970.



மொய்வைத்தவண் டின்செறி சூழன் முரன்ற சந்தின்
மைவைத்தசோ லைமல யந்தர வந்த மந்த
மெய்வைத்தகா லுந்தரும்; ஞால மளந்த மேன்மைத்
தெய்வத்தமி ழுந்தருஞ்; செவ்வி மணஞ்செ யீரம்.
 3

     (இ-ள்.) செவ்வி மணஞ்செய் ஈரம் - நறுமணம் வீசச்
செய்யும் ஈரத்தை; மொய்வைத்த...காலும் தரும் - மொய்த்த
வண்டுகள் நெருங்கிய கூட்டம் ஒலிக்கின்ற இருண்ட சந்தனச்
சோலை சூழ்ந்த பொதியமலை தரவந்த மெல்லவுலவுகின்ற சிறு
தென்றற் காற்றும் கொடுக்கும்; செவ்வி மணஞ்செய் ஈரம்
நன்மணத்தைச் செய்தற்குரிய அன்பினை; ஞாலம்...தமிழும் தரும் -
உலகத்தை அளந்த மேன்மையும் தெய்வத்தன்மையும் உடைய
தமிழும் தரும்.

     (வி-ரை.) மொய் வைத்த வண்டு - என்றது கூட்டமாக
மொய்க்கும்வண்டுகளின் இயல்பினையும், செறிசூழல் என்றது
அக்கூட்டங்கள் பல நெருங்கிச் சூழ்ந்ததனையும் குறித்தன.

     முரன்ற சோலை - எனக்கூட்டுக. சந்து - சந்தனம்.

     முரன்ற - முரலுதற்கிடமாகிய. மைவைத்த - இருள் சூழ்ந்த.
சோலையில் இருள் சூழுதல் மரங்களின் செறிவினால் ஆவது.
மலயம்
- பொதிய மலை. மலயம் தரவந்த கால் - தென்றல்.
கால்
- காற்று. மந்தம் மெய் வைத்த - மெல்லியதாகிய பரிசம்
உண்டாக்கும். மந்தம் குளிர் - பரிமளம் என்ற வாயுவின் வேகம்
மூன்றில் மந்த நடையை உடம்பில் வைத்த என உரை கொள்வாரும்
உண்டு.

     ஞாலம் அளந்த - என்பது உலகம் இன்ன தன்மையுடையது
என்று நிச்சயித்த அளவுபடுத்திய - என்ற பொருளில்வந்தது.
உலகத்தின் உண்மைத் தத்துவத்தை உணர்த்திய என்க. உலக
முழுதும் பரவிய - உயர்ந்தாரால் மதிக்கப்பட்ட -
என்றுரைப்பாருமுண்டு. தெய்வத்தமிழ் - சிவபெருமானருளிய
பொருளிலக்கணமும் அறிவாற் சிவமேயாகிய உண்மை
நாயன்மார்களருளிய தேவராம் திருவாசகம் முதலிய
திருவருணூல்களும் ஞான சாத்திரங்களும் ஆம். தெய்வத்தன்மை
இத்திருவருள் வாக்குக்களின் செயலாலும் பிறவாற்றாலும்
அறியப்படும். இக்கருத்தையே பாராட்டிக் கம்பரும் "நீண்டதமி
ழாலுலகை நேமியி னளந்தான்" என்று அகத்தியரைக் துதித்துக்
கூறியதும் காண்க.

     இனி, "அவற்றுள் - படுதிரைவையம் பாத்திய பண்பே"
(தொல் - பொருள் - அக - 2) என்றதனால் உலகினை நானிலமாக
அளந்து, பொருள்களையும் அவற்றுள் அடக்கி யிலக்கணஞ்
செய்தமையால் ஞாலமளந்த மேன்மை என்றார் என்பதுமாம்.
இதுவன்றியும், நீலமேனி வாலிழைபாகத், தொருவ னிருதா ணிழற்கீழ்,
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே" என ஐங்குறு நூறு கடவுள்
வாழ்த்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியது போன்றவையும்
ஞாலமளந்ததே
யாமென்க.

     மலயக்காற்று - செவ்வி மணம் செய் ஈரம் தருதலாவது -
குளிர்ச்சியையும் நன்மணத்தையும் கொடுத்தல், ஈரம் - குளிர்ச்சி,
துணைபிரிந்து வருந்துவோருக்குத் தென்றற்காற்று மணம் என்ற
கூட்டத்தினை நினைவுகூரச் செய்தலும் குறிப்பாம்.
கைக்கிளைத்துறையில் தென்றலைப் பலதிறப்படப் பேசுதல்
அகப்பொருள் வழக்கு.

