I


திருநகரச் சிறப்பு103



என்பவாகலின், 'கட்புலனாதி யைந்து முவப்புற' என்றார். உவர்ப்பற என்பது
பாடமாயின் வெறுப்பின்றாக எனப் பொருளுரைத்துக் கொள்க. அமுது -
தேவருண்டியும், மோக்கமும் ஆம். மோக்கவுலகமும் கைத்தலை,

"தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு"

என்பதனா லுணர்க. அமுதுங் கைப்ப என்றது, பொதுவகையால்
அவரளிக்கும் இன்பத்தின் சிறப்புக் கூறியவாறு. 'பெருங்குலக் கற்பினார்
போல் நட்பிடைப்படுத்தி' என்றது மேலாயினாரையும் அவர் தம் வயமாக்கும்
இயல்பு கூறியவடி. உம்மைகள் உயர்வு சிறப்பு. பெட்பம் என்பதில் அம் :
பகுதிப் பொருள் விகுதி; சாரியையுமாம். ஆல் : அசை. (53)

                வேளாளர் வீதி
வழுக்கறு வாய்மை மாண்புங் கங்கைதன் மரபின் வந்த
விழுக்குடிப் பிறப்பு மூவ ரேவிய வினைகேட் டாற்றும்
ஒழுக்கமு மமைச்சாய் வேந்தர்க் குறுதிசூழ் வினையுங் குன்றா
இழுக்கறு மேழிச் செல்வர் வளமறு கியம்ப லுற்றாம்.

     (இ - ள்.) வழுக்கு அறு வாய்மை மாண்பும் - தவறில்லாத
வாய்மையின் மாட்சியும், கங்கைதன் மரபின் வந்த - கங்கையின்
குலத்திற்றோன்றிய, விழுக்குடிப் பிறப்பும் - சீரிய குடிப்பிறப்பும், மூவர்
ஏவிய வினைகேட்டு ஆற்றும் ஒழுக்கமும் - மூவர்கள் கூறிய வினைகளைக்
கேட்டு முடிக்கின்ற ஒழுக்கமும், வேந்தர்க்கு - அரசருக்கு, அமைச்சாய் -
மந்திரியாய், உறுதி சூழ்வினையும் - ஆவன ஆராயும் வினையும், குன்றா -
குறையாத, இழுக்கு அறும் - கோழைபடாத, மேழிச் செல்வர் - மேழியால்
வருஞ் செல்வத்தையுடைய வேளாளரின், மறுகுவளம் - வீதியின்
வளப்பங்களை, இயம்பல் உற்றாம் - சொல்லத் தொடங்கினோம் எ - று.

     வேளாளர் வாய்மையிற் சிறந்தாராதலை,

"மாறுகொடு பழையனூர் நீலி செய்த
     வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள்
கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக்
     குழியிலெழு பதுபேரு முழுகிக் கங்கை
அறணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்ப
     ரண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை யெம்மாற்
     பிரித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ"

எனச் சேக்கிழார் புராணத்துக் கூறப்பட்ட வரலாற்றானறிக. அவர் கங்கை
குலத்தினராதலை,

"பரப்புநீர்க் காவிரி பாவைதன் புதல்வர்"