பாடல் எண் :3603

பழுது தீர்ப்பார் திருத்தொண்டர் பரவி விண்ணப் பஞ்செய்து
தொழுது போந்து மடம்புகுந்து தூய பணிசெய் யப்பெறா
தழுது கங்கு லவர்துயிலக் கனவி லகில லோகங்கண்
முழுது மளித்த முதல்வனார் முன்னின் றருளிச் செய்கின்றார்,
12
(இ-ள்.) பழுது....துயில - குற்றத்தினைப் போக்குவாராகித் திருத்தொண்டர் முன் கூறியவாறு துதித்து விண்ணப்பஞ் செய்து வணங்கிப் போய்த் தமது திருமடத்தினுள்ளே புகுந்து துய்மையாக்கும் திருப்பணியினைச் செய்யப் பெறாமையினாலே அழுது அன்று இரவு அவர் துயில்கொள்ள; கனவில் - அவரது கனவிலே; அகில.... அருளிச்செய்கின்றார் - எல்லா உலகங்களையும் முற்றும் காக்கின்ற முதல்வராகிய சிவபெருமான் அவர் முன்னே தோன்றி நின்று அருளிச் செய்கின்றாராகி,
(வி-ரை.) பழுது தீர்ப்பார் - விண்ணப்பஞ் செய்து என்று கூட்டுக; இறைவர்பால் விண்ணப்பஞ் செய்தலே பழுது தீர்க்கும் வழியாம் என்று கண்டு அதனைச் செய்து; தீர்ப்பார் - தீரும் வழியினைத் தேடுவார். தூயபணி செய்யப் பெறாது அழுது - தாம் செய்யும் பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்து பணிசெய்ய இயலாதபோது பெரிதும் வருந்துவது அடியார் தன்மை. அவர்கள் இதுவேயன்றி வேறு வருத்தம் அறியார்; உலகர் பல துறையிலும் காணும் பாசஅழுகை அவர்பால் நிகழாது; இவ்வாறே சமணச் சார்புடைய மன்னன் தமது சந்தனப் பணியை முட்டுப்படுத்தியபோது மூர்த்தி நாயனார் சிந்தை நொந்து ‘இப்பாதகன் மாய்ந்திட இப்புவி திருநீற்று நெறிநிற்கும் மன்னரைச் சார்வது எப்போது?’ என்று இறைவரை வேண்டிய வரலாறும், பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன.
அகில லோகங்கள் முழுதும் அளித்த முதல்வனார் - அகிலம் - என்றதனால் அண்டங்களின் எண்ணிக்கை முற்றும் என்பதும், முழுதும் என்றதனால் அவற்றிற்செல்லும் ஆணைவகைகள் முற்றும் என்பதும் பெறவைத்தார்; எல்லாவுலகங்களிலும் எல்லா ஆணையும் என்க.
அளித்தல் - இங்கு ஆக்குதலும் காத்தலும் குறித்தது. "நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான், நெறியில் வழுவில் நெருஞ்சில்முட் பாயும்" (திருமந்) என்றபடி முருட்டு அமணர்களை அளித்தவரும் சிவநெறியினை வகுத்தவரும் அவ்விறைவரே; ஆயின், உயிர்களின் பக்குவ நிலைக்கேற்பக் கன்மானுபவத்தின்பொருட்டுப் படைக்கப்பட்ட புறச்சமயங்கள் தம்மளவினைத் தவறி மீறிக்கேடுவிளைக்கும்போது அவற்றை ஆக்கிய அவரே அவற்றை முறை செய்வர் என்பது தெளிவிக்க இங்கு "முழுதும் அளித்த" என்ற தன்மையாற் கூறினார்.
முன்னின்று - தாமாந்தன்மை அறிய வெளிப்பட்டு எழுந்தருளி; முன்னிற்றல் - மறைந்த நிலையினின்றும் வெளிப்படுதல்; நீங்கி - (3604) என்றது மிவ்வாறே வெளிப்பட்ட நிலையினின்றும் மறைதல் குறித்தது.
அருளிச் செய்கின்றார் - முற்றெச்சம். அருளிச் செய்கின்றாராய் - என்றருளி என மேல்வரும் பாட்டின் எச்சவினையுடன் இயைக்க.