973.



மந்தாநிலம் வந்தசை பந்தரின் மாட முன்றிற்
பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்குஞ்
சந்தார்முலை மேலன; தாழ்குழை வாண்மு கப்பொற்
செந்தாமரை மேலன; நித்திலஞ் சேர்ந்த கோவை.  6

     (இ-ள்.) நித்திலம் சேர்ந்த கோவை - முத்துக்களைச்
சேர்த்துக் கோர்த்த கோவையாகிய மாலை; மந்தாநிலம்......
முலைமேலன - தென்றற்காற்று வந்து மெல்லிதாய் அசைகின்ற
மாடங்களின் முற்றத்தில் பந்து ஆடிய மங்கையரின் செங்கை
தாங்கும் சந்தனம் பொருந்திய முலையின்மேல் உள்ளன. நித்திலம்
சேர்ந்தகோவை
- முத்துப்போன்ற வேர்வையின் கோவை;
(பந்தாடிய மங்கையர்) தாழ்......செந்தாமரை மேலன - தாழும்
குழையுடைய ஒளிபொருந்திய முகமாகிய அழகிய தாமரையின் மேல்
உள்ளன.

     (வி-ரை.) மந்தா நிலம் - தென்றல். மந்தம் அநிலம் என்பது
மந்தாநிலம் என வந்தது. வடநூன் முடிபு. அநிலம் - காற்று.
அசை
- மெல்லிதாக வீசும்.

     மாடமுன்றிலில் பந்தாடிய என்க.

     செங்கை தாங்கும் சந்தார் முலை - கைவரைகள்படியத்
தொய்யில் எழுதிய சந்தனம் பூசிய. கையைச் சந்தனக்
குழம்பிற்றோய்த்து முலையில் கைபடியத் தொய்யில் எழுதுவது
முன்னாள் வழக்கு. "இருநிலமா மகண்மார்பில், அழுந்துபட
வெழுதுமிலைத் தொழிற்றொய்யி லணியினவாம்" (இடங்கழி - புராண.
1) என்றது காண்க. செங்கை - கையின் தொழில். ஆகுபெயர்.
பங்கயச்செங்கை பந்தாடிய மங்கையர் தாங்கும் முலை என்று கூட்டி
உரைத்தலுமொன்று. குயபாரம் எனப்படுதலால் தாங்கும் என்றார்.

     நித்திலம் சேர்ந்த கோவை - முலை மேலன என்றது
முத்து மாலைகள் மார்பின் மேற் றாழ்ந்து கிடந்தன என்பதாம்.

     நித்திலம் சேர்ந்த கோவை - முகப்பொற் செந்தாமரை
மேலன
என்றது மங்கையர் பந்தாடுதலினால் முகத்தின்
முத்துப்போன்ற வர்வைத்துளிகள் காணப்பட்டன என்பதாம்.
வேர்வை துளும்ப விளையாடுதல் உடல் நலத்துக் கடுத்ததென்பர்
மருத்துவ நூலோர்.

     தாழ்குழை - குழைழ்தாழ்ந்து தொங்குதல் அணிபுனை
வகையுள் ஒன்று. இந்நாளிலும் ஒவ்வோர் வகையால் கீத்தொங்கும்
காதணிகளை அணியும் வழக்குக் காண்க. வடிந்துதொங்கும்
காதுடைமை அழகிலக்கணங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது
முன்னாள் வழக்கு. வடிவார்காது - வடிந்தகுழைதாழ முதலிய
வழக்குக்கள் காண்க.

     வாள் முகம் - இயல்பாகிய ஒளி பொருந்திய முகம்.
குழையின் ஒளி வீசும் என்றலுமாம். பொன் - அழகு;
முகச்செந்தாமரை - முகமாகிய தாமரை. உருவகம்.

     பந்தாடிய மங்கையர் - பெண்கள் ஏற்ற பாட்டுப்
பாடிக்கொண்டு பந்தடித்து விளையாடுதல் நீண்ட பழங்காலமுதல்
தமிழர்களின் வழக்குக்களுள் ஒன்றாகும். பந்தாடுதல் மகளிர்க்குரிய
விளையாட்டுக்களுள் ஒன்றாகவே முன்னாளிற் கருதப்பட்டது.
"கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயரும் கழுமலமே"
முதலிய திருவாக்குக்கள் காண்க. "தேவ ரார மார்பன் வாழ்க
வென்றுபந் தடித்துமே" என்பது முதலாகப் பழந்தமிழ்நூலாகிய
சிலப்பதிகாரத்தினுட் கூறுதலும் பிறவும் இங்கு நினைவு கூர்க. ஆண்
மக்கள் பந்தாடுதல் இந்நாளின் நவீன வழக்குக்களுள் ஒன்று.
இவ்வாறு ஆண்டன்மை யுடைய வீர ஆடல்களில் ஆசை குறைந்து
ஆடவர் பெண்மையை அவாவி நிற்பது புது நாகரிகக் கோரங்களுள்
ஒன்றென்பது அறிந்தோர் கருத்து. 6