983.



அந்தம்மில வாமிறை செய்யவு மன்ப னார்தாம்
முந்தைதம்முறை மைப்பணி முட்டலர் செய்து
                                வந்தார்;
தந்தம்பெரு மைக்கள வாகிய சார்பி னிற்கும்
எந்தம்பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார்?   16

     983. (இ-ள்.) வெளிப்படை. முடிவில்லாதனவாகிய
கொடுமைகளைச்செய்யவும், அன்பனார், தாம் செய்துவந்த முன்னை
முறைமையாகிய சந்தனத்திருப்பணியை வழுவாமற் செய்து வந்தனர்;
தங்கள் தங்கள் பெருமைக்களவாகிய சார்பிலே ஒழுகி நிற்கின்ற
எந்தமது பெருமக்களை அவர்களது நல்லொழுக்கத்தினிற்
செல்லாமல் தடுக்கவல்லவர் யாவர்? 16

     983. (வி-ரை.) அந்தம் இலவாம் மிறை - மிறை -
கொடுமைகள். "வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைக
ளெல்லாம்" (137), "மிண்டாய செய்கை" (141) என்ற திருநாவுக்கரசு
சுவாமிகள் புராணம் காண்க. "பெருமிறை" (குறள் -847) என்றதற்கு,
மிக்க வருத்தம் - பொறுத்தற்கரிய துன்பம் - என்று பரிமேலழகர்
உரைத்தது காண்க. அந்தம்இல - அவ்வகைப் பெருங்கொடுமைகள்
அளவில்லாதன. மிறை என்றது அவற்றின் பெருந்துன்பமும்,
அந்தம் இல
என்றது அவற்றின் பெருந்தொகையும் குறித்தன.
இவை மூர்த்தியாரது உலக வாழ்க்கை நிலையைப்பற்றிச்
செய்யப்பட்டன. இவை பொருள் வருவாயைத் தடுத்தல், கொள்ளும்
பண்டம் பெறாமற் செய்தல் முதலியன.

     மிறை செய்யவும் - பணிமுட்டலர் செய்துவந்தார் -
உலகவாழ்வில் வருவாய் முட்டுப்பாடு வறுமை - சோர்வு முதலாயின
நேர்ந்தனவாயினும், உயிரின் நல்வாழ்வுபற்றிய திருப்பணியை
ஒருவாற்றானும் தவிர்தலின்றி நியதியாகச் செய்து வந்தனர். உம்மை
- உயர்வு சிறப்பு.

     முந்தை முறைமைப்பணி - 977ல் உரைத்த திருப்பணி.
முந்தை - முன்னாளில் என்பது காலத்தையும், முறைமை என்பது
செய்யும் திறத்தையும் குறித்தன.

     அன்பனார் - மிறை செய்யினும் பணி முட்டாது செய்வதற்கு
அவரது "மூளும் அன்பே" காரணமாம் என்று குறிக்க
இத்தன்மையாற் கூறினார்.

     செய்துவந்தார் - வருநாள்போலவே பலநாளும் முட்டின்றிச்
செய்தல் குறித்தது.

     தந்தம்......வல்லார்? - இது கவிகூற்று. தந்தம் பெருமைக்கு
அளவாகிய சார்பு - தத்தமது பெருமைக் கேற்றபடி பெரியோர்
விடாப்பிடியாகப் பற்றும் பெரும்பற்று. சார்பு - எது வரினும்
விடாதுபற்றும் பற்றுக்கோடு. "சார்புணர்ந்து" (திருக்குறள் - 359)
என்றதனுட் போந்த பொருள்கள் காண்க. 39, 346, 361, 469ல்
உரைத்தவையும், "தாள் மெய்ப்பற்றெனப் பற்றி விடாத விருப்பின்
மிக்கார்" (975) என்றதும் காண்க. நிற்கும் - நிலைபெற்று நிற்கின்ற.

     எந்தம் பெருமக்கள் - அவர்களது திருவடிச் சார்புபற்றித்,
தாம் நிற்கின்ற உரிமை பாராட்டி எந்தம் என்றார். பெருமக்கள் -
மக்களிற் சிறந்தோர். "நீடலங்காரத்தெம்பெரு மக்க ணெஞ்சினு
ணிறைந்துநின் றானை" (சேந்தனார் - திருவீழி - 12) என்ற
திருவிசைப்பாவும் காண்க. தடுக்கவல்லார் யாவர்? ஒருவருமிலர்
என்க. வினா எதிர்மறைப் பொருளுணர்த்தியது. தடுத்தல் - தமது
சார்பில் நிற்கவொட்டாது தடுத்தல். 16