I


திருநகரச் சிறப்பு107



விலை கூறுமிடத்து இலாபத்தை வெளிப்படையாகச் சொல்லுதலுங் கொள்க.
'பல் பண்டம் பகர்ந்து வீசும்' என்னும் பட்டினப்பாலையடிக்கு
நச்சினார்க்கினியர் இப்பொருள் கூறியிருத்தல் காண்க.

"எப்பொரு ளாயினு மல்ல தில்லெனின்
அப்பொரு ளல்லாப் பிறிதுபொருள் கூறல்"

"அப்பொருள் கூறிற் சுட்டிக் கூறல்"

என்னும் தொல்காப்பியச் சூத்திரங்களும், அவற்றின் உரைகளும் நோக்கி
அவற்றோ டிதனிடையுள்ள ஒற்றுமை வேற்றுமை காணற் பாலன. உம்மை :
எச்சப்பொருட்டு. (58)

            [கலிநிலைத்துறை]
நீல வேதிமேற் பளிங்கினா னிழற்சுவர் நிறீஇமின்
கால வாலிய வைரவாட் கானிரைத் தும்பர்க்
கோல வானிலாச் *சொரிமணி குயிற்றிவெண் மாடம்
மாலை போல்வகுத் தியற்றின பீடிகை மறுகு.

     (இ - ள்.) பீடிகை மறுகு- கடை வீதிகளில், நீலவேதிமேல் - நீல
மணியாலாகிய திண்ணையின்மேல், நிழல் பளிங்கினால் சுவர் நிறீஇ - ஒளி
பொருந்திய பளிங்கினாற் சுவரை நிறுத்தி, வாலியவாள் - வெள்ளிய
ஒளியினையுடைய, வைரக்கால் - வைரத்தூண்களை, மின்கால - ஒளிவீச,
நிரைத்து - வரிசையாக நட்டு, உம்பர் - மேலிடத்தில், கோலம் - அழகிய,
வால்நிலாச் சொரிமணி - வெள்ளிய நிலாவைப் பொழிகின்ற சந்திரகாந்தக்
கற்களை, குயிற்றி - பதித்து, மாலைபோல் - மலர் மாலையைப்போல்,
வெண்மாடம் வகுத்து இயற்றின - வெள்ளிய மாடங்கள் வரிசையாக
அமைத்துக் கட்டப்பட்டன எ - று.

     இயற்றின : படுசொல் தொக்குநின்ற செயப்பாட்டுவினை. (59)

திரைய ளிப்பவுந் திரைபடு தீம்புனல் வேலிக்
கரைய ளிப்பவுங் கரையிலா னிரை+படு கானத்
தரைய ளிப்பவுந் தரைகிழித் தூன்றிவிண் டாங்கும்
வரைய ளிப்பவும் வாங்கிவாய் மடுப்பன மாடம்.

     (இ - ள்.) மாடம் - பண்டசாலைகள், திரை அளிப்பவும் - கடல்
தரும் பொருள்களையம், திரைபடு தீம்புனல் வேலி - அலைகளையுடைய
இனிய நீரினை வேலியாகவுடைய, கரை அளிப்பவும் - மருத நிலம் தரும்
பொருள்களையும், கரை இல் - அளவில்லாத, ஆன் நிரைபடு - பசு
மந்தைகளையுடைய, கானத்தரை அளிப்பவும் - முல்லை நிலம் தரும்
பொருள்களையும், தரை கிழித்து - புவியைப் பிளந்து, விண் ஊன்றி
தாங்கும் - வானத்தை ஊன்றித் தாங்குகின்ற, வரை அளிப்பவும் - மலை
தரும் பொருள்களையும், வாங்கி வாய்மடுப்பன - வாங்கித் தம்மிடத்து
நிறைப்பன எ - று.


     (பா - ம்.) * வாணிலாச். +கரையிலா நிரை.