971.
|
சூழும்மிதழ்ப்
பங்கய மாகவத் தோட்டின் மேலாள்
தாழ்வின்றியென் றுந்தனி வாழ்வதத் தைய லொப்பார்
யாழின்மொழி யிற்குழ லின்னிசை யுஞ்சு ரும்பும்
வாழுந்நக ரம்மது ராபுரி யென்ப தாகும். 4 |
(இ-ள்.)
சூழும் ... ஆக - இதழ்கள் சூழ்ந்த தாமரை
மலர்போல; அத்தோட்டின் வாழ்வது - அத்தாமரை மலர்மேல்
தங்கும் இலக்குமி தாழ்வில்லாமல் என்றும் சிறந்து வாழப்பெறுவது;
அத்தையல் ஒப்பார் - அந்த இலக்குமியைப் போன்ற
பெண்களுடைய; யாழின்மொழியில் ... வாழும் - யாழின் மொழியிலும்
கூந்தலிலும் முறையே இன்னிசையும் வண்டும் வாழ்கின்ற; நகரம்
மதுராபுரி என்பது ஆகும் - நகரமானது மதுராபுரி
என்ற பெயராற்
சொல்லப்படுவது ஆகும்.
(வி-ரை.)
இதழ்சூழ் பங்கயம் என்க. ஆக
- போல என்ற
பொருளில் வந்தது. இதழ்சூழ் என்று சிறப்பித்தது
புறஇதழ் -
அகஇதழ் - கேசரம் - முதலிய மலரின் உறுப்புக்கள் முற்றும்
வெளிப்படக் காணுமாறு அமைந்து காணப்படுவது பங்கயமேயாம்
என்ற சிறப்பு நோக்கி.
அத்
தோடு - அந்தப் பங்கயமாகிய மலர். பங்கயமும்
தோடும் ஆகுபெயர். மேலாள் - மேல் உறைபவள் - திருமகள்.
பங்கயம் - வெண்டாமரை என்றும், மேலாள்
- கலைமகள் என்றும்
கொண்டு அதற்குத் தக்கபடி உரைப்பாருமுண்டு.
என்றும்
தாழ்வின்றி - ஒருகாலத்துப் பெருத்தும், ஒரு
காலம் சிறுத்தும் காணப்படாமல் எக்காலத்தும் குறைவின்றி.
தனிவாழ்வது - தனிமை
- இங்குப்போல வேறெங்குமில்லையாம்
தன்மையாகிய சிறப்பு. மேலாள் - வாழ்வது - வாழும் - நகரம்
என்று முடிக்க. செயப்படு பொருளைச் செய்ததுபோலக் கூறினார்.
இயல்பாக வந்த காலமயக்கம்.
அத்தையல்
- முன்சொன்ன அந்தத் தோட்டின் மேலாள்
என்ற பெண்தெய்வம். மேலாள் என்று ஒருமையிலும்
ஒப்பார்
என்று பன்மையிலும் கூறியவாற்றால், மேலாள் ஒருத்தியாக, அவளை
ஒப்பார் பலர் அங்குள்ளார் என்றது குறிப்பு. தனிவாழ்வது
என்ற
குறிப்பும் அது.
யாழின்
மொழியில் இசையும், குழலிற் சுரும்பும் என்று
நிரனிறையாக்கி உரைத்துக் கொள்க. யாழின் மொழி
என்றது
பெண்களின் மொழியில் இயல்பாயமைந்த பண்ணமைதி. இசை
-
இன்னிசை. இது பயிற்சியின் அமைவது. யாழ்
- யாழோசை குறித்து
நின்றது. ஆகுபெயர். யாழினோசைபோன்ற மொழி என்க
"யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்" (காந்தாரம் -
திருமறைக்காடு.1) என்ற
ஆளுடையநம்பிகள் தேவாரம் காண்க. இன்
- உவமைப்பொருளில் வந்த ஐந்தனுருபு. யாழ் இன்மொழி என்று
கூட்டியுரைத்தலுமாம்.
யாழில்
மொழியில் - யாழிலும், மொழியிலும் என்று
உம்மைத்தொகையாக்கிப் பெண்கள் (வாசிக்கும்) யாழிலும்,
அதனோடு பொருந்தப்பாடும் மிடற்றுப்பாட்டிலும் இசை வாழ்வதாம்
என்று உரைகொள்வதுமொன்று. "யாழிலெழு மோசையுட
னிருவர்மிடற் றிசையொன்றி" (திருஞான - புரா - 136), "யாண
ரம்பெறிந்தின்னிசை யோர்ந்தெழீஇப், பாணர் கோமகன் பன்னியும்
பாடுமால்" (திருவிளை - இசை - பட. 33)முதலியவை காண்க.
வாழ்தல் - இனிதாக இடம் பெற்றமைதல்.
குழலிற்
சுரும்பு வாழ்தலாவது கூந்தலிற்சூடிய
மலர்களிடத்துத் தங்குதல். புதிதின் மலரும் பூக்களைத்
தொடுத்தணிதலால் அவை அலரும் பருவத்தில் அவற்றில் தேனுண்
வண்டுகள் தோய்வனவாம். "வம்பலர் நறுந்தொடையல்
வண்டொடுதொடுப்பார்" (திருஞான - புரா - 38) என்றது காண்க.
சூடும் பூவில் வண்டு மொய்த்தல் இன்றும் மதுரையில் அம்மையார்
கோயில் முன்பு திருப்பூமண்டபத்திற் காணத்தக்கது. உத்தம சாதிப்
பெண்களின் கூந்தலின் இயற்கைமணங்கவரச் சுரும்பு அங்கு
வாழ்வன என்ற குறிப்புமாம்.
யாழின் மொழியில்
இசை வாழ்தல்பற்றி இசைவாதுவென்ற
திருவிளையாடலில் பாணபத்திரர் மனைவியாரான விறலியார்
முதலியோர் சரிதங்களையும் குழலிற் சுரும்பு வாழ்தல்பற்றித்
தருமிக்குப் பொற்கிழியளித்த திருவிளையாடலில் சண்பக மாறனது
தேவியார் குழலின் வாசம்பற்றிய சரித முதலியவைகளையும் நினைவு
கூர்க.
வாழ்வது - வாழும்
நகரம்; (அது) மதுராபுரி என்பது ஆகும்
என்று முடிக்க.
நகரம்
- 968ல் நாடு கூறி, அதனை அடுத்து ஆறும்
மலையும் கூறியவாறு, இப்பாட்டால் நகரம் கூறினார்.
மதுராபுரி
- மதுரை. மது - அமுதம். குலசேகரபாண்டியன்
சிவனது ஆணையின் வழியே கடம்பவனத்தின் முளைத்தெழுந்த
கடவுளைக்கண்டு, காடெறிந்து நகரங்கண்டபோது சிவபெருமானது
சிரத்திற் றரித்த பிறையினிடத்துள்ள மது (அமுதம்) வைத்தெளித்துச்
சுத்தமாக்கிய காரணத்தால் இப்பெயர் பெற்றது. "பொன்மய மான
சடைமதிக் கலையின் புத்தமு துகுத்தன ரதுபோய்ச், சின்மயமான
தம்மடி யடைந்தார்ச் சிவமய மாக்கிய செயல்போற், றன்மய மாக்கி
யந்நகர் முழுதுஞ் சாந்திசெய் ததுவது மதுர, நன்மயமான
தன்மையான் மதுரா நகரெனவுரைத்தனர் நாமம்" (மதுரை - நக -
பட - 42) என்ற திருவிளையாடற் புராணங்காண்க. 4
|