மண் பொரும் - வெள்ளப் பெருக்கினால்
இருபுறமும் கரைகளில் மண்ணை அரித்துக் கொண்டு செல்லும்
ஆற்றினது இயல்பு குறித்தது.

     தண் பொருந்தம் - குளிர்ச்சியுடைய தாமிரபர்ணி ஆறு.
பாயும் கடலும் என்று உடம்பொடு புணர்த்துக் கூறியவதனால்
தாமிரபர்ணியாற்றின் நீர் பாய்வதனால் அந்நீரின் தன்மை பொருந்த
அவ்விடத்துக் கடல் முத்துக்களை உடைத்தாகும் தன்மை
பொருந்துவதாம் என்பது. தாமிரபர்ணி பாயும் கடற்கரையில்
கொற்கை நகரின் பக்கத்தே முத்துக்குளிக்கப்பட்ட தென்ற
செய்தியும் காண்க. அன்றியும் தாமிரபர்ணியினால் பொதியம்
முதலிய மலைகளினின்றும் வாரிக்கொண்டு வரப்பட்ட முத்துக்கள்,
அது பாயும் கடலிற்படும் என்றதுமாம்.

     ழுபூழியர்கோன் றென்னாடு முத்துடைத்துழு என்ற வழக்கும்
காண்க.

     இப்பாட்டால் ஆறும் ஆற்றுச் சிறப்பும் கூறினார்.

     மண் படும் - என்பதும் பாடம்.           2