பக்கம் எண் :

நரி பரியாக்கிய படலம்253



பூட்டியருட் பாசமிரு பாதம் பொறித்துடலிற்
கூட்டி யடியாரு ளகப்படுத்தாட் கொண்டருமை
காட்டியவோ வின்றென்னைக் கைவிட்டாய் வெய்யரெனை
ஆட்டி யொறுக்குமிடத் தாரேன்று கொள்வாரே.

     (இ - ள்.) அருள்பாசம் பூட்டி - அருளாகிய பாசத்தாற் பிணித்து,
உடலில் இருபாதம் பொறித்து - முடியின்கண் இரண்டு திருவடிகளையும்
பொறித்து, அடியாருள் கூட்டி அகப்படுத்து - அடியாருள் ஒருவனாகக்கூட்டி
அகப்படுத்தி, ஆட்கொண்டு அருமை காட்டியவோ - ஆட்கொண்டு
நிதருமையைக் காட்டியவனே, இன்று என்னைக் கைவிட்டாய் - இப்பொழுது
அடியேனைக்கைவிட்டனை; வெய்யர் -கொடிய இத்தண்டலாளர், எனை
ஆட்டி ஒறுக்குமிடத்து - என்னைத் துன்புறுத்தித் தண்டிக்குங் காலத்து,
என்று கொள்வார் ஆர் - தாங்குபவர் யாவர்.

     உடல் தலைக்கு ஆகுபெயர்.

"விச்சைதா னிதுவொப்ப துண்டோ கேட்கின்
மிகுகாத லடியார்தம் மடிய னாக்கி
அச்சந்தீர்த் தாட்கொண்டா னமுத மூறி
யகநெகவே புகுந்தாண்டா னன்பு கூர

என அடிகள் திருவாசகத்தில அருளிச்செய்தல் இங்கே சிந்திக்கற்பாலது.
(23)

ஊரா ருனைச்சிரிப்ப தோராயென் றுன்னடிமைக்
காரா யடியே னயர்வே னஃதறிந்தும்
வாரா யரசன் றமரிழைக்கும் வன்கண்ணோய்
பாராயுன் றன்மை யிதுவோ பரமேட்டி.

     (இ - ள்.) ஊரார் உனைச்சிரிப்பது ஓராய் என்று - ஊரிலுள்ளார்
உன்னை எள்ளி நகையாடுதலை அறியாமலிருக்கின்றாய் என்று கருதி, உன்
அடிமைக்கு ஆராய் - உன் அடிமைக்கு ஆராகியோ (அடியார் போன்று),
அடியேன் அயர்வேன் - அடியேன் அயர்கின்றேன்; அஃது அறிந்தும்
வாராய் - அதனை நீ அறிந்து வைத்தும் வந்தருளினாயல்லை; அரசன் தமர்
இழைக்கும் வன்கண் நோய் பாராய் - மன்னனுடைய ஏவலாளர் செய்யுங்
கொடிய துன்பத்தினைப் பார்த்தருளினாயல்லை; பரமேட்டி உன் தன்மை
இதுவோ - பரமேட்டியே உனது தன்மை இதுவோ.

"ஏசா நிற்ப ரென்னையுனக் கடியா னென்று பிறரெல்லாம்
பேசா நிற்ப ரியான்றானும் பேணா நிற்பே னின்னருளே"

"தெருளார் கூட்டம் காட்டாயேற் செத்தே போனாற் சிரியாரோ"

என்னும் திருவாசகப்பகுதிகள் இங்கே சிந்திக்கற்பாலன. உன் கருணை
யிருந்தவா றிதுவோ என்றார். பரமேட்டி - பரமன். (24)