988.



கல்லின் புறந் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி
செல்லும்பரப் பெங்கணு மென்பு திறந்து மூளை
புல்லும்படி கண்டுபொ றுத்திலர் தம்பி ரானார்;
அல்லின்கணெ ழுந்தது வந்தருள் செய்த வாக்கு,  21

     988. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு கல்லின்மேல் தேய்த்த
முழங்கையானது இரத்தம் சொரிந்து, தேய்த்துச் செல்லும்
இடமெங்கும் எலும்பு திறந்து அதனுள் இருக்கும் மூளைப்பகுதியும்,
பொருந்தக்கண்டு தம் பெருமானாகிய சிவபெருமான் தரித்திலர்;
அந்த இராத்திரியிலே எழுந்ததாகிய அவரது அருளினைச் செய்த
திருவாக்கு. 21

     988. (வி-ரை.) கல்லின்புறம் - கல் - "வட்டந்திகழ்பாறை"
என்று மேற்பாட்டிற் கூறிய சந்தனம் அரைக்கும் கல். புறம் - மேல்.
ஏழுனுருபு.

     சோரிகலுழ்ந்து என்க. கலுழ்தல் - பெருகி வெளியிற்
சொரிதல்.

     செல்லும் பரப்பு - தேய்த்த கை பரவிச் செல்கின்ற இடம்.

     என்புதிறந்து மூளை புல்லும்படி - முழங்கையினுள்
தட்டையாகிய நீண்ட இரண்டு எலும்புகள் உண்டு. அவை உள்
துளையுடையனவாகிய மெல்லிய குழாய் போன்ற அமைப்புடையன.
அத்துளைக்குள் மூளைச் சத்தாகிய மெல்லிய நுண்ணிய நரம்புத்
தன்மையுடைய உடற்கூறு நிரம்பியிருக்கும். அதனை உள்ளே
வைத்துப் பொதிந்து காக்கும்பொருட்டு, மூளையைத் தலைமண்டை
எலும்பு ஓடு காவல் செய்வது போல, அமைந்துள்ளன இவ்வெலும்புக்
குழாய்கள். எலும்புகளின் மேற்பாகமான கடினமாகிய வெள்ளியபகுதி
தேய்ந்தால் குழாய் திறக்கப்பட்டு உள்ளிருக்கும் மூளைப்பகுதி
வெளிப்படும். அவ்வாறு மெல்லிய எலும்பு தேய்ந்து வாய்திறந்து
உள்ளிருக்கும் மூளைச் சத்து வெளித்தோற்றித் தேயும்படி என்க.

     பொறுத்திலர் தம்பிரானார் - "தரித்திலர் தேவதேவர்"
(826), "தரிப்பரேயவள் தனிப்பெருங் கணவர்" (திருக்குறிப்பு - புரா -
57) முதலியவை காண்க. யான் என்றும், எனது என்றும் உள்ள
அகங்கார மமகாரங்களாகிய பற்றுக்கள் ஒரு சிறிதேனும்
உள்ளவரையில் பொறுத்துப் பார்ப்பதும், அவை முற்றும்விட்டு
ஒழிந்து உடற்பற்றும் உயிர்ப்பற்றும் அறவே நீங்கியபோது
பொறுக்காமல் வெளிப்பட்டு அருளுதலும் இறைவனுடைய
அருளின்றிறம். "அற்றது பற்றெனில் உற்றது வீடு" என்பது
பழையமொழி. (வீடு என்பது திருவருள் வியாபகத்தில் தாடலைபோல்
அடங்கி நிற்றல்). பயனிலை முன்வந்தது. விரைவு குறித்தது.

     அருள்செய்த வாக்கு எழுந்தது என்க. வாக்கின்றிறம்
வரும்பாட்டிற் கூறுகின்றார். அருள்செய்த - மூர்த்தியாருக்கு
அருளைப்புரிந்த. உவந்து அருள்செய்த என்றலுமாம். இறைவனது
அருவத் திருமேனியாகிய எங்கும் நிறைந்த ஞானாகாயத்தினிடமாக
மூர்த்தியார் கேட்கும்படி எழுந்தது என்றபடி. 401, 436, 465, 597.
598, 923, 965 முதலியவையும், இன்னும் இவ்வாறு வருவனவும்
பார்க்க.

     வந்து எழுந்தது - அரிவாட்டாயனாருக்கு நிலத்தின்
பிளப்பாகிய கமரினின்றும் திருக்குறிப்புத் தொண்டனாருக்குக் கந்தை
புடைத்திட ஏற்றுகின்ற கற்பாறையினின்றும், கண்ணப்பனாருக்குச்
சிவலிங்கத்தினின்றும் இறைவருடைய அருளும் திருக்கை
வெளிப்பட்டருளியதுபோல், இங்கு வாக்கு எழுந்து அருளியது
என்பதாம். எழுந்த (தாகிய) வாக்கு (988) - என்ன (989) -
இவ்வண்ணம் எழுந்தது கேட்டு, ஒழிந்திட - ஊறுநீங்கி - நிரம்பின;
மூர்த்தியார் - ஒளி எய்தினர் (990) என்று கூட்டி முடித்துக்கொள்க.
எழுந்தது - வினையாலணையும் பெயர். 21