I


170திருவிளையாடற் புராணம் [மதுரைக் காண்டம்]



அகளமா யுலகமெல்லா மொடுக்கியந் நெறியே யார்க்கும்
நிகளமாம்* விருத்தி தோன்ற நினைவற நினைந்து நிற்குந்
துகளிலா வறிவா னந்தச் சுந்தரச் சோதி மேனாட்
சகளமா முருவங் கொண்டு தானொரு விளையாட் டாலே.

     (இ - ள்.) அகளம் ஆய் - நிட்களமாய், உலகம் எல்லாம் ஒடுக்கி -
உலகமனைத்தையும் தன்னுள்ளே ஒடுக்கி, அந்நெறியே - அவ்வொடுக்கிய
முறையாகவே, யார்க்கும் நிகளம் ஆம் விருத்தி தோன்ற - எவர்க்கும்
பாசமாகிய விருத்தி தோன்றுமாறு, நினைவற நினைந்து நிற்கும் - நினைவற
நினைந்து நிற்கின்ற, துகள் இலா - குற்றமில்லாத, அறிவு ஆனந்தச் சுந்தரச்
சோதி - ஞானானந்த ஒளிவடிவாகிய சோம சுந்தரக் கடவுள், மேல் நாள் -
முன்னொரு நாளில், சகளம் ஆம் உருவம் கொண்டு - சகளமாகிய வடிவங்
கொண்டு, ஒரு விளையாட்டால் - ஒரு திருவிளையாட்டினால் எ - று.

     அகளம் - நிட்களம்; அருவமாகிய சிவம், மாயைக்கு ஆதாரமாய்
நிற்றலின் தன்னுள்ளே யொடுக்கி யெனப்பட்டது; மாயையில் ஒடுக்கி
யென்னலுமாம். நிகளம் - தளை; பாசபந்தம். விருத்தி - வியாபாரம்.
நினைவற நினைதல் - சத்தியாற் சங்கற்பித்தல். உயிர்களின் அறிவும்
இன்பமும் துகளுடையன. சகளம் - உருவமுடைத்தாதல்.

"அகளமா யாரு மறிவரி தப்பொருள்
சகளமாய் வந்ததென் றுந்தீபற"

என்பது காண்க. (3)

முக்கண னரவப் பூண நூலினன் முகிழ்வெண் டிங்கட்
செக்கரஞ் சடையான சூல கபாலத்தன் செங்க ணேற்றன்
மைக்கருங் கயலுண் கண்ணி வாமத்தன் முன்னும் பின்னும்
பக்கமு நந்தி யாதி கணாதிபர் பரவிச் சூழ.

     (இ - ள்.) முக்கணண் மூன்று கண்களையுடையவனும், அரவப் பூண
நூலினன் - பாம்பாகிய பூணூலையுடையவனும், முகிழ வெண் திங்கள் -
அரும்பிய வெள்ளிய பிறைச்சந்திரனை அணிந்த, செக்கர் அம் சடையான் -
செவ்வானம் போலும் அழகிய சடையை உடையவனும், சூல கபாலத்தன் -
சூலத்தையும் கபாலத்தையு முடையவனும், செங்கண் ஏற்றன் - சிவந்த
கண்களையுடைய இடபத்தையுடையவனும், மை உண் கயல் கருங் கண்ணி -
மை உண்ட கயல் போலும் கரிய கண்களையுடைய உமையம்மையை,
வாமத்தன் - இடப் பாகத்திலுள்ளவனுமாகிய இறைவன், நந்தி ஆதி கண
அதிபர் - நந்தி முதலிய கணத்தலைவர்கள், முன்னும் பின்னும் பக்கமும்
பரவிச் சூழ - முன்னும் பின்னும் பக்கமுமாகிய எங்கும் சூழ்ந்து துதிக்க
எ - று.

     பூண நூல், அ : அசை. மையுண்ட வென்க. பக்கமும் இரு மருங்கும்.
கணாதிபர் : வடமொழி நெடிற் சந்தி. (4)


     (பா - ம்.) * நிகளமாய்.