     தெய்வத்தமிழ் - செவ்வி மணஞ்செய் ஈரம் தருதலாவது
அன்பை உளதாக்குதல். ஈரம் - அன்பு. இங்குச் செவ்விமணம்
என்றது நன்மையின் கூடுதல் குறித்தது. யாழுடையார் மணம்பற்றிச்,
செவ்வி - பருவத்தே, பொழிலிடத்து நேர்படும் அமையம்
என்றலுமாம். நாயக நாயகிகளின் இவ்வுலகம்பற்றிய மணமும்,
ஆன்ம நாயகராகிய சிவபெருமானுடன் ஆன்மாவாகிய நாயகியின்
ஒன்றுபடுதலும் அன்பு காரணமாகவே உளவாவனவாம். அன்பு
விளைக்கும் அருட்பெருந் தமிழ்நூலாகிய திருக்கோவையாருக்கு
உரை வகுத்த பேராசிரியர் இக்கருத்தை உரைத்தொடக்கத்தில் நன்கு
விளக்கியுள்ளது காண்க. இறைவனார்தந்த அருட் பெருந் தமிழாகிய
இறையனா ரகப் பொருளும் இவ்வாறே அன்பினைந்திணை என்று
சிறப்பித்துக் கூறப்படும். இது ஆசிரியர் கருத்தாமென்பது "மெய்மைப்
பொருளாந் தமிழ் நூலின் விளங்கு வாய்மைச், செம்மைப் பொருளுந்
தருவார் திருவால வாயின், எம்மைப் பவந்தீர்ப்பவர்" (974)
என்றதனாலறியப்படும். "திருவால வாயமர்ந்த செஞ்சுடரைச்
செழும்பொருணூல், தருவானை" (திருநா - புரா - 406) என்று
பின்னர்க் கூறுவதும் காண்க.

     பக்குவத்துக் கியையச் சிவமணத்தைத் தருகின்ற அன்பை
என்பர் இராமநாதச் செட்டியார். தெய்வமணஞ்செய் செவ்விதரும்
என்று கூட்டிப் பிறவி வெப்பத்தை மாற்றித் தெய்வத்தன்மை
செய்யவல்ல அழகிய அருளைத்தரும் தமிழ் என்றுரைப்பாருமுண்டு.
"தீந்தமிழின் தெய்வ வடிவாள்" என்ற (11-ம் திருமுறை)
ஞானவுலாவுங் காண்க.

     தெய்வத் தமிழ் - தனிமுதற் றெய்வமாகிய சிவபெருமானே
முதல்வராக இருந்து தந்ததும், ஆய்ந்ததும், விரும்பியதும்,
உள்ளுறை பொருளாய் விளங்குவதும் ஆகிய தமிழ்மொழி
என்பதுமாம். "மதுரையினிற் றிருந்தியநூற் சங்கத்துள் அன்றிருந்து
தமிழாராய்ந் தருளிய வங்கணர்" (திருநா - புரா - 403),
"தலைச்சங்கப் புலவனார் தம்முன்" (திருஞான - புரா - 667) என்று
பின்னர்க் கூறுபவையும் காண்க. "கண்ணுதற்பெருங் கடவுளுங்
கழகமோ டமர்ந்து, பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ்"
என்றதும், "நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கண்,
தழற்பொலி சுடர்க்கடவுள் தந்ததமிழ்" என்ற கம்பர் பாட்டும், பிறவும்
காண்க.

     மலயந்தர வந்த தென்றல் வெப்பம்மாற்றி உடலுக்குக்
குளிர்ச்சி தருவதுபோல, அத்திருமலையில் வாழும் தமிழ் முனிவர்
தரவரும் தமிழ், உயிர்களுக்குப் பிறவி வெப்பம் போக்கி அருணிழல்
தருவதாம் என இந்த இரண்டினையும் தொடர்பு படுத்திக் கூறிய
நயமும் காண்க.

     இத்திருப்பாட்டினால் மலையும் மலையின் வளனும், மொழியும்
மொழியின் வளனும் இணைபிரியா வகையில் ஒருங்கே கூறிய
திறமும் காண்க. 3