பக்கம் எண் :

82திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



இருபத்து நான்காவது கான்மாறியாடின படலம்

[அறுசீரடியாசிரிய விருத்தம்]
திருத்த ராய்மது ராபுரி மேவிய
     சித்தரா கியசெல்வர்
விருத்த ராயிளை யவருமாய் மழவுமாய்
     வேடங்கொண் டடலேற்றின்
ஒருத்த ராய்விளை யாடிய வாடலை
     யுரைத்தன மினிமன்றுள்
நிருத்த ராயவர் மாறிநின் றாடிய
     நிலைசிறி துரைசெய்வாம்.

     (இ - ள்.) திருத்தராய் மதுராபுரி மேவயி சித்தராகிய செல்வர் -
நின்மலராய் மதுரை யம்பதியில் எழுந்தருளிய எல்லாம்வல்ல சித்தரான
அருட் செல்வத்தையுடைய சோமசுந்தரக் கடவுள், விருத்தராய்
இளையவருமாய் மழவுமாய் வேடம் கொண்டு - கிழவனாகியும் காளை
யாகியும்குழவியாகியும் (உள்ள) திருவேடங்களைக் கொண்டு - அடல்
ஏற்றின் ஒருத்தராய் - (பின்பு) வெற்றியையுடைய இடபவூர்தியின்மேல்
ஒருவராய் நின்று, விளையாடிய ஆடலை உரைத்தனம் - விளையாடிய
திருவிளையாடலைக் கூறினாம்; இனி மன்றுள் நிருத்தராயவர் மாறி
நின்று ஆடிய நிலை சிறிது உரை செய்வாம் - இனி வெள்ளியம்பலத்தில்
நிருத்தராகிய பெருமான் கான்மாறியாடியருளிய திருவிளையாடலைச்
சிறிது கூறுவாம்.

     உம்மைகள் எச்சப் பொருளன. விருத்தர் முதலிய மூவுருவங்
கொண்டவரே பின்பு ஒருத்தராயும் நின்று விளையாடினா ரென்க.
ஆயவர் : முதல் வேற்றுமைச் சொல். (1)

வேந்தன் மீனவன் கொடியவ* னாகிய
     விக்கிர மன்றன்றோள்
ஏந்து மண்பொறை யிராசசே கரன்புயத்
     திறக்கியைந் தருநாடன்
பூந்தண் மாமலர் வேதியன் மாதவன்
     புரத்தின்மேற் பொலிந்தோங்குஞ்
சாந்த நீறெச் சண்ணித்த புண்ணியத்
     தனிமுத னகர்சார்ந்தான்.

     (பா - ம்.) * மீனவண் கொடியவ